Tuesday, December 6, 2011

நானும் சமூக சேவகன் தான்

நான் புகை பிடிக்கிறேன்
ஆயிரக்கணக்கான
புகைப்பிடித் தொழிலாளர்களின்
வாழ்கை
புகைந்து விடக் கூடாது
என்பதற்காக..!

என் நுரையீரல்
கெட்டுப்போனது..
அதனால் என்ன?
எத்தனையோ மருத்துவர்கள்
என்னால் பிழைக்கிறார்கள்..

ஒரு நாள் நானும்
செத்துப்போனேன்
அதனால் என்ன?
நானும் சமூக சேவகன் தான்.

Sunday, October 30, 2011

--இப்படிக்கு மழை.


''அப்பாடா..தண்ணி கஷ்டம் தீந்தது..''
பெண்ணொருத்தி..!

''பட்டாசு வியாபாரம் பாழாப்போச்சு''
வியாபாரியொருவன்..!

''ஒரே சேறு,சகதி..வீதில கால் வைக்க முடில..''
நடைபயணியொருவன்..!

''ஒரே தண்ணியா,கசகசன்னு..கருமம் புடிச்சது''
இருசக்கர வாகனன்..!

''இப்பவாவது பேஞ்சு என் வயித்துல பால வாத்த.''.
விவசாயியொருவன்!

''பட்டாசு வெடிக்க முடியல''
''இந்த பாழாப்போன மழையால..''
வேறு சிலர்...!

''வெயில் சூடு தணிஞ்சு நல்லாருக்கு..''
அதிலும் சிலர்..!

'பேய் மழை..பிசாசு மழை' என்றான்
செய்தி வாசிப்பவன்..!

போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே..!

--இப்படிக்கு மழை.

Tuesday, August 23, 2011

அமெரிக்காவின் அஅஅ...அஅ+... (USAAA To USAA+)


- BHARATHIRAJA


AAA to AA+? அதென்ன பொருளியலில் ABCD? அதற்குப் பெயர் நாணய நிலைத் தரவரிசை (CREDIT RATING). அப்டின்னா? ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் நாணயத் தன்மை. அப்டின்னா? வேறொன்றுமில்லை - ஒருவரின் கடனைத் திருப்பிக் கட்டும் ஆற்றல். தனி மனிதர்களுக்கு வித விதமாகக் கடன் அட்டை (CREDIT CARD) கொடுக்கிறார்களே அது போல. டைட்டானியம் அட்டை, பிளாட்டினம் அட்டை, தங்க நிற அட்டை, வெள்ளி நிற அட்டை என்கிறார்களே அப்படி. ஆண்டுக்கு இருபது இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவருக்கு டைட்டானியம் அட்டை. பதினைந்து இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்போருக்கு பிளாட்டினம் அட்டை. பத்து இலட்சத்துக்கு மேல் என்றால் தங்க நிற அட்டை. அதற்கும் கீழ் உள்ளோருக்கு வெள்ளி நிற அட்டை. இதெல்லாம் நமக்கு வங்கிகள் வைத்திருக்கும் தரவரிசை. அது போலவே நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரவரிசை போடச் சில முகமையகங்கள் (AGENCIES) உள்ளன. மூடி'ஸ் (MOODY'S), ஸ்டேண்டர்ட் & பூவர் (S&P), மற்றும் ஃபிட்ச் (FITCH) ஆகியவை அவற்றுள் சில முக்கியமான முகமையகங்கள். AAA, AA+, AA, AA-, A+, A, A- வில் ஆரம்பித்து D வரை நீள்கிறது இந்தத் தர வரிசை. இங்கே '-' என்பது எதிர்மறை என்றில்லை. அந்த எழுத்துக்குழு வரிசையில் அவற்றுக்குக் குறைவான தரம். அவ்வளவே. எனவே, AA- என்பது A+ வை விட மேல்தான். AAA எல்லோருக்கும் மேலானவர். D என்பவர் டிமிக்கிப் பார்ட்டி (DEFAULTER). B மற்றும் C வரிசை கூட அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இந்த எழுத்துக் குழுக்களின் சேர்ப்பு முறை மட்டும் ஒவ்வொரு முகமையகத்துக்கும் சிற்சிறிது மாறும்.

உலகப் பொருளாதாரம் கண்ட எல்லாச் சரிவுகளையும் மீறி, இந்தத் தர வரிசை போட ஆரம்பித்த நாளில் இருந்து அமெரிக்கா எப்போதுமே AAA வாகவே இருந்திருக்கிறது. மேலே சொன்ன மூவரில் S&P இப்போது அமெரிக்காவை AA+ க்குப் பிடித்துத் தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இப்படியே போனால் பிற்காலத்தில் AA ஆனாலும் ஆகலாம் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறது. மூடி'ஸ் மற்றும் ஃபிட்ச் இருவரும் அந்த வேலையை இன்னும் செய்ய வில்லை. மூடி'ஸ் இன்னமும் அமெரிக்காவைப் பெரிதாகவே பேசுகிறது. ஃபிட்ச் என்கிறவர்கள், "நாங்கள் முழுதாக எங்கள் ஆய்வை முடிக்கவில்லை!" என்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் அவர்களும் கீழே பிடித்துத் தள்ளலாம் என்பதே. இந்தத் தர வரிசையைக் கொடுத்தபோது, S&P அமெரிக்காவைக் கொஞ்சம் திட்டவும் செய்திருக்கிறது. எப்படி? "உன்னிடம் நிலைப்புத் தன்மை இல்லை, செயலுறுதி இல்லை, உன்னைக் கணிக்கவும் முடியவில்லை!" என்று. நம்ம பேச்சில் சொன்னால், அதை எப்படிச் சொல்லலாம்? "நண்பர்களே... உறவினர்களே... சுற்றத்தாரே... இந்த ஆளை இது வரை நம்பியது போல் நம்பாதீர்கள். இவனிடம் அதிகமாகப் பணத்தைக் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. அவர்களிடம் எதுவும் வாங்கினால் சொன்ன விலைக்கே வாங்கி விடாதீர்கள். அவர்களுடைய மதிப்பு அது அல்ல. பாதி விலைக்குக் கேட்டாலும் வழிக்கு வருவார்கள். விபரமாக இருந்து கொள்ளுங்கள்!". அத்தோடு நிறுத்தாமல், கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இதைச் சரி செய்யவும் இவர்களிடம் சரியான திட்டங்கள் இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

சரி. இது ஏன் இப்படி ஆனது? ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்மைப் போன்றோருக்கு இது புதிதில்லை. ஆனால் அவர்களுக்கு? கூடவே கூடாது. அவர்கள் உலகப் பணக்காரர்கள். உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்கள்தாம் உலகின் தலைசிறந்த வல்லரசு. அப்புறம் ஏன் ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதி நிலை அறிக்கை? அவர்கள் சக்திக்கு மீறிச் செலவழித்து விட்டார்கள். செலவும் செய்து அழித்தும் விட்டார்கள். எங்கு போய்ச் செலவழித்தார்கள்? போர்களில், ஆயுதங்கள் தயாரிப்பதில், மேலும் பல வேண்டாத வேலைகளில்! அவர்களுடைய போர்கள் வேண்டாத வேலைகளா? தவிர்த்திருக்கவே முடியாதவையா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சரியாகத் தெரியவில்லை. ஆனால், என் இரண்டு செண்ட் அறிவு சொல்கிறது - இராக் போரைத் தவிர்த்திருக்க முடியும் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்? உடனடியாக மனதுக்கு வருவது இன்னொரு பொருளியல்ச் சரிவு. பொருளியல்ப் பெருவளர்ச்சிகளும் சரிவுகளும் வளர்பிறை தேய்பிறை போல வர ஆரம்பித்து விட்டன இப்போது. ஆனாலும் நிறையப் பேருக்கு சேமிப்பின் மதிப்பு தெரியவில்லை. வளர்ச்சியில் கிளர்ச்சி செய்கிறார்கள். சரிவில் சங்கூதுகிறார்கள். இப்போதைய தேவை - சிந்தனையிலும் செயலிலும் பொருளியல்ப் பழமைவாதம். பொறுமை காக்க வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். ஒன்றுக்குமாகாத வெற்றுத் தாளைக் கூட வேண்டாததா என்று இரண்டு முறை கேட்டுவிட்டுப் போட வேண்டும். பீதி கூடக் கூட இங்கு முதலீடு செய்திருக்கும் மற்ற நாட்டுக் காரர்கள் எல்லோரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலை தப்பினால் போதும் என்று ஓடப் பார்ப்பார்கள். அவர்களிடம் உட்கார்ந்து சரிக்கட்டுவதிலும் சமாதானப் படுத்துவதிலும் ஏகப்பட்ட நேரம் செலவிட வேண்டும்.

அவர்களுடைய சொந்த மக்களுக்கு என்னவாகும்? எதற்காக இருந்தாலும் அவர்கள் கூடுதல் வட்டி கட்ட வேண்டி வரும். கூடுதல் வரி கூடக் கட்ட வேண்டி வரும். சொத்துகளின் விலை அனைத்தும் டொமீர் எனக் கீழே விழும். எப்படி? டொமீர் என! வாங்கிய விலைக்கு வீட்டை விற்க முடியாது. பல மடங்கு குறைவாகும். அதற்கும் வாங்க ஆள் வர மாட்டார்கள். மற்ற நாட்டுப் பண மதிப்போடு பார்த்தால் இவர்களின் டாலர் மதிப்பு குறையும். எனவே, அங்கே உட்கார்ந்து குளு குளு குளிர் பானம் அருந்திக் கொண்டிருக்கும் நம் ஒன்னு விட்ட அண்ணன், தம்பி, மச்சான்மார் சிலருக்கும் அடியில் கொஞ்சம் சுடும். ஆனால், எல்லாத்துக்கும் முடிவாக, அவர்கள் பொருளியலில் பல நல்ல திருத்தங்கள் ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள ஆன்றோர்கள். அந்த முடிவு எப்போது? அது எனக்குத் தெரியவில்லை. அந்த ஆன்றோருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். திவாலாகி விட்டோம் என்று எந்த வங்கியும் அரசாங்கத்திடம் உதவி கேட்டுப் போக முடியாது. ஏன்? அரசாங்கம் கடுப்பாகி விடும். "அடப் பரதேசிப் பயபிள்ள... நானே கால் ரெண்டையும் முதலை வாயில குடுத்துட்டு காப்பாத்த ஆளில்லாம கத்திக்கிட்டு - முக்கிக்கிட்டு இருக்கேன். இதுல நீ வேறயா?" என்று கையில் கிடைத்ததைக் கொண்டு மூஞ்சியில் வீசும்.

இதற்கு ஒபாமா எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா? "எந்த ஏஜென்சி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள். நாம் எப்போதுமே AAA தான்!". ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சுருக்கம் என்னவென்று மறந்து விட்டது போல அவருக்கு. ஒபாமா சார், நீங்க எப்பவுமே USA, ஆனா AAA இல்ல. இது போன்ற எவ்வளவு பேச்சுகளைக் கேட்டு விட்டோம் நம்ம ஊரில்? இதற்கு மேலெல்லாம் பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே. இது அவர் இரண்டாம் முறை அதிபராகத் தடையாக இருக்குமா? பெரும்பாலும் அப்படித்தான்! அவர் வந்தபோது எவ்வளவு நம்பிக்கை. நோபல் பரிசு கூடக் கொடுத்தார்கள். எல்லாமே வண்ணமயமாக இருந்தது. இன்னைக்கு நிலைமை முழுக்க முழுக்க இருட்டாக ஆனது போல் இருக்கிறது. இப்படியொரு துயர முடிவு நிகழ்ந்திருக்கக் கூடாது பாவம். இது எல்லாமே அவருடைய பிரச்சினையா? இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்தான் பொறுப்பு. அவர்களுடைய மன்மோகன் சிங் ஒருவர் (அதாவது, நல்ல பொருளியலாளர் என்று சொல்ல வந்தேன்!) தலைமை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களுக்கும் நம்ம பிரச்சினைகள் வந்து சேர்ந்து விடக் கூடாது. :)

இதில் இருந்து மற்ற நாடுகளுக்கு என்ன பாடம் இருக்கிறது? நாடுகளுக்கு மட்டுமல்ல... தனி மனிதர்களுக்கும் ஒரு சூப்பர்ப் பாடம் இருக்கிறது. கட்ட முடியாத அளவு கடன் வாங்காதே. வாழப் புது வீடு, போய்வரப் புதுக் கார், பாதுகாப்புக்கு ஆயுதங்கள், வசதிக்கு வார இறுதி ஷாப்பிங், உல்லாசக் களியாட்டங்கள், பொழுதுபோக்குக்குக் கடன்களை வாங்கிக் குவித்தல்... இவை எல்லாமே கொஞ்ச காலம் பொறுக்கலாம். முடிந்ததை விடக் கூடுதலாகச் செலவு செய்து தொலைத்தால், நாணயமற்றவன் என்றொரு பெயர் - அதுவும் அவப்பெயர் வாங்கி மூலையில் உட்கார வேண்டி வரும். அப்புறம் ஒருத்தரும் உதவ வர மாட்டார்கள். வாழ்ந்து கெட்டவனைப் பார்த்து என்ன பேசுவார்கள்? பாவம் என்பதோடு பாவி என்றும் சொல்வார்கள். வேண்டியதெல்லாம் தேவை என்று சொல்லக் கூடாது. வேண்டியது வேறு. தேவை வேறு. பையிலும் கடன் அட்டையிலும் இருந்து ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் போட்டுச் செலவழிக்காவிட்டால், பையும் இராது; அட்டையும் இராது.

இவை எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட வரிகளா? இருக்கலாம். முறையான சட்டதிட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டால், திரும்பவும் பழைய இடத்தைப் பிடிக்கலாம். ஆனால், அவர்களுடைய அறிவாளர்களே சொல்கிறார்கள் - "முடியும், ஆனா முடியாது!" என்று. அதாவது, இப்போதைக்கு முடியாது. காலம் ஆகும். சிலர் சொல்கிறார்கள் - "AAA கிடைக்க வேண்டுமானால் காலம் ஆகலாம். ஆனால், பீதியையும் உடனடிப் பிரச்சினைகளையும் ஓரளவு பரவாயில்லாமல் சமாளிக்கலாம்!" என்று. எல்லாத்துக்கும் மேல் இது ஒரு மானப் பிரச்சினை என்பதுதான் முக்கியம். மற்றபடி, இன்னும் இவர்களுக்குக் கீழ் நூற்றுக்கும் மேலான நாடுகள் இருக்கின்றன. அதை விட முக்கியம் - அவர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மிடம் கூட சில டிப்ஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நாம் எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள இடுகையின் முடிவுக்குச் செல்லுங்கள். :)

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? அவர்கள் மேல் நாம் ரெம்பவும் குதிரை ஏறிக் கொண்டிருப்பதால் நமக்கும் கொஞ்சம் பிரச்சினைதான் என்கிறார்கள் சிலர். அதுவும் உண்மைதான். சமீப காலங்களில் நாம் கொஞ்சம் ஓவராகவே அவர்களோடு கொஞ்சிக் குலாவுகின்றோம். மற்ற நாடுகளைப் போலல்லாமல், எவருடைய பொருளியல்ச் சரிவும் நம்மை எதுவும் செய்யாத அளவுக்கு நம் பொருளியல் பலமானது என்றும் சிலர் சொல்கிறார்கள். வழக்கம் போல், குழப்பத்தில்தான் மாட்டிக் கொள்கிறேன் இதிலும்! நமக்குப் புரிகிற மொழியில் விபரமான ஆள் யாராவது கருத்துரையில் இதை விளக்கினால் கோடி நன்றி கொடுப்பேன் - அரசியல்ப் பாரபட்சம் ஏதும் இல்லாமல் பேச வேண்டும். ஆக, இத்தோடு முடிகிறது கதை.

கூடுதல் விபரமாக, இன்னமும் AAA ஆக இருக்கிற ஆட்கள் யாரென்று பார்ப்போமா? யோக்கியர்கள்... மன்னிக்க... நாணயகாரர்கள் (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா?!)... அதில் 16 பேர் இருக்கிறார்கள். ஐஸ்ல் ஆஃப் மேன் (இதற்கு முன் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை!) எனும் சின்னப் பையன் உட்பட. மீதி 15? ஃபிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, UK, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஃபின்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாண்ட்ஸ், மற்றும் நியூசிலாந்து. வெவ்வேறு பட்டியல்கள் வெவ்வேறு பெயர்கள் கொண்டிருக்கின்றன. எனவே, உறுதியாகத் தெரியவில்லை! இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீனா AA-.

சரி, நம்ம எங்க இருக்கோம்? இந்தியா BBB-. நல்ல வேளப்பா! :)

Wednesday, August 17, 2011

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்...



கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.



திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.



இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:



1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.



2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.



3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.



4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.



5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.



இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.

Thursday, July 7, 2011

தீராத காதல்



மேகம் சூழ்ந்த ஒரு அதிகாலைப்பொழுது. ரயில் நிலையத்தில் எதேச்சையாக நான் கடந்து சென்ற அவளை திரும்பி பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து நின்றேன். எனது முன்னால் காதல் தேவதை . நம்பமுடியாமல் நான் அவளையே பார்க்க அவளிடத்திலும் அதே பாவனை.

தழைய தழைய சேலை கட்டி, தலை நிறைய பூவுடன் தேவதையாக நின்றிருந்தாள் . “நான் கல்யாணம் ஆனா சேலையே காட்ட மாட்டேன் ..பூ வைக்கிறதெல்லாம் சுத்த பட்டிக்காட்டுதனம் ” என்று என்னிடம் அவள் கட்டளையிட்ட காலங்கள் நினைவில் வந்தன .

பேச வராமல் தடுமாறிய அவளின் அருகில் சென்றேன் .. சரியாக நான்கு வருடங்கள் கழித்து அவளின் கண்களை ஊடுருவி பார்த்தேன் .அதில் தடுமாறி நின்றவளிடம் “எப்படி இருக்கிறாய் என் அருமை காதலி ?” என்றேன் .

அவள் அப்படியே பெரிதாக சிரித்துவிட்டாள். “நீ இன்னும் அப்படியே இருக்க. ” என்றாள் .

“நான் இருக்கேன் அப்படியே தான். நீதான் மாறிவிட்டாய் போல ” என்றேன் அவள் கழுத்தை பார்த்தபடி .

“நாலு வருஷம் ஆயிடுச்சுல்ல ” என்றாள். நான் அந்த கயிற்றை பார்த்ததை அவள் விரும்பவில்லை. நான் அதை சட்டை செய்யவில்லை .

“இப்போதும் நீ என் காதலிதான் ” என்றேன் .

நான் அவள் காது மடல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன் .அதில் இருந்த ஜிமிக்கித் தோடு குறுக்கும் மறுக்கும் ஆட ஆட பேசினாள் . அவளின் பெற்றோரை பற்றியும் தன் கணவன் வீட்டை பற்றியும் கடந்து போன 4 வருடங்களை நான்கு வரிகளில்
அடக்கினாள் .

“என்னை பொண்ணு பார்க்க யாராவது வந்த அடிச்சே துரத்திடுவேன் …” “என்னை ஏமாத்த நினைச்சே … கொன்னுபுடுவேன் ..” என்றெல்லாம் பேசியவளை நினைத்து பார்த்தேன் . இதைல்லாம் சொன்னபோதும் கூட இப்படி தான் தலையை வேகமாக ஆட்டுவாள் . கம்மலும் சேர்ந்து ஆடும் .

“டேய் … என்னாச்சு ” நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை தட்டினாள் . “சொல்லடி என் காதலி ?” என்றேன் . “ஐயோ எருமை மாடு …ஒழுங்கா பேசு .. எனக்கு கல்யாணம் ஆயுடுச்சு ..”

காதலிகள் ஏன் எப்போதும் எருமை மாடு என்றே அழைக்கிறார்கள் . “அது செல்லமாக ” என்றாள் முன்மொருமுறை . எருமை மாடுகள் புண்ணியம் செய்தவை .தேவதைகள் உச்சரிப்பாதலேயே ..

நாங்கள் பரஸ்பரம் பேச்சை முடித்துக்கொண்டு கிளம்ப தயாரானோம் .அலைபேசி எண்களை பெற்றுக்கொண்டோம் .மறக்காமல் அழைக்குமாறு பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம் .
விடைபெற்றேன் .

அடுத்த இரண்டு நாட்களும் நாங்கள் காதலித்த காலங்களே நினைவை ஆக்கிரமித்தன .என்னால் பணி செய்ய முடியாமல் அவளையே நினைதுக்கொண்டிருந்தேன் .என் மனைவி வேறு இடையில் ‘கால் ’ செய்து மனசாட்சியை உலுக்கினாள் . ஒருவேளை அவளுக்கும் ஒரு காதலன் இருந்து இப்படி நினைத்துக்கொண்டுருப்பாளோ ..ச்சே ..ச்சே .. அவள் நல்லவள் .
ஒருமுறை என் தேவதையோடு பூங்காவில் உலாவிக்கொண்டிருந்தேன்.அப்போது என்னை விட அழகான ஒரு இளைஞன் என்னவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"அங்கே பாரேன்.."என்றேன்.

ஆச்சர்யத்தோடு அகலக்கண் விரித்தபடி திரும்பி பார்த்தாள்.

"அவனிடம் கொஞ்சம் போய் பேசிவிட்டு வாயேன்..பாவம் நீண்ட நேரமாக உனக்காக தவம் கிடக்கிறான்"

"ஐயோ.. பேசாம வா.."

"ஹேய்.. போய் டைம் என்னவென்று கேட்டுப் பாரேன்..அவன் அப்படியே இந்திர லோகம் சென்று வந்திடுவான்.."

அவள் சிரித்தாள்.

என் நினைவுகள் தூக்கத்திற்கு உலைவைத்தன. என் அலைபேசியை எடுத்து என் தேவதைக்கு குறுஞ்செய்தி தட்டினேன் . “தேவதையே ..உன் ஜிமிக்கியை எனக்கு பரிசளிப்பாயா ?”

“லூசு .. எதற்காக ”

ஏன் மனைவிகள் கணவனை லூசு என்று திட்டுவதில்லை .இவை காதலிகளுக்காகவே படைக்கப்பட்ட வார்த்தைகள் போலும் .

“உன் நினைவாக வைத்துக்கொள்ள ”

“உன் கவிதை பேச்சை விடவே மாட்டியா ?”

“உடன் பிறந்ததாயிற்றே....”

அதற்கு மேல் அவளிடமிருந்து பதில் வரவில்லை .நானும் தூங்கிப்போனேன் . பயணம் முடித்து ,என் மனம் முழுவதும் என் தேவைதையின் நினைவாக வீட்டிற்கு வந்தேன் .என் மனைவியை பார்த்ததும் என் முகம் இருண்டு போனது .என்னை துளைத்தெடுத்த மனசாட்சியை தூக்கி போட்டுவிட்டு என் தேவதைக்கு சாட் ' request ' அனுப்பினேன் .

காலங்கள் கடந்தது . என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது . தேவதையின் நினைவில் பைத்தியமானேன் . இரவும் பகலும் நாளும் கிழமையும் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தோம் .கல்லூரி காலங்களும் சுற்றியை இடங்களும் ,பேசிய பேச்சுக்களும் மீண்டும் உயிர்த்தெழுந்தன .

“நான் உன்னை சந்திக்கவேண்டும் ” சாட்டில் தட்டினேன்

“எதற்காக ”

எனக்கு பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக இருந்தேன் .அவளும் பேசாமல் இருந்தாள்.திடீரென்று 'sigout ' செய்து விட்டாள் . நான் தவித்து போனேன் . அலைபேசியில் முயற்சித்தேன் . பதில் இல்லை .

ஒருவாரம் என்னை பழிதீர்த்தாள் . திசை தெரியாத காட்டில் தன்னந்தனியாக சுற்றிகொண்டிருந்தேன் .யாரிடமும் பேசாமல் தனிமையில் அவள் பதிலுக்காக காத்திருந்தேன் . ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது என் அலைபேசி அதிர்ந்தது .விழுந்தடித்துகொண்டு போனேன் .

“சாரி ” என்றாள்

நான் அவளிடம் கத்தினேன் .சண்டையிட்டேன் .ஏதேதோ பேசினேன் . அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள் .

"பேசித்தொலையேன்.." நான் கத்தினேன்..

"இனிமேல் என்னோடு பேசவேண்டாம்.." என்றாள்.கணவனையே காதலிப்பதாக சொன்னாள்.தொந்தரவு தரவேண்டாம் என்று சொல்ல சொல்ல வார்த்தைகள் நடுங்கின அவளுக்கு.அழுதிருப்பாளோ என்னமோ.நான் பதிலேதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தேன்.

என் கனவு உலகம் இருண்டு போனது போல உணர்ந்தேன்.சுக்கு நூறாக உடைந்த இதயத்தை சுமந்து கொண்டிருப்பது வேதனையாக இருந்தது.கடைக்கண்களில் கண்ணீரோடு வீட்டிற்குள் நுழைந்தேன்.
மன அழுத்தம் கொடுமையாக என்னை படுத்தியது .முகம் கழுவி,படுக்க போனேன்.
"யாரு கண்ணு பட்டுதோ.. ஒரு மாசமா ஒரு மாதிரியாவே இருக்கீங்க..சூடம் சுத்தி போடணும்..எந்திரிச்சு வாங்க.."மனைவி அழைத்தாள்

என்னையும் அறியாமல் சிரித்தேன். அவள் அருகில் சென்று.."சொல்லடி சிவசக்தி.."

"என்னது இது?இப்படி பேசறீங்க..?" பாவம் என் கவிமொழியை இவள் அனுபவித்ததே இல்லை.

"என்னை இனிமே எருமை மாடுன்னு கூப்பிடு.என்னை பிடிச்ச பேயெல்லாம் ஓடிடும்.." என்றேன்.

அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.என்ன இது லூசு என்று நினைத்திருப்பாள் கண்டிப்பாக.

Tuesday, June 21, 2011

இவன் தான் பாலா



விமர்சன வட்டத்தை கடந்து நிற்கும் பாலா இப்போது விமர்சன வட்டத்திற்குள் வந்திருக்கிறார் தனது நிலையை இழக்காமல் தனது தரத்தையும் குறைக்காமல்.

சராசரி இயக்குனர்களிடமிருந்து விலகி நிற்கும் பாலா, சராசரி இயக்குனரை போல தன்னாலும் இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இன்றைய ஒரு சில தமிழ் இயக்குனர்களை தவிர மற்ற அனைத்து இயக்குனர்களும் உலக சினிமாக்களின் DVD களை எடுத்து அதை மிகவும் கேவலமான முறையில் தரும் இயக்குனர்களாக இங்கிருக்க தனது முந்தைய படங்களின் சம்பந்தமே இல்லாமல் எந்த ஒரு கதை கருவையும் திருடாமல் தமிழக மண்ணின் மைந்தனாக இருந்து கொண்டு நமது தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் இந்த பாலாவை இங்கே விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை.


அவன்-இவன் படத்தின் கதையோ கதாபாத்திரங்களோ பெரிய ஆராய்சிக்குட்பட்டவை அல்ல.இது ஒரு பாலாவின் பொழுது போக்கு சித்திரம். உயர்ரக இயக்குனர் பாலாவை விமர்சிப்பதன் மூலம் தன் அதிமேதாவி தனத்தை தானே மெச்சி கொள்ளும் அதிமேதாவிகளே, உங்கள் ரசனையை கொஞ்சம் வளர்த்துக்கொள்ளுங்கள்.


விமர்சனங்கள் என்றுமே வரவேற்கப்பட வேண்டியவை. அந்த விமர்சனத்தை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.அப்படிப்பட்ட விமர்சகர்கள் நான் கடவுளை ஏன்
புறக்கணித்தீர்கள்? அப்படி எடுத்தாலும் குறைசொல்லவேண்டும்.கமர்ஷியலாக எடுத்தாலும் கதை இல்லை என்று தங்கள் 'அறிவை' வெளிப்படுத்துபவர்கள் உண்டு.

எந்த கமர்ஷியல் படத்தில் கதை என்று ஒன்றை கண்டுபிடிதிருக்கிறீர்கள்? (இதையே மணிரத்தினம், பாலச்சந்தர், ஷங்கர் எடுத்தால் ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருப்பார்கள்)

பாலா எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களையே படமெடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.இங்கே மேட்டுக்குடி மக்கள் அதிகமில்லை.விளிம்பு நிலை மக்களே அதிகம். சத்ய ஜித்ரே எடுத்த அனைத்து படங்களின் முழு வடிவமும் இந்தியா ஒரு வறுமை நாடு என்பதையே வெளிக்காட்டியிருப்பார்.


கமரிஷியல் படத்தில் என்ன இருக்குமோ அது தானே இந்த படத்திலும் இருக்கிறது.பிறகு ஏன் அவர் படத்தை மட்டும் பிரித்து மேய்கிறார்கள்.இவர் படத்தின் காட்சி ஒவ்வொன்றையும் குறைசொல்லிக்கொண்டிருப்பவர்களை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.


தமிழ் இலக்கிய உலகம் ஏன் இப்படி அடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்று இப்போது தெரிகிறது.யாருடைய கருத்தையும் அறிவையும் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..தங்களுக்கு தாங்களே அறிவு ஜீவிகள் என்று மார்தட்டி கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டிருப்பதே வேலையாக கொண்டிருப்பதால்.
பிறகு எப்படி ஒற்றுமை இருக்கும்?


நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள், கௌதம் மேனன் படங்களின் நாயகர்கலையோ அவர் பட வசனங்களை போல தமிழே தெரியாத ஆங்கிலத்தையே உரையாடலாக கொண்டிருக்கும் மக்களையோ அல்ல. ஏன் வெட்டியான்களும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் மனிதர்கள் கிடையாதா? அவர்களை பற்றி ஆங்கிலத்திலோ,கொரிய மொழியிலோ,இரானிய படங்களோ வந்திருந்தால், ஏன் ஹிந்தி, தெலுங்கில் படமேடுதிருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள் சில அறிவு ஜீவி விமர்சகர்கள்.தமிழில் இப்படி ஒரு படம் உண்டா..?இங்கிருப்பவர்கள் இயக்குநர்களா? என்று தங்கள் மேதாவி தனத்தை வலைப்பூக்களில் பரப்பியிருப்பார்கள்.


ஒரு இயக்குனர் இந்த மாதிரித்தான் படமெடுக்க வேண்டும் என்று கருத்து சொல்ல என்ன இருக்கிறது.எல்லா இயக்குநர்களுமே ஒரே வட்டத்திற்குள் சுத்தி வரும் போது நாலே நாலு படமெடுத்த பாலாவை கண்ட மேனிக்கு விமர்சித்து தள்ளுவது நியாயமல்ல.


Monday, May 23, 2011

கலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..!


ஸ்பெக்ட்ரம் வெளிவந்து அதற்கு காரணமாக இருந்த தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்ட போது 'இது திராவிடர்கள் மீது ஆரியர்கள் தொடுத்த போர்' என்றார் கருணாநிதி. பின்பு 'அவர் ஒரு தலித் என்பதால் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

மீண்டும் '1 .76 லட்சம் கோடி ரூபாயை ஊழலை ஒருவராலேயே செய்திருக்க முடியாது. ஒருவரை கைது செய்ததாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.பல நல்ல திட்டங்களை அவர் கொண்டு வந்த காரணத்தால் பொறாமை பிடித்த சிலர் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

சி.பி..கோர்ட் மூலம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டு சிறையிலும் அடைத்தாகிவிட்டது.அவருக்காக வாதாடின வக்கீல் ராம்ஜெத் மலானி.பிஜேபி யை சேர்ந்தவர்.

ஒரு காலத்தில் பா..வை பற்றி, 'பண்டார பரதேசிகள் எல்லாம் இந்த நாட்டை ஆளத் துடிக்கின்றனர்'என்று கூறியவர் தான் இன்று அதே பண்டார பரதேசிகளில் ஒருவராகிய மூத்த கிரிமினல் வக்கீல் ஒருவரை கனிமொழிக்காக வாதாட வைத்துள்ளனர்.

கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு 'உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் அவள் செய்யாத தவறுக்காக சிறை சென்றால் உங்கள் மனம் எந்த அளவிற்கு வேதனை படுமோ அந்த நிலையில் இருக்கிறேன்' என்கிறார்.

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது ஒரு இருக்கின்றதா? தான் செய்த தவறை காலம் தாழ்த்தி கூட இன்னும் உணராத போது என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பாருங்கள்.ஒரு வயதான முதியவள் , சிகிச்சைக்காக தானே தமிழ்நாட்டிற்கு வந்திறங்கினார்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தன் பதவி,மகன்களின் பதவிக்காகவே அந்த அம்மையாரை மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பியதை நினைத்து பாருங்கள்.நீங்களும் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.அந்த முதியவள் எத்தகைய மன உளைச்சலில் திரும்பி போயிருப்பாள்.அந்த பாவமே உங்களுக்கு சரியான தண்டனைகளை கொடுக்கும்.

இத்தனை ஊழல்கள் என்று கேட்டால் 'முந்தய ஆட்சியில் நடக்காததா?' என்றும்,
மின்சாரம் பற்றி கேட்டால் 'வட மாநிலங்கள் எல்லாம் இருளில் தான் மூழ்கி இருக்கிறது' என்று என்ன சர்வாதிகாரமான பதில்கள்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்த,கொலைகார ராஜபக்ஷேவை கம்பளம் விரித்து வரவேற்ற ஒரு சர்வாதிகார கொடுங்கோலனுக்கு சமம் நீங்கள்.

தன் மகள் சிறை சென்றதற்கு இந்த குதி குதிக்கிறார்.

தேர்தல் முடிவு வந்ததும் ஸ்டாலினிடம் சொன்னாராம் 'கனிமொழிய மட்டும் விட்டுடாதப்பா...' என்று.

அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்கள்.

Saturday, May 7, 2011

கனவுலகில் ஒரு பயணம்..




தினமும் காலையில் உணவோடு பேருந்தில் சிக்கித் திணறி, அலுவலகம் சென்று செயற்கையான மனிதத்தோடு, விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து, மீண்டும் இரவில் ஒரு பயணம், வீடு, உணவு, உறக்கம், வேலை... இந்த பைத்தியக்கார வாழ்க்கைமுறையை கண்டு வாழ்கை என்பது இவ்வளவு குறுகிய வட்டமா என்று நாளுக்கு நாள் எரிச்சலோடு முடிகிறது. ஞாயிறுகளை தூங்கிக்கழித்தும், திருவிழாக்களில் சிறிது மகிழ்ந்தாலும் மனதில் உள்ள வெறுமை வேதனையானது.

இவற்றை தவிர நம் வாழ்கை முறையில் மாற்றம் இல்லை. முடிந்தால் கொடைகானலுக்கும், ஊட்டிக்கும் சுற்றுலா செல்வோம்.


கண்களை மூடி மனதை விரித்துப்பாருங்கள். 65000 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய நில உலகம். பூமியை போல பத்து லட்சம் மடங்கு பெரிய சூரியன். அதையும் தாண்டி போனால், சூரியன் போல பல லட்சம் மடங்கு பெரிய பெரிய சூரியன்கள் லட்சக்கணக்காக.. அவையெல்லாம் ஒன்று சேர்ந்த நட்சத்திர மண்டலங்கள். அவை பலகோடிகள் சேர்ந்த தொகுதிகள், கொத்தியக்கங்கள்..... இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில்.

என்னால் இந்தளவுக்கு போகமுடியாவிட்டாலும் சூரியனை பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழியில் என் பயணத்தை தொடர்ந்து செல்ல ஆசை.

சமீப நாட்களாக ஒரு எண்ணம். இந்த எந்திர வாழ்கையை விட்டு விட்டு எங்காவது ஓடிப்போய்விட வேண்டும். எங்காவது என்றால் 'into the wild' என்றொரு படம். அதன் நாயகன் போல. வீட்டை விட்டு காட்டை நோக்கி பயணப்பட்டு விட ஆசை. அந்த பயணத்தில் என்னோடு, என் எண்ணங்களோடு, என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர்களோடு பயணப்பட ஆசை. கையில் ஒரு பைசா இல்லாமல், அலைபேசி, நகை நட்டு, என எல்லாவற்றையும் துறந்துவிட்டு காட்டு விலங்குகள் போல், மனித விலங்காக ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு நாள் வாழ்க்கையாவது வாழ ஆசை.

இப்படி நான் தினமும் நிகழாத ஒன்றை கற்பனையிலாவது சென்று பார்க்க ஆசைபடுவேன். இது தொடர்ந்ததாலோ என்னமோ ஒரு நாள் கனவாகவே மலர்ந்தது. எழுந்ததும் கலைந்துவிடும் கனவுக்கு மத்தியில் இந்த கனவு கலையவில்லை. இன்னமும் என் நினைவில் ஊஞ்சலாடுகிறது.

கனவில் நான் ஒரு அடர்ந்த கானகத்தில் அங்கிருக்கும் மரங்களை கொண்டு ஒரு குடிசை போட்டு ஓரிடத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் சர்வ அமைதி. வண்டுகளின் ரீங்காரமும், சில காட்டு விலங்குகளின் ஓசையை தவிர. காட்டுச் செடிகளிக்கு நடுவே நான் நடந்து செல்கிறேன். அதன் இலைகளில் இருக்கும் பனித்துளிகளை முகத்தில் அடித்துக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறேன். என் மனதில் பயம் இல்லை. காட்டுவிலங்குகள் பற்றிய பயம் இல்லை. இருட்டை கண்டு அச்சம் இல்லை. அங்கிருக்கும் அருவிகளில் குளித்து ஆனந்தக் கூத்தாடுகிறேன். அந்த கானகத்தில் எத்தனையோ வண்ணங்களில் வித விதமான பறவைகள் கண்டு வியக்கிறேன். மான்களும், குரங்குகளும், பெயர் தெரியாத விலங்கினங்களும் என்னை சுற்றி விநோதமாக என்னை பார்க்கின்றன. ஆனால் அவற்றின் கண்களில் குரூரம் இல்லை. அவை நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் என் பின்னாலேயே வருகின்றன. நான் ஒரு குட்டி புள்ளி மானை கையில் தூக்கிக் கொண்டு என் குடிசைக்கு வருகிறேன். பசிக்கும் போது அங்கிருக்கும் கோரை புற்களை, ஏதேதோ கிழங்குகளை பிரியமாக சாப்பிடுகிறேன்.



அப்போது என் குடிசையை சுற்றி நான்கைந்து காட்டு யானைகள். ஆனால் எனக்கு ஆச்சர்யம்..!! நான் கொஞ்சமும் பயப்படாமல் ஒரு யானையின் அருகில் சென்று அதன் தும்பி்க்கையில் ஒரு கிழங்கை கொடுத்து தடவி விடுகிறேன். அதன் காது மடல்கள் எனக்கு எட்டவில்லை. குதித்து குதித்து தொட முயற்சிக்கிறேன். சிங்கமும், புலியும் என் அன்பிற்கு கட்டுப்படுகின்றன.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. என் குடிசையை சுற்றி சர்வலோகம். என் மனம் அளவில்லாத மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. வாழ்கையின் நிறைவை, மகிழ்ச்சியை அடைந்துவிட்டதாக ஒரு ஆனந்தம்.

Monday, May 2, 2011

தங்கபாலு காமெடி

‘நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்’ என, சினிமா டயலாக் சொல்வது போல் பேட்டியளித்துள்ளார் தங்கபாலு.தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுவின் காமெடி பேச்சை கேட்ட தமிழக மக்கள் தற்போது தேர்தல் முடிந்தபின் இவருடைய காமெடியை ரசிக்கின்றனர்.

கொல்லைப்புறமாக வந்து எம்.எல்.ஏ.சீட்டை பெற்ற தங்கபாலு , இவ்வளவு வீராவேசமாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வளவு செல்வாக்குள்ள இந்த நாயன்மார்கள் ,அறிவாலயத்தை ஏன் வலம்வந்தனர்?அந்தளவு செல்வாக்குள்ளோர் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் சீமான் போன்றோரது தமிழ் அமைப்புகள் ,இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த போது இவர் அறிக்கை விட்டிருந்தால் , தமிழகம் எரிந்ததா இல்லையா என தெரிந்திருக்கும்.

மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் போதெல்லாம் அமைதியாக அறிவாலயத்தை வலம் வந்தவர் இப்போது திடீர் ஞானோதயமாக மீனவர்கள் பிரச்சனைக்காக இலங்கை தூதரகத்தை இவர் முற்றுகையிடுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை.பதவியை காப்பாற்ற அவர் போடும் நாடகம் என்பதை அரசியல் அறியாதவர்களும் அறிவர்.

கருணாநிதியுடன் சேர்ந்த தோஷத்தால்,போராட்டம் நடத்துவது,ராஜினாமா நாடகம் அரேங்கேற்றுவது போல்,இவரும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட அதே நேரத்தில் வாசன்,இப்பிரச்சனை குறித்து டில்லியில் சோனியாவை சந்தித்ததே இதற்கு காரணம் .

மீனவர்கள் ஏற்கனவே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தன் சுயநலத்திற்காகவும்,பதவி சுகத்துக்காகவும் மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல் இவர் நீலிக்கண்ணீர் வடிப்பதை மீனவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.

மத்தியில் இவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் ஆள்கிறது.அவர்கள் நினைத்தால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கலாம் என்றிருக்கும் போது இவர் டில்லி சென்று சோனியா இல்லத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டுமே ஒழிய, இலங்கை தூதரகத்தை அல்ல.

Tuesday, April 19, 2011

தெய்வ தரிசனம்

வஞ்சகம் , பொய், கொலை, களவு ஆகிய பஞ்சமா பாதகங்களுக்கு நடுவே நம்முடைய ஜீவன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எதன் மூலம் இந்த ஜீவனுக்கு அமைதியை ஊட்டுவது..?

மனைவியை சரணடைந்தால் ஒரு நல்ல புடவை கூட இல்லை என்று ஒப்பாரி வைக்கிறாள்.

நண்பனை சரணடைந்தால் அவன் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறான்

சமதளமும், வேலியும், முட்காடாக இருக்குமானால் எதிலே காலை வைப்பது?

ஆத்மாவுக்கு சாந்தி வேண்டும்.அமைதி வேண்டும்.நிம்மதி வேண்டும்

அது எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.முன் பின் அறிமுகமில்லாத ஒரு அந்நிய ஸ்திரீ வழங்க முடியுமானாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.

ஒரு வகையான சுகத்தை, நிம்மதியை எதிர்பார்க்கிறோம்.

சிற்றின்பத்தில் சிறிது நேரமே அதை பெறமுடிகிறது.

ஆகவே வில்லங்கங்களை கடந்த ஒரு சூன்ய நிலையில் தன்னை மறந்து லயித்தாழோழிய நிரந்தரமான சுகமும் நிம்மதியும் நமக்கு கிடைக்க மாட்டா..

'தன்னை மறந்த லயம் என்பது என்ன?'

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவோடு ஐக்கியமடைவது.

அந்த ஐக்கியம் என்பது என்ன?

'நான்'என்ற ஒன்று இல்லாத மாதிரி அவனோடு கலந்து விடுவது.

இரண்டற கலந்து விடும் இந்த நிலைக்கு பெயரே சமாதி நிலை.

பிறர் அடித்தால் வலிக்காது

முள்ளால் குத்தினால் வலி தெரியாது.

கண் திறந்திருக்கும்.ஆனால் எதிரே இருக்கும் சடப்பொருள் பிடிபடமாட்டா..

காதுக்கு கேட்கிற சக்தி இருக்கும்.ஆனால் உலகத்தின் எந்த ஒலியையும் அது ஏற்றுக்கொள்ளாது.

பிறப்பு,வளர்ப்பு,சூழ்நிலை மறந்துபோகும்.

இந்த சமாதி நிலைக்கு போக ஏட்டு படிக்கட்டுகளில் ஏற வேண்டும்.

பகவானோடு லயிக்கிற சாதகத்தை செய்து ஒருவன் சமாதி நிலையையோ, சொருப ஞானத்தையோ எட்டிவதற்கு எட்டு படிக்கட்டுகள் உண்டு.

ஈசுவர லயத்தில் ஒரு மனிதன் இறங்கிய உடனேயே..

1 பேச்சு அடங்கி விடும்.

2 வியர்வை பெருகும்

3 மயிர்க்கூச்சு உண்டாகும்

4 குரல் தடுமாறும்

5 உடலில் நடுக்கம் ஏற்படும்

6 உடல் என்ற ஒன்று இருப்பது மறந்து போகும்

7 மெய் மறந்த நிலையில் கூச்சல் போடுவார்

8 சமாதி நிலையில் பகவானோடு லயித்து விடுவார்

'ஹரே கிருஷ்ணா,ஹரே கிருஷ்ணா,'என்று உச்சரிக்க ஆரம்பித்தால் ஒரு பக்தனுடைய கடைசி சாதக நிலையாக இது ஆகிவிடும்

உச்சரிக்க ஆரம்பித்த கொஞ்ச காலங்களிலேயே பலர் பரவசப்பட்டு கூத்தாடுவதுண்டு.

பலர் குழந்தைகளை போல மாறிவிடுவதுண்டு.

உலக வாழ்க்கையில் மூழ்கி இருப்பவனுக்கு குடும்பம்,பேரன்,பேத்தி என்று ஆகிவிட்டவனுக்கு இந்த 'கிருஷ்ணா பரவசம் 'வர தாமதமாகலாம்.

மெய் மறந்து கூத்தாடுவதில் ஆனந்தம் அதிகம்

சங்கீதம் நமக்கு பிடித்தமானதாக இருந்தால் தலையை தலையை ஆட்டுகிறோம்

குழந்தை நமக்கு பிரியமுள்ளதாக இருந்தால்,உச்சி முகர்ந்து தோளோடு அரவணைத்துக் கொள்கிறோம்

ஓவியம் நமக்கு பிடித்தமானதாக இருந்தால் கண் கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அழகான பெண்களை கூடவும் அப்படியே பார்க்கிறோம்

இந்த லயங்கள் அந்தந்த இடங்களை விட்டு விலகியதும் மறைந்துபோகும்.

ஆனால்,கிருஷ்ணா லயம் என்பது பிரமானந்த லயம்.வேறு எந்த தெய்வத்தோடும் அப்படி நாம் ஒட்ட முடியாது.

சிறிது கூட சிக்கலில்லாத சுகத்தை நமக்கு வழங்ககூடியவன் கிருஷ்ணனே.

'சுகம் ,சுகம்' என்கிறோமே அது என்ன?

உடம்பில் ஏற்படும் கிளர்ச்சியா?ஆத்மாவில் ஏற்படும் ஆனந்தமா?

ஒரு எருமை மாட்டை பார்த்து 'நீ சுகமாக இருக்கிறாயா ?'என்று கேட்டால் அதுவும் ஆமாம் என்று தான் பதில் சொல்லும்.

அதனுடைய சுகம் சேறு.

பசுமாட்டிற்கு சுகம் வைக்கோல்.

ஆனால் மனிதன் என்பவன் வெறும் வாய் மட்டும் படைத்தவனன்று.அவனது அங்கங்களின் கிளர்ச்சி மட்டுமே சுகமன்று.இவையெல்லாம் தற்காலிகம்

நிரந்தரமான சுகம் என்பது எந்த துன்பங்களையும் லட்சியம் செய்யாதது.

உண்மையான சுகம் எது என்பதை பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போதிக்கிறான்...

"சுகம் என்பது உடலால் அறிவது அல்ல.அறிவால் அறிவது என்று கண்டு,அதில் லயித்து அசையாமல் இருக்கும் நிலையம்....."

மிருகங்கள் சுகம் அனுபவிக்கின்றன.ஒரு ஆட்டை நீங்கள் வெட்டிக்கொண்டிருக்கும் போதே,பக்கத்தில் இன்னொரு ஆடு புல் மேய்ந்துகொண்டிருக்கும்.அவற்றிற்கு உடல் உணர்வு உண்டே தவிர ஆன்மா உணர்வு இல்லை.

ஸ்ரீ கிருஷ்ணா லயத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சமமாக பாவிக்கப்படுகின்றன.

அதன் பெயரே சமாதி நிலை.

அதுவே ஒரு வகை சுகம்

நுங்கும் நுரையுமாக கங்கு கரையின்றி பொங்கி வரும் ஆனந்த வெள்ளம் அது.

உடம்பு அழகாக இருக்கிறது.அது எப்படி எப்படியோ இயங்கிகிறது.ஆனால் உடம்புக்குள் இருக்கும் உயிரை மட்டும் எடுத்துவிட்டால் சகல இயக்கங்களும் அடங்கி விடுகின்றன.

ஆகவே உயிர் என்பது எல்லாவற்றிற்கும் மூலமாகிறது.

உடம்பு இன்னொரு உடம்போடு கலப்பதை மனிதன் அறிகிறான்.அது இன்னொரு உயிரோடு கலப்பதை அவன் அறிவதில்லை.

ஆணும் பெண்ணும் கலக்கும் போது ஒரு நிமிஷ நேரம் லயம் உண்டாகிறது.பிறகு விலகி படுப்பதே சுகமாகிறது.

உடம்பு கலக்கும் சுகத்துக்கு அவ்வளவு தான் மரியாதை.உயிர்கள் கலக்கும் சுகத்துக்கு பிரிவே இல்லை.

அதிலும் பரமாத்மாவோடு ஜீவாத்மா இணைந்துவிட்டால் அதுவே பேரின்ப நிலை.

அந்த நிலையை எட்டும் முயற்சியில் இன்றைய இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

நாட்டில் நிறைய ஜனத்தொகை இருக்கிறது.ஒரு பகுதியினர் கலியாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவதால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

எப்படியும் வாழலாம் என்ற 'ஹிப்பிஸ' மல்ல நான் சொல்வது.இது தெய்வ இயக்கத்தில் இன்பம் காணுவது.

வில்லங்கங்கள் நிறைந்த மனிதனுக்கு இது சாத்தியமல்ல.

மரத்தை பிடித்துக் கொண்டு 'போகிறேன்..போகிறேன்' என்றால் போக முடியாது.மரத்தை விட்டால் தான் போகலாம்.

--கண்ணதாசன்

Monday, March 28, 2011

அகதியின் மொழி

என் நாக்கு பிளந்து அவை

இருவேறு மொழிகளை பேசுகின்றன

தஞ்சம் புகுந்த ஒரு அகதியின் மொழிகளவை

அதிலொன்று இரந்து கேட்கிறது

ஏழைகளின் உணவு விண்ணப்பத்தைப்

பிழையாகப் படிக்கிறது

அந்நியர்களுடன் சமரசம் செய்ய

வார்த்தைகளை தேடுகிறது

வெட்கித்துப் போகிறது

மறுபக்கம் திரும்பி என்னிடம்

'நீயொரு அகதி' என்கிறது

மற்றொரு நாவு

பொதுவெளியில் ஒளிந்துகொள்கிறது

உயர்த்தமுடியாத குரலுக்காக

மௌனிக்கிறது

வீடும் வெளியும் வேடங்கள்

புனையச் சொல்ல

அது சாத்திய கதவின் பின்னிருந்து

என் அழுகையை விம்முகின்றது.



--ஈழப் பெண் கவிஞர் தர்மினி

அடிமையாக்கும் 'சினி' நாயகம்

'சுழன்றும் ஏர் பின்னது உலகம் ' என்றார் வள்ளுவர். இன்று எல்லோரும் திரைபடத்துறையின் பின்னே என்பது நிதர்சனம்.வியாபாரம் செய்ய வந்த அயல்நாட்டுக்காரன் நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய திரைப்படம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்

திரைப்படத்துறையில் ராமன்,கிருஷ்ணன் வேடமிட்டு வந்தவரை தெய்வமாகவும்,அட்டைக்கத்தி பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும் ஏழை,விவசாயி,உழைப்பாளி என நடித்தவர்களை தங்களில் ஒருவராக ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ அன்றைக்கே நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும்,தங்கள் செல்வாக்கையும் புகழையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சி பீடத்தை பிடிக்க துவங்கினர்.

விபத்தாக நிகழ்ந்தது விதியாக மாற்றப்பட்டு விட்டது.நாளடைவில் அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை.

அதற்கு பின் நடந்து வருவதெல்லாம்,திரைப்படத்துரையினருக்காக , திரைப்படத்துரையினரைக் கொண்டு திரைப்படத்துறையினரால் நடத்தப்படும் 'சினி நாயகம்'

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல, ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு வகைகளில் திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர்.அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சிகளிடம் தஞ்சம் அடைகின்றனர்.ஆட்சி மாறினால் இவர்களுக்கு ஆதாயம்.மாறாவிட்டால் வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம்.ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருப்பது அந்தோ...பொதுமக்கள் தான்.

தமிழ் சமூகம் சினிமாவிற்கு பின்னால் அலைகிறது.நாலு காட்சிகளில் தலையை கலைத்துகொள்பவனுக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.சினிமாக்காரர்களுக்கும் அந்த உரிமை உண்டு.ஆனால் தராதாரமில்லாமல் அனைவருக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.ஒருகட்டத்தில் அறிஞர்களுக்கே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறான்.(நன்றி : நாஞ்சில் நாடன்)

யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாக்காரர்கள் வளமுடன் நலமுடன் வாழ ஆவன செய்வர்.அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்.அது போதாதா?விலைவாசி ஏறினால் என்ன?மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அல்லல் பட்டால் தான் என்ன? திரைப்பத்துரையினருக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே நாடு சுபிட்சம் அடையதோ!

Sunday, March 27, 2011

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்க கூடாதா?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்

நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வாகள்
நீ வாழ வேண்டும்

நான் வாழ்வதை பார்த்தார்களானால்
யாருக்கு தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்து தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

தஸ்லிமாவின் சொந்த வாழ்கையை இந்த கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !

Monday, March 21, 2011

இதுவா ராஜ தந்திரம்..?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு.கொள்கை ,சுய மரியாதை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேட்டி.மத்தியில் அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்ததன் மூலம்,தன் சுய மரியாதையை நிரூபித்துள்ளார் கருணாநிதி என பெருமிதம் கொப்பளிக்க தி.க தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையின் ஈரம் காயும் முன் முடிவு ஏற்பட்டுள்ளது.

சுய மரியாதையை விட பதவி தான் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கறாராக கேட்ட 63 தொகுதிகளை கொடுத்து மத்திய அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கீ.வீரமணி முகத்தில் கறியை பூசி...மகிழ்ந்துள்ளார் முதல்வர் ..,தன்மானத் தலைவர்.

'ஸ்பெக்ட்ரம்' எனும் கூர் வாள்,தலைக்கு மேலே தொங்கும் போது, மீசை துடிப்பது போல் நடிக்கலாமே தவிர, உண்மையில் துடிக்கவும் முடியாது..மனம் வெதும்பி வெடிக்கவும் முடியாது.

சர்க்காரியாவில் சிக்கி இந்திராவிடம் தண்டனிட்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சோனியாவிடம் தண்டனிவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் தூசு அலர்ஜியில் கருணாநிதி தும்மினால் கூட 'அடடா...தலைவர் ராஜ தந்திரத்துடன் தும்முகிறார் ;இந்த தும்மலில் எத்தனை அர்த்தங்கள் உள்ளதோ ..! என வியந்து பாராட்டும் ஒரு கூட்டம் அவர் குட்டி கரணங்கள் ராஜ தந்திரம் என்றே புளங்காகிதமடையும்.

63 தொகுதிகள் கேட்டதும் இது நியாயமா..தர்மமா..? என வெகுண்டெழுந்து ஆனது ஆகட்டும் என்ற முடிவுக்கு வந்து ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினார்..'கட்சியின் மானத்தை கருணாநிதி காப்பாற்றி விட்டார் என்று தொண்டர்கள் குதூகலித்தனர்.ஆனால் காங்கிரசை கழற்றிவிட்டதால் உலக தமிழர் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்று வீரமணி சொல்வது அப்பட்டமான பொய்..

2009 ம் ஆண்டு பிப்ரவரியில் ஈழத் தமிழர்களை நான்கு திசைகளிலும் சூழ்ந்து எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் ராஜபக்சே தாக்குதல் நடத்திய போது கருணாநிதி இந்த காரியத்தை செய்திருந்தால் உலக தமிழர்கள் உச்சி முகர்ந்திருப்பார்கள்.இப்போது கருணாநிதி 'கா' விட்டிருப்பது கேவலம் 3 எம்.எல்.ஏ.தொகுதிகளுக்காக. மூன்று லட்சம் தமிழர்களுக்காக ஆடாத சதை மூன்று தொகுதிகளுக்காக ஆடுவது இன நலன் கருதி அல்ல என்பதை வீரமணி தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

Thursday, March 10, 2011

மறைந்திருக்கும் உண்மைகள்-சுஜாதா

ரிச்சர்ட் இயர்சன் என்பவர் எழுதிய "Management of Absurd" என்கிற ஆங்கில புத்தகத்தை ரசித்து படித்தேன்.உலகின் பல நிகழ்வுகள் முரண்பாடு உடையவை.அபத்தமானவை.வெளிப்படையாக தெரிவதும் உள்ளே இருப்பதும் வேறு வேறு என்கிறார். அதிகமாக ஒடுக்கப் பட்டவர்களுள்ள சமுகத்துக்கு ஆதரவான எழுச்சித் தலைமையும் எதிர்ப்பு குரல்களும் யாரிடமிருந்து வரவேண்டும்? அந்த சமுகத்தை சேர்ந்தவர்களிடமிருந்து தானே? அப்படியில்லை என்கிறார்.பல உதாரணங்கள் காட்டுகிறார்.அமெரிக்க இனத்துக்கு முதல் ஆதவுக்குரல் 'அபாலிஷனிஷ்டுகள் ' என்று சொல்லப் பட்ட வெள்ளியரிடமிருந்து தான் எழுந்ததாம். அதுபோல, அமெரிக்க பெண் விடுதலைக்கான முதல் குரல் கலோரியா ஸ்டைனம் என்கிற பெண்மணி,நல்ல வசதியும் சுதந்திரமும் உள்ளே ஒடுக்கப் படாத குடும்பத்தை சேர்ந்தவராம்.குழந்தைகள் உரிமைகளுக்காக வாதாடுபவர்கள் பெரியவர்களே! டைவர்ஸ் கேஸ்களில் பிரபலமாக விளங்கும் லாயர்கள் பலர் திருப்தியான மணவாழ்க்கை கொண்டவர்கள். நம் நாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன.மூட நம்பிக்கைக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் ஆரம்பத்தில் தீவிரமாக சாமி கும்பிட்டவர்கள்.'தமிழுக்கு உயிரையே தருவேன்' அது மூச்சு,ரத்தம்..என்று சொல்பவர்களை நோண்டி பார்த்தால்,வீட்டில் தெலுங்கு பேசுபவர்களாக இருப்பார்கள்.கன்னடத்தில் மிகப்பெரிய சாகித்ய கர்த்தாக்களான டி.பி.கைலாசம்,மாஸ்தி போன்றவர்கள் தமிழர்கள். சுதந்திர போராட்டத்தை ஊக்குவித காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஒரு வெள்ளையர்--ஏ .ஒ.ஹ்யும்.ஆதரித்தவர் அன்னி பெசன்ட் என்ற மற்றொரு வெள்ளையர்.ரஷ்ய புரட்சிக்கு காரணமாக இருந்த மார்க்சியத்தை கொண்டுவந்த கார்ல் மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர்.இந்த முரண்பாடுகளை திட்டவட்டமாக ஆராய்ச்சி செய்கிறார்.இவற்றை பற்றி நாம் எப்போதும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும்.எந்த திசையிலிருந்து எதிர்ப்போ,புதிய கருத்துக்களோ,எழுச்சியோ,மாறுதலோ,வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது.அதற்கு தயாராக இருக்க வேண்டும்.பெரும்பாலும் அபத்தமான திசைகளிலிருந்து தான் வரும்.அதை உணர்ந்து மேலாண்மைக்கான மேனேஜ்மென்ட் கருவியாக பயன்படுத்தலாம் என்கிற வசீகரத்தை சொல்கிறார். ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கடி திருட்டு போயிற்றாம்.அதை கண்டு பிடிக்க என்னென்னவோ செக்யூரிட்டி வைத்து பார்த்தார்கள்.பிடிக்க முடியவில்லை.பெருத்த நஷ்டம் ஏற்படாவிட்டாலும் பணிபுரிபவர்கள் பயந்தனர்.அதை போக்க,அதன் அதிபர் அபத்தமாக சிந்தித்தார்.ஒரு முன்னால் திருடனையே வேலைக்கு அமர்த்தினார்.அவனுக்கு யார் யார் என்னென்ன எப்போது திருடுவார்கள் அன்பது அத்துப்படியாக இருந்தது.திருட்டு மிகவும் குறைந்தது. Invisible Obivious என்று மற்றொரு கருத்தையும் சொல்கிறார்.கண்ணுக்கு தெரியாத உண்மைகள், உலகின் பல கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக தெரிந்து வரவில்லை.தொழில் புரட்சியை துவக்கி வைத்த ஜேம்ஸ் வாட்டின் ஒரு உதாரணம்.தன் வீட்டு கெட்டிலில் கொதித்த நீராவி அதன் மூடியை மேலெழச் செய்வதை கவனித்தார்.நீராவி இஞ்சினுக்கான ஐடியா தோன்றியது.இதே நீராவி கெட்டிலை யுகம் யுகமாக பலர் பார்த்து வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு அதனுள் பொதிந்திருந்த சக்தி வெளிப்படையாக தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக பென்சிலினியம் என்கிற காளான், பாக்டீரியா நுண்கிருமிகளை வளர விடாமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சி சாலையின் கண்ணாடி தட்டுக்களில் பார்த்திருக்கிறார்கள்.அது மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை சாவடிக்கிறதா பார்க்கலாம் என்று யாருக்கு தோன்றவில்லை.அலெக்ஸாண்டர் ஃபிளமிங்க்கு மட்டும் தோன்றியிருக்கிறது.விளைவு--ஆண்டிபயாடிக்ஸ்...நோபல் பரிசு. நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனங்களை திறமை படைத்த தொழிலாளர்கள் செய்துவந்தார்கள்.முழுமோட்டாரையும் ஒரு ஆளே அல்லது ஒரு சிறிய குழுவினரே செய்து முடித்தார்கள்.ஹென்றி ஃபோர்டு அதில் இருந்த உண்மையை கண்டுகொண்டார்.அது -ஒரு தொழிலாளிக்கு ஒரு திறமை போதும்.அடுத்த தொழிலாளிக்கு மற்றொரு திறமை,..இப்படி படிப்படியாக வாகனத்தை தயாரிக்கும் 'அசெம்ப்ளி லைன்'முறையாக கொண்டு வந்து குறித்த செலவில் அதிக ஆற்றலுடைய சீரான தரமுள்ள மோட்டார் வாகனங்களை கட்ட முடியும் என்று கண்டுகொண்டார்.அதிலிருந்து நவீன தொழிற்சாலை உருவானது. ஃபோர்டை நூற்றாண்டின் சிறந்த தொழிலதிபர் என்கிறார்கள்.

Wednesday, March 2, 2011

மீனவனே..உனக்கு எப்போது கோபம் வரும்?

நமது தமிழ் எழுத்தாளர் ஒருவர் கேரளா போயிருந்தபோது அங்கிருந்த கேரளக்காரர் நம்மவரை கிண்டல் அடித்திருக்கிறார்.."தமிழ் தமிழ்னு வாய் கிழிய நல்லா பேசத்தான் செய்யறிங்க..ஒண்ணும் செயலில் காணவில்லை.எப்போ பார்த்தாலும் மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்..சுடப்பட்டார்கள்னு செய்திகள் வந்துட்டே இருக்கே ..உங்களுக்கெல்லாம் கோபமே வராதா..?பாக்கற எங்களுக்குதான் எரிச்சலா இருக்கு.."என்று சொல்லியிருக்கிறார்.நம்மவர் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்திருகிறார்.

உண்மை ..

மக்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் மக்களுக்கு தான் வர வேண்டும்.நம் மக்கள் எதைத்தான் கண்டுகொள்கிறார்கள்.நீ கேளு..நான் கேளு என்று தினமும் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை பார்த்து வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் அதுவும் ஒரு செய்தி.

மீனவனுக்கு ஆபத்து என்றால் மீனவனுக்கு முதலில் கோபம் வரவேண்டும்.ஒரு உருப்படியான ஆர்ப்பட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?சொல்லிக் கொள்ளும்படியான ஆர்ப்பாட்டங்கள் ஏதும் உண்டா?யார் போனால் என்ன அரசுதான் பணம் கொடுக்கிறதே..என தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே போகின்றனர்.ஆயிரத்தெட்டு சங்கங்கள் வைத்துக்கொண்டு மீனவர்களுக்குள் ஒன்றுமை இல்லை.ஆந்திராவில் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் நடந்த கலவரம் போர் காட்சிகளை போல இருந்தது..ஆனால் இங்கே?

இன்று மீனவனை தாக்கும் குண்டுகள் நாளை ஒவ்வொருவர் வீட்டையும் தாக்கினால் தான் விழித்தெழுவோமா?

காஷ்மீரியை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால் இந்தியனை சுட்டுவிட்டான் என்கிறார்கள்.குஜராத்தி மீனவனை கைதுசெய்தால் இந்திய மீனவன் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு மீனவனை மட்டும் சுட்டுக் கொன்றால் தமிழ்நாட்டு மீனவன் என்கிறார்கள்.

எதிரி நாடுபோல் இருக்கிற பாகிஸ்தான் கூட நாம் மீனவர்கள் எல்லை தாண்டினால் சட்டரீதியாகவே நடத்துகிறார்கள்.யாரையும் சுடுவது இல்லை.கொல்வது இல்லை.நம்முடைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் விட்டுவிடுகிறார்கள்.ஆனால் இதுவரை 400 க்கும் மேற்ப்பட்ட மீனவர்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாசமாக்கியுள்ளார்கள்.நம் மீனவர்களை படுக்கவைத்து ஐஸ் காட்டி வைப்பது,நிர்வாணமாக நிற்கவைப்பது,கெளுரு மீன் முள்ளால் காதில் ஓட்டை போடுவது என சொல்லவொண்ணாத சித்ரவதைகள் தொடர்கின்றன.இதில் எழுதமுடியாத சில சம்பவங்களும் உள்ளன.

எங்களை ஏன் அடிக்கிறீர்கள் ? நாங்கள் என்ன புலிகளா ? என்றால் தமிழன் எங்கே இருந்தாலும் எங்களுக்கு எதிரி தான் என்று சொல்லி சொல்லியே அடித்திருக்கிறார்கள்

பிரான்ஸ் தேசத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்றபோது இதனால் சீக்கியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் பூட்டாசிங்கை அனுப்பி சொல்லவைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு கொண்ட மன்மோகன்சிங் தமிழக மீனவர்கள் விஷயத்தில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

என்னால் கடிதம் அனுப்பத்தான் முடியும்.படை எடுத்தா போக முடியும் என்கிறார் முதல்வர்.தன் பிள்ளைகளுக்கு பதவி பெறவும், செம்மொழி மாநாட்டிற்கும் எடுத்த முயற்சிகளை பார்த்த போது இது அவருக்கு பெரிதா என்றே தோன்றுகிறது .

யாராவது கோபமாக பேசிவிட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டதாக சட்டம் பாய்கிறது.உண்மையான உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்தினால் குற்றம்.இந்தியாவின் இறையாண்மை தான் என்ன? சிங்களவர்களையும்,இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பதா? இந்தியர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Sunday, February 20, 2011

விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக

* மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.

*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.

*கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.

* ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..

*இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.

*தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.

* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.

விஜயகாந்தின் சேலம் மாநாட்டு ஒளிபரப்பை தெரியாமல் கேப்டன் டிவியில் பார்த்துவிட்டேன்.மனிதர் என்னா நிதானம்...என்னா பேச்சு..அப்பப்பா...எத்தனை பெக் உள்ளே போனதோ...தள்ளாடி தள்ளாடி உளறிக் கொட்டி டாஸ்மாக் பெஞ்சு போல இருந்தது அந்த கூட்டம்.இலவசமாக கறிக்குழம்பு..,நம்மாளுங்க தான் இலவசம் னா அதுவும் சோறுன்னா விடுவாங்களா..?

நின்று ஒரு நிதானமாக பேச தெரியாத இந்த மனிதனும் நாளைக்கு முதல்வராக ஆசைபடுகிறார்.கொள்ளையடித்து செல்ல புது கும்பல்.இளைஞர்கள் இவர்கள் பின்னால் செல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.மாற்றுக் கட்சி என்றால் பொறுப்பற்ற கட்சிகளுக்கு மாற்று ஒரு பொறுப்பான கட்சியாக இருக்க வேண்டுமே தவிர ,பொறுப்பற்ற தன்மையில் போட்டி போடுகிற தன்மை அல்ல.விஜயகாந்தின் கனவு வெறும் கனவாகவே மூடிய வேண்டும் என்பதே அடியேனின் விருப்பமும் வேண்டுதலும்.

தேர் திருவிழாவும் குடுமி ஐயரும்


எங்கள் ஊரில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.நடந்த விழாவை பதிவாக போடும்படி ஏராளமான நண்பர்கள் கேட்டுக்கொண்ட படியால் (உண்மையில் என்னை அப்படி கேட்டுக்கொண்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே.ஏராளமானவர்கள் என்று சொல்வது கலிங்கத்துப் பிராணி காலத்திலிருந்தே தமிழர்களின் தொன்று தொட்ட வழக்கம்.வரலாறு காணாத கூட்டம் என்றால் மைக்காரரையும் சேர்த்து ஆறு பேர் என்று அர்த்தம்.இந்த மிகை கலாச்சாரம் ஒரு தனி,மினி மோசடி (சுஜாதா சொன்னது போல) )
இதோ பதிவாக..

தினம் தினம் கலைநிகழ்ச்சிகளாக, பாட்டுக் கச்சேரிகளாக கலை கட்டியது திருவிழா.சத்திய சீலன்,மங்கையர்க்கரசி,அறிவொழி அய்யா என பிரபலமான சொற்பொழிவாளர்களின் வருகைகள் தான் ஹைலைட்.திருவிழா என்றாலே அழகோவியங்களும், அழியா 'ஓவியங்களும்' தானே முதன்மை.ஆனால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம்.இளைஞர்களின் கூட்டங்கள் அவ்வளவாக இல்லை.வருத்தம் மறுநாள் கொஞ்சம் தீர்ந்தது.

மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரில் முருகன் பவனி.இருபதடி உயரத்தில் மிகப் பெரிய மரத்திலான தேர்.படிகளில் ஏறி உள்ளே சென்று தரிசிக்கும் வகையில் தேரின் வடிவம்.நான் ஒரு முக்கிய வேண்டுதலுக்காக கால் கடுக்க வரிசை நின்று தேரில் ஏறி பயந்து பயந்து சுற்றி வந்து முன்னால் நின்றால் முருகனை விட அழகான ஒரு இளம் அர்ச்சகர் தட்டுடன் 'தரிசனம்' கொடுத்துக் கொண்டிருந்தார்.எனக்கு ஆச்சர்யம்,தயக்கம்,கோவில்,முருகன் என்று கலவையான எண்ணங்கள்..அழகான முகத்தில் அருமையான குங்கும நாமம்.கீழே சந்தன கீற்று.கொண்டு போன வேண்டுதல் காணாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

இது அடியேனின் தவறு அல்ல.என் போன்ற பக்தைகளுக்கு (?) இப்படிப்பட்ட சங்கடங்களை முருகன் தவிர்த்திருக்க வேண்டும்.முருகன் மன்னிப்பாராக!இதில் பெரிய எரிச்சலாக அமைந்தது..என் பின்னால் வந்த பிராமண பெண்மணி "சீக்கிரமா போங்கோ..நாங்கள்லாம் தரிசிக்க வேண்டாமா .."என தள்ளிக் கொண்டே வந்தார்.நான் கோபமாகி "தரிசியுங்கோ .. யாரு வேண்டாம்னா..ரெண்டு பேர் இருக்கா,யாரா வென 'தரிசிங்கோ.."என நான் சத்தமாக கூறியதை கேட்டு புரியாமல் விழித்தார்.பின்னர் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.இப்படியாக அரைகுறை 'தரிசனத் தோடு ' வேண்டுதலை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு திரும்பினேன்.

அர்ச்சகர்களில் சிலரிடம் மட்டுமே தெய்வீக அழகு இருக்கும்.ஆனால் அவர்களை போல சிடுமூஞ்சிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. பிராமின்ஸ் சுத்த சைவம் என்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு கோபம் வருவதை போல,வசை வார்த்தைகளை எங்கும் கேட்க முடியாது.சிலர் 'வள் வள்' என்று விழுவதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறார்களோ என தோன்றும் படி இருப்பார்கள்.

அன்று மாலை சத்தியசீலன் அவர்களின் அருமையான பட்டிமன்றம்.அறிவொழி அய்யா,இன்னும் பிரபல பேச்சாளர் என.அதில் சத்திய சீலன் அவர்களுக்கு இந்த வருடம் கலைமாமணி விருது கிடைத்திருப்பதாக அவரும் ,பலரும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு கொஞ்சம் வருத்தம்.அது அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது.நேற்று வந்த நடிகர்கள்லாம் விருது..? அரைகுறை நடிகைகளுக்கும் கலைமாமணி..காலங்கலாமாக தமிழ்,இலக்கியம் என தொண்டாற்றுவோருக்கும் கலைமாமணி.என்னய்யா விருது லட்சணம்?அவர் அதனை நிராகரித்திருக்க வேண்டும் என விரும்பினேன்.

விழாவின் ஒரு பகுதி முழுவதும் கடைகள்,சர்க்கஸ்.ராட்டினம்,ஸ்கேட்டிங்,போட்டிங் என கலை கட்டியது.எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு கையில் இரண்டு பலூனோடு வெளியே வந்தேன்.வேறு என்னத்தை வாங்குவது?எல்லாம் எங்கும் கிடைக்க கூடிய பொருட்கள் தான்.பலூன்கள் மீது சிறுவயது முதலே அலாதி பிரியம்.வாங்கி வந்து வீட்டின் மூலையில் நாள் கணக்காக கிடக்கும். கடைசியில் டென்னிஸ் பால் சைசுக்கு சுருங்கி பின் காணாமல் போய்விடும்.ஆனாலும் ஆசை தீராது.

ஆனால் ஒரு பலூனின் விலை பத்து ரூபாய். கடைக்காரன் புலம்பினான்."எங்கம்மா..இப்பல்லாம் யாரு இதை வந்குராவ..பிளாஸ்டிக் பலூன் தான் உடையாது,காத்து போனாலும் ஊதிக்கலாம்னு இதை யாரும் கண்டுக்கிறது இல்லை.ஏதோ உங்களமாதிரி ரெண்டு பேர் வாங்கினாதான் எங்களுக்கு பொழப்பு.."அவனின் சோக கீதம் என்னை தியாகியாக்கியது.கூட பத்து ரூபாய் கொடுத்து இன்னொன்றையும் வாங்கிக் கொண்டேன்.

பக்கத்து வீட்டு எல்.கே.ஜி.பொடியன் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "ஐய்யே..என்னக்கா இது..சின்ன புள்ளை மாதிரி பலூனோட வரீங்க" அவன் என்னவோ பெரிய மனுஷன் மாதிரி.

நான் சிரித்தேன்.பேசாமல் பளிப்பு காட்டிக்கொண்டே பலூனை தட்டியதை பார்த்து சிறுவனுக்கும் ஆசை வந்துவிட்டது."அக்கா..எனக்கும் ஒன்னு..எனக்கும் ஒன்னு"என்று பின்னாலேயே வந்துவிட்டான்.

"ஏன்டா..உங்கம்மாவை வாங்கி தர சொல்லேன்" என்றேன் அவனிடம் ஒன்றை நீட்டிக் கொண்டே.."போங்கக்கா..அது வெடிச்சிடும்..யூஸ்புல்லா ஏதாவது வாங்கி தரேன்னு சொல்லுது.."சிறுவன் ரப்பரை பிடித்துக் கொண்டு தட்டிய பொது அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பலூன் என்றாலே வேண்டிக்க தானே! அதனோடு ஓடியாடி ,தட்டி தட்டி ஏதோவொரு எதிர்பாராத சமயத்தில் பட்டென்று வெடிக்கத்தானே பலூன்..இதில் என்ன யூஸ்ஃபுல் வேண்டிக்கிடக்கிறது?படிப்பு படிப்பு என மனித்தன்மை தொலைத்த இயந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்து சிறுவர்கள்.

சரி..விழாவிற்கு வருவோம்.திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பு மங்கையர்கரசியின் அருமையான சொற்பொழிவு.தொடர்ந்து ஐந்து நாட்கள்.அருமையான பேச்சு.அதைவிட அருமையான உச்சரிப்பு நடை.காதில் இன்பத் தேன் வந்து பாய வேண்டும் என்றால் இவரின் பேச்சை கேட்டுப் பாருங்கள்.அவ்வளவு அருமை.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர்கள் தங்களால் இயன்ற தொகையை கவரில் வைத்து கொடுக்கலாம்.எல்லோரும் பத்து,நூறு என வைக்க, யாரோ ஒரு தருமப் பிரபு மட்டும் கிரானைட் கல்லை கவரில் வைத்து அதை அழகாக ஒட்டி அனுப்பியிருக்கிறார்.மங்கையர் கரசி அதை மேடையிலேயே சொல்லி அந்த முகம் தெரியாத ஆசாமிக்கு சிறப்பு வாழ்த்துக்களோடு சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சரி,வேண்டுதலுக்கு வருவோம்..என் நண்பர் வேலை வேலை என்று அநியாயத்திற்கு பிஸியாக இருக்கிறார்.அவரின் பணிச்சுமையை குறைத்து கொடு முருகனே .."என்று வேண்டிக்கொண்டு முருகனிடம் விடைபெற்றேன்.முக்கியமான செய்தி..அன்று அந்த பழைய அர்ச்சகர் அன்று இல்லை !

திருவிழா இனிதே நிறைவடைந்தது..!

இவ்வளவு நேரம் இப்பதிவை படித்து தங்கள் பொன்னான நேரத்தை தியாகம் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி..! வணக்கம்..!வந்தே மாதரம் ...!

Friday, February 18, 2011

அரசியல் வாதிகள்

இந்தியாவில் மட்டுமல்ல;உலகம் முழுவதிலுமே அரசியல்வாதிகள் இறைவனின் அபூர்வ ஸ்ருடியாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஒன்று--

சுயநலத்தை அடிப்படையாக வைத்து தங்கள் அரசியலை வைத்து கொள்கிறார்கள்.

இல்லை;அரசியலை அடிப்படையாக வைத்து சுயநலத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்

சுயநலமே இல்லாத அரசியல்வாதிகள் அபூர்வமாக தோன்றி கொஞ்ச நாளிலேயே அஞ்ஞாத வாசம் புரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த சமுதாயம் எந்த கணக்கு போட்டு அரசியல் வாதிகளை ஏற்று கொல்கிறது?

அவனவன் பேச்சையும்,எழுத்தையும் பார்த்து !

காரியம் செய்பவனை விட வேஷம் போடுகிறவனுக்கு தான் நினைப்பது கிடைக்கிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல் சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனை தான் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.

சொந்தமாக தொழில் நடத்தி வருமானம் பெற்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு அரசியலை இலவச கடமையாக செய்வோர் இந்த நாட்டில் மிக குறைவு!

அரசியலையே தொழிலாக நடத்துவோர் தான் மிக அதிகம்.

ஓர் அரசியல் வாதிக்கு திடீரென்று சொத்து வந்தது.வீடு வந்தது என்றால் அது எப்படி வந்ததென்று கேட்க வேண்டியவர்கள் மக்கள்.

சிலர் அதுமாதிரி கேட்கிறார்கள்.சிலர் இப்படி நமக்கு வராதா என்று ஆயாசப் படுகிறார்கள்.

அரசியல்வாதி மக்களுக்கு அரசியலில் மட்டும் தவறான வழியை காட்டவில்லை.நாணயத்திலும் நடத்தையிலும் அதே வழியை காட்டுகிறான்

பணம் எதையும் நிர்ணயித்துவிடுகிறது.

ஓர் அயோக்கியனை யோக்கியன் என்று காட்டுவதற்கும் அது பயன்படுகிறது

பல நேரங்களில் அரசியல் தொண்டர்கள் மீது நான் பரிதாப்படுவதுண்டு.

அவர்களில் பலர் கள்ளங்கபடமே அறியாதவர்கள்.

அதனால் தான் அவர்கள் தலைவர்களாக வரமுடியவில்லை

அரசியலில் கார் வாங்கியவனும் வீடு வாங்கியவனும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறான்.

கால் போனவனும் கண் போனவனும் என் கண்ணுக்கு தெரிகிறான்

யாரை நோவது?

மக்களை தவிர யாரை நோவது?

ஒவ்வொரு தடவையும் எரியாத விளக்குக்கே எண்ணெய் ஊற்றி பழக்கப் பட்டுப்போன மக்கள் இப்போது மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்?

அழகான பேச்செல்லாம் அவர்களுக்கு உண்மையாகவே தோன்றுகிறது.

ஏன்?

படித்தவனுக்கே அப்படிதான் தோன்றுகிறது.படிக்காதவன் நிலை என்ன?

உணர்ச்சி பூர்வமாக தோன்றுகிற உண்மைகளை இதுவரை எந்த அரசியல்வாதி வெளியிட்டிருக்கிறான்?

ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து கூட்டம் முழுக்க நம்பி தன் பக்கம் வந்தவுடன் மெதுவாக அந்த பொய்யிலிருந்து அவனும் வாபசாகி தன்னுடைய கூட்டத்தையும் வாபசாக செய்து அந்த வெறுங் கூட்டத்துக்கு தலைவனாகி விடுகிறான்

என் அனுபவத்தை சொல்லுகிறேன்.

திராவிட நாடு என்பது வெறும் கற்பனை.அது கிடைக்காது என்று தெரிந்தே திராவிட நாடு கேட்டோம்.

ஆனால் திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மிக அழுத்தமாக ஓட்டினோம்

ஒரு கட்டத்தில் அது பற்றி விவாதித்து விட்டு நானும் சம்பத்தும் வெளியேறினோம்.

உடனே திமுக தலைவர்கள் "திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு கேட்போம்.சம்பத் ,கண்ணதாசனைப் போல கோழைகளல்ல நாங்கள் " என்று முழங்கினார்கள்.

அந்தோ! என்ன சொல்வேன்..

பதவிக்கு போகவேண்டும் என்று ஆசை வந்து ஆறாவது மாதமே அவர்களும் வாபசானார்கள்.

வாபசான அழகையும் நியாயப் படுத்தி தங்கள் கூட்டத்தை நம்ப வைத்தார்கள்.அவர்களும் நம்பினார்கள்.

நாத்திக துவேஷம்,சுயமரியாதை,பார்ப்பன துவேஷம் எல்லாம் வாபசான கதையும் இதுதான்..

காலங்களாலே கருத்துகள் மாறலாம்

ஆனால் இதை மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தே ஒரு கருத்தை சொல்வது கிரிமினல் குற்றம்.

நியாயங்கள் தெளிவாக தெரியும் போதே அநியாயங்களுக்கு துணை போகிற மக்கள் உருப்படாத பிள்ளைகளைதான் தலைவர்களாக பெறுவார்கள்.

ஓர் அரசியல் தலைவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு பிறகு அவர் போடும் கோடெல்லாம் ஓவியம்,அவர் கத்தும் வார்த்தைகள் எல்லாம் காவியம் என்று விஞ்ஞான விளக்கம் கூறும் மக்கள் அந்த தலைவர் தவறு செய்வதாக சொன்னால் என்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் என்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த தலைவரும் தவறு செய்வதையே தேசியமயமாக்கி விடுகிறார்.

ஜனநாயகம் வருஷா வருஷம் பாடம் போதிக்கிறது.ஒரே பாடத்தை திரும்ப திரும்ப போதிக்கிறது.

மக்கள் எனும் மக்குகள் இதுவரை ஒரு பரிட்சையில் கூட பாஸ் பண்ணவில்லை !

-- கண்ணதாசன்

Tuesday, February 8, 2011

சாந்தி தெரு - 2 காமன் சென்ஸ்

துங்கும் நேரத்தை தவிர மற்றநேரங்கள் எல்லாம் எப்போதும் இரைச்சல் தான் சாந்தி தெருவில் .அங்கே வசிக்கும் ஜனங்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் நாள் தவறாமல் நடக்கும்.பெண்களே ரிப்பன் வெட்டி சண்டையை துவக்கி வைப்பார்கள்.குழாயடியில் தண்ணீர் சண்டை,வாசல் பெருக்குவதில் எல்லைச் சண்டை,குப்பை கொட்டிவதில் சண்டை,பிள்ளைகள் தெருவில் புரண்டு கொண்டால் பெரியவர்களும் வயது பார்க்காமல் புழுதியோடு புரண்டு சண்டை,பெண்களில் ஒருத்தி மற்றவள் புருசனிடம் சரசம் செய்வது பற்றிய சண்டைகளால் தொண்டை கிழிய மூர்க்கமான குரல்கள் எழும்.

முன்பொருமுறை எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பார்த்தோம்.அதன் பிறகு 'காமன் சென்ஸ்' விவகாரத்தால் அடுத்ததாக பரபரப்படைதிருந்தது சாந்தி தெரு.

அதே நான்கு வீடுகளில் 2 நம்பர் வீட்டில் புதிதாக குடிவந்திருந்தாள் வனிதா என்ற நடுத்தர பெண்.கணவனும்,4 ஆம் வகுப்பு பையனுமாக குட்டி குடும்பம்.வனிதாயின் முகச்சாடைஎப்படி என்றால் சாந்தமாக பார்த்தாலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.கோபமாக பார்த்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. கொஞ்சம் கர்வியும் கூட.டிகிரி ஏதோ படித்திருந்ததால் தன்னை சுற்றி உள்ளே அனைவரும் தன்னை வணங்க வேண்டியவர்கள் என்று ஒரு நினைப்பு.தன் 4ஆம் வகுப்பு மகனுக்கு தானே டியுசன் எடுப்பாள்.6 யும் 4 யும் பெருக்கினால் 22 என்று டியுசன் எடுக்கும் அளவுக்கு அறிவு ஜீவி.தப்பு தப்ப சொல்லி கொடுக்காதம்மா..என தினமும் பையன் அம்மாவிற்கு டியுசன் எடுப்பான்.ஆனாலும் அவளின் மிடுக்கு மட்டும் குறையாது.

வனிதாவின் பக்கத்துக்கு வீட்டில் காமாட்சியின் குடும்பம்.பையன் காலேஜிற்கும் பெண் 10 வகுப்பும் படிக்கிறார்கள்.காமாட்சிக்கு எப்போதும் நியாயம் தான்.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு பேச்சுக்கள் தான்.சண்டைகளில் காமாட்சி சேலையை தூக்கி சொருகினால் எதிரில் ஒருவரும் நிற்கமாட்டார்கள்.விடு ஜூட்..!

இப்படியான ஒரு நாளில் வழக்கம் போல் சூரியன் உதிக்க பொழுது புலர்ந்தது.வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.காமாட்சி மோட்டாரை போட வெளியே வந்தாள்.ஒயரை எடுத்து வனிதாவின் வீட்டின் குறுக்காக கொண்டு சென்று பிளக்கில் சொருகி சுவிட்சை போட்டாள்.வனிதா வீட்டருகில் தான் சுவிட்ச் இருந்தது.காமாட்சி போய்விட்டாள்.

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்குமோ என்னமோ,வனிதா வெளியே வந்தாள்.தனக்கு குறுக்காக ஒயர் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.ஒயரைதாண்டிகொண்டு வெளியே போக முடியாது.பையனோடு கத்திக் கொண்டு வெளியே வந்த அவள் கோபத்தை ஒயரின் மேல் காட்டி அதை வெடுக்கென்று கழற்றி வீசினாள்.பதிலுக்கு ஒயரும் தன் கோபத்தை காட்டவேண்டுமல்லவா...அது அறுத்துக் கொண்டு தொங்கியது.ஒயர் அறுந்துவிட்டதை பார்த்து திடுக்குற்றாள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறுந்த ஒயரை பாங்காக சுற்றி வைத்து விட்டு தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பாந்தமாக உள்ளே சென்று விட்டாள்.

பத்துநிமிடம் ஓடியும் தண்ணீர் வரவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த காமாட்சி என்ன என்று எட்டிப் பார்க்க வந்தாள்.ஒயர் அந்துபோய் கிடந்தது.அந்த காட்சியை பார்த்ததும் அம்மாளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.ஆனால் என்ன இயற்கை அதிசயமோ ரொம்ப அமைதியாக "இது யாரு இப்படி அத்துப் போட்டது?" என்று கேட்டுக் கொண்டே வனிதாவின் வீட்டை நோக்கினாள்.

அந்த பெண்மணியோ"யாராவது வேணும்னு அத்து போடுவாங்களா?"என்று திருப்பி கேட்டாள் கடுகடுவென்று.

"இது என்னடியம்மா..வேணும்னு புடுங்கி போட்டீங்களானா கேட்டேன்.யாரு இப்டி பண்ணதுன்னு தானே கேட்டேன்.அதுக்கேன் சண்டைக்கு வர"

"ஆமாமா...காலங்காத்தாலே உங்கள மாதிரி எங்களுக்கு வேளை வெட்டி கிடையாது பாருங்க..சண்டைக்கு அலையிறாங்க..நீதாமா சண்டைக்கு வந்த..உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட காமன் சென்சே கிடையாதா..?"அவள் கத்திக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

"ஆ..."

காமாட்சியம்மாள் வாயடைத்து நின்றுவிட்டாள். அந்த ஒயர் கூட திறந்த வாய் மூடவில்லை.

காமாட்சி தலைகுனிந்த படியே வீட்டிற்குள் வந்தாள்.அவள் ஒன்றும் பேசவில்லை.காமன் சென்சுக்கு அர்த்தம் புரியவில்லை.அவள் ஏதோ தனக்கு புரியாத ஒன்றை சொல்லி வாயடைத்து விட்டாள் என்று சோகமாக உள்ளே வந்தாள்.தன் பையனை அழைத்தாள்.

"அவ ஏதோ இங்கிலீசுல சொன்னாலே,அதுக்கு என்னா அர்த்தம்..? அவள் அப்பாவியாக கேட்டதை பார்த்து பையன் சிரித்தான்."என்னா வார்த்த?"

"அவ ஏதோ கம்னோ..காம்மன்னோ...தெரிலடா..ஏதோ சொன்னா"

"அது காமனுமில்லா..சோமனுமில்லா.. காமன் சென்ஸ்"

காமாட்சி உற்சாகமாக "அதான்..அது தாண்டா..அப்டினா.."

"பொது அறிவுன்னு அர்த்தம்"

"அப்டின்ன..பொது அறிவில்லனா சொன்னா"அவளுக்கு ஆத்திரம் வந்தது.

"இல்லை. இல்லை.அதுக்கு சரியான அர்த்தம் அறிவு கெட்டவள்னு அர்த்தம்.பையன் தன் பங்கினை சிறப்பாக முடித்து கொண்டு பையை தூக்கி கொண்டு ஓடியே விட்டான்.

காமாட்சிக்கு உடம்பு நடுக்கியது.ஆத்திரம் பொங்கியது. படபடவென்று சேலையை தூக்கி சொருகினாள்
நேராக வனிதாவின் வாசலுக்கு வந்தாள்.

"ஏண்டி..எவ்ளோ திமிர் இருந்தா என்ன அறிவு கெட்டவன்னு சொல்லுவ..நீதாண்டி அறிவு கெட்டவ..உங்கப்பே,,ஆத்தா பெத்த மானங்கெட்ட ஜன்மம்..(டேஷ்..டேஷ்...)காமாட்சி ஜிங்கு ஜிங்கென்று சாமியாடினாள்.வனிதாவின் குடும்ப மானத்தை கப்பலேற்றும் கடமையில் பிஸியாக இருந்தாள்.

வனிதாவும் பதிலுக்கு கத்தினாள்.

அந்த தெருவில் இருந்த சோம்பேறி கூட்டமொன்று இந்த கலாட்டாவை கண்டுகளிக்க..ஒருவரும் வந்து தடுக்கவில்லை.அதுவுமில்லாமல் இவ்வளவு பெரிய தமாஷை நிறுத்த யாருக்கு தான் மனம் வரும்.
சண்டை தொடர்ந்தது.ஒருவரை ஒருவர் மாறி மாறி சபித்து கொண்டனர்.

திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற வனிதா பக்கத்திலிருந்த சீவக்கட்டையை எடுக்கு போக,அதுவரை வேடிக்கையில் சிரத்தையாக இருந்த அவள் கணவனுக்கு எங்கிருந்தோ வீரம் பொத்துக்கொண்டு வர அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.வனிதா மிரண்டு போய் ஸ்தம்பித்து நின்றாள்.அவமானத்தால் வெடுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவன் திரும்பி காமாட்சியம்மாவை பார்த்து "அவ செஞ்சதுக்கு நாம் மன்னிப்புகேட்டுக்கறேன்..."அவனும் உள்ளே சென்றுவிட்டான்.அவள் ஒன்றும் சொல்லாமல் மனதிற்குள் தான் செய்ய நினைத்ததை அவன் செயலாக்கியத்தை உள்ளுர மகிழ்ந்தாள்.

இத்தோடு சண்டை இனிதே முடிவடைந்தது.இறுதி வெற்றி காமாட்சிக்கே!

அவன் மன்னிப்பு கேட்டது அவளுக்கு கூச்சமாக போய்விட்டது.ஒரு ஆம்பிளை..மன்னிப்பு கேக்கறான்..இந்த பஜாரிக்கு இப்டி ஒரு புருஷன் என்று முணுமுணுத்து கொண்டே தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒயர் என்ன நினைத்திருக்கும்?


--
yalini

Friday, February 4, 2011

புது மாதிரிக் கதை



"கதையில் ஒன்றும் புதிதாக இல்லையே..இந்த மாதிரி கதை ஒன்றை பிரெஞ்சு பாஷையில் படித்தது எனக்கு நியாபகத்துக்கு வருகிறது"

இது ஒரு அண்டப் புளுகு..அவனுக்கு பிரெஞ்சு பாஷையில் ஒருவரி கூட படிக்க தெரியாது.அதை அவனுக்கு எடுத்து கட்டினேன்.

"தப்பாக சொல்லுகிறாய்..இது பிரெஞ்சு கதையல்ல.ஜெர்மன் கதை.அந்த பாஷையில் தான் நான் இதை படித்தேன்.நீயும் அதில்தான் படித்திருக்க வேண்டும்."

இருவருக்கும் அந்த பாஷையில் ஓர் அட்சரம் கூட தெரியாது.அதனால் என்ன தமிழிலேயே புளுகுவதற்கு?

--கொனஷ்டை.