Friday, December 31, 2010

நாளை மற்றுமொரு நாளே!

பூமி சுற்றுவது நிற்கப்
போவதில்லை.

சூரியன் தன் பணியை
நிறுத்தப்போவதில்லை

கடல் அலைகளில் மாற்றம்
ஒன்றுமில்லை

இந்த பிரபஞ்சத்தின் பணியோ
மாறப் போவதில்லை

பஞ்சபூதத்தின் பலன்களும்
எப்போதும் போலவே !

செவ்வனே சுற்றும் பூமியை
கூறுபோடும் மனிதனின் பேராசை
அடங்கப்போவதில்லை!

மக்களை சுரண்டும் 'தலைவர்களுக்கு'
மான ரோஷம் அது எப்போதும் வரப்போவதில்லை

இது எதையும் கண்டும் காணாமல்
செல்லும் ஏமாளி கோமாளிகளாகிய
நாமும் திருந்தப் போவது இல்லை

பிச்சை எடுக்கும் சிறுவர்களையும்
சோற்றுக்கு சாகும் மனிதர்களும்
நம் நினைவுக்கு என்றும் வரப்போவதில்லை!

தொலைகாட்சி அலங்கோலங்களும்
அதை பார்த்து ரசிக்கும்
ரசிகனின் மனநிலை மாறப் போவதில்லை

வெள்ளித்திரை மனிதர்களின்
தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும்
மானங்கெட்ட நிலை மாறப்போவதில்லை !

காசை கரியாக்கி வணிக
நிறுவனங்களை
வாழ வைக்கும் மக்களுக்கு
புத்தி வரப்போவதில்லை

ஒரு வேலை சோற்றுக்கு சாகும்
மனிதர்களுக்கும்,
கல் சுமக்கும் கூலி தொழிலாளிக்கும்

நாளை மற்றுமொரு நாளே !

Thursday, December 30, 2010

நீயும் நானும் ஒன்று!

அடுத்த வேலை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...

நீயும் நானும் ஒன்று!


தமிழனாய் இருந்துக்கொண்டு தாய்மொழியை மதிக்காதவர்களையும்
இன உணர்வு இல்லாதவர்களையும் கண்டு
உன் உள்ளம் கொந்தளித்தால்...
நீயும் நானும் ஒன்று!


சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..

நீயும் நானும் ஒன்று!


இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும் அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்

நீயும் நானும் ஒன்று!


வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்

நீயும் நானும் ஒன்று!


குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்

நீயும் நானும் ஒன்று!


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே - சேகுவேரா

Saturday, December 18, 2010

அந்த கடவுளுக்கு இது தெரியுமா?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது கடவுள் கேட்டுக்கொண்டிருப்பார்...நம் மீது அக்கறை கொள்வார் என மனத்துயர்களை பகிர்ந்து கொள்வது.அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயிலுக்கு போகின்றனர். வழிபடுகின்றனர்.

கோயில் என்றதும் மனதில் பல சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம்,அகன்ற வாசல் கதவுகள்,வெண்கல குமிழ் பதித்த படிகள், கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூசிய யானை, உள்ளே நுழைந்தால் செவியை நிறைக்கும் மங்கள இசை, அபூர்வமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தூண்கள்,சுவர் ஓவியங்கள்.அந்த ஓவியங்களை கூட உயிர் பெறச்செய்யும் ஓதுவாரின் தெய்விக குரல். கல் விளக்குகள்,அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

நீண்ட அமைதியான பிரகாரம், அங்கே அமர்ந்து ருசி மிக்க பிரசாதம் உண்டு பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம்.இனி நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம் கொள்ளும் முகங்கள்.

கோயிலை விட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும்.

ஆனால் நடைமுறையில் தமிழகத்தில் உள்ளே புகழ் பெற்ற கோவில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசற்படியில் ஆரம்பித்து வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல் வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்கு செல்லும் குற்றவாளி கூட மனத்தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ கோயிலுக்கு சென்று நிம்மதியை தொலைத்து வந்த கதைதான் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது.கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள்,கையூட்டுகள்,அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றிருந்தோம்.ஒரு நபருக்கு மொட்டை போடுவதற்கு 50 கட்டண சீட்டு பெற்று அங்கிருந்த நாவிதரிடம் சென்றோம்.அவர் தனியாக தனக்கு 50 ரூபாய் தரவேண்டும் என சொல்லிவிட்டார். நாங்கள் சீட்டை காட்டினாலும் அதெல்லாம் முடியாது என வாக்குவாதிட ஆரம்பித்து விட்டார். சுகாதாரமற்ற பிளேடு.குளிப்பதற்கு சுகாதாரமில்லாத அழுக்கான தண்ணீர் குழாய்.குளியல் அறையில் குளிக்க வேண்டுமானால் தனியாக 50 ரூபாய்,சந்தனத்திற்கு தனியே 40 ரூபாய்,வெறும் பூ மாலையும் ,தேங்காயும் இருந்த பூஜை பொருட்கள் 200 ரூபாய்.

உள்ளே செல்ல பொது தரிசனம், சிறப்பு தரிசனம் வி.ஐ.பி.தரிசனம் என மூன்று வகை.ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். ஆளுக்கு 250 ரூபாய்சிறப்பு தரிசன சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தால் நீண்ட வரிசை.எப்படியாவது முண்டியடித்து உள்ளே சாமியை பார்க்கலாம் என்றால் எதாவது ஒரு பிரமுகர் சாமியை மறைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் செய்வது போல சிறப்பு பூஜை செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சில 500 ரூபாய்களை பார்க்கும் அர்ச்சகர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே. காணிக்கைகளை உண்டியலில் போடாதிர்கள்...தட்டில் போடுங்கள் என்ற ஓயாத குரல்கள்.

சாமியை தரிசித்து வெளியே வந்தால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. பிரசாதம் வாங்கலாம் என்றால் கொள்ளை விலை.ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்.கோயில் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுக்ககூடாது என மிரட்டியது அந்த வெள்ளைக்காரர் ஒரு 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.வாங்கி கொண்டு சிரித்தபடியே வெளியேறினார் அந்த ஊழியர்.

சில வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை சென்றுருந்தேன்.'நினைத்தாலே முக்தி'.. பேசமால் நினைத்துகொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம்.ஏன்டா போனேன் என்றாகிவிட்டது.

படுமோசமான சாலைகள்,ஒரு அடிக்கு ஒரு பள்ளம்,பஸ்ஸில் போனால்,அதன் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸும் குலுங்குகிறது.அந்த லட்சணத்தில் சாலைகள். சாக்கடையில் இருந்து குப்பைகளை மலை மலையாக சாலையில் குவித்து வைத்திருக்கிறார்கள். சுத்தப்படுத்த ஆட்கள் இல்லை. அது மீண்டும் மழை வந்து சாக்கடையிலேயே கலக்கிறது. சாலையில் எங்கே பார்த்தாலும் குப்பை கூளங்கள் தான்.

இந்த பிரசித்தி பெற்ற கோவிலை சுற்றி இந்த அலங்கோலங்கள். ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஸ்டிரைக் செய்து பார்கலாமே. அப்போதாவது சரி செய்வார்கள் அல்லவா இந்த சாலைகளை'என்றேன். அதை எல்லாம் செய்து பார்த்துட்டோம்மா... உள்ளூர் மக்கள் சேறும் சகதியுமாய் இருந்த சாலைகளில் நாற்று நாட்டு விவசாயமே பண்ணி போராட்டம் நடத்திட்டோம்.ஒருத்தரும் கண்டுக்கிறதில்லை..' என்று வருத்தப்பட்டார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பாதை முழுக்க குப்பைகள் தான். அசுத்தம் தான். கோயில் நிர்வாகமோ, அரசோ எதுவும் கண்டுகொள்வதில்லை.

எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள். அவர்களை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. நமது மோசமான சாலைகளையும்,நாற்றமெடுத்து கிடக்கும் சாக்கடைகளையும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள், டன் கணக்கான எடை கொண்ட கற்களை எப்படி சாரமேற்றி மேலே கொண்டு சென்றிருப்பார்கள்,உள்ளே நந்தியின் சிலை மிகப்பெரியது.அதை தாங்கிகொண்டிருக்கும் கல் எவ்வளவு டன் எடையிருக்குமோ?..அவர்களின் உழைப்பிற்காவது,கற்பனை திறனுக்காவது மரியாதை தருகிறார்களா?

மிதியடிகள் பாதுகாப்பு இலவசம் என்று வெறும் போர்டு மட்டும் தான். அதற்கு தனியாக 5 ரூபாய். பூஜை பொருட்களுக்கும் கொள்ளை விலை. உள்ளே சென்றால் அர்ச்சகர்களின் கொள்ளை.தட்டில் காசு போடுங்கள் என மிரட்டி பிடுங்குகிறார்கள். தானாக ஒருவர் வந்து சந்தனத்தை நெற்றியில் வைத்துவிட்டு 5 ரூபாய் கொடுங்க என வாங்கிக்கொண்டார். அங்கே இருக்கும் சிவனுக்கு மரியாதையோ, பயமோ இல்லை.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படி கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது.காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தியில்' குணசேகரன். ஆனால் இன்று தமிழக கோயில்களைபோல பக்தர்களை துச்சமாக அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் ஹரித்துவார் கும்ப மேளாவில் கூட ஓர் இடம் அசுத்தமாக இல்லை. குப்பைகள் ,கழிவுகளை காண முடியாது.அவ்வளவு தூய்மை.தரிசனம் துவங்கி சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம் . ஆனால் தொடரும் தமிழக கோயில்களின் அவலத்தை போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால் கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

Tuesday, December 14, 2010

தேர்தலில் யாருக்கு வோட்டு போடுகிறீர்கள்?-சில டிப்ஸ்

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவதாக தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. உங்கள் குழப்பத்தோடு என் குழப்பத்தையும் சேர்க்க விருப்பம் இல்லை. ஆனால் ஓட்டு போடுவது முக்கியம். காரணம் ஏதோ ஒருவிதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை ,வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள். அதன் நிதர்சனங்கள் இவை.

சட்டப்பேரவையில் எதாவது ஒரு திராவிட கட்சிதான் ஆட்சிசெய்ய முடிகிறது.
ஊழலிலோ, அசாதனைகளிலோ, இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

வேட்டிக்கரையை உற்றுப்பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது

அதனால் தான் தமிழ் நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டி போட்டு இவர் போதும் அடுத்து நீ வாய்யா..நீ வந்து சுரண்டு.முதல் வருஷமாவது மக்களுக்கு எதாவது செய். என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையை குழப்பினாலும் நெகடிவ் ஓட்டு என்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசை பொறுத்தவரை அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி.முதலான இந்தி வளையமும், பசுமாடும் தான். அ.தி,மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களை புரட்டினால் தலை சுற்றி உடனடியாக ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து , விலகி, மீண்டும் சேர்ந்து ,விலகிய இந்த விளையாட்டில் யாருக்கு போட்டாலும் ஏமாறப்போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலை படித்தவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நடுத்தர மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளை குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி-சேலை, பக்கெட் பிரியாணி என்று எதாவது கொடுத்து போட வைத்து விடுவார்கள். நடுவாந்திரம் தான் ஓட்டு போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து நகம் வெட்டிக்கொண்டே எஃப் டிவி பார்த்துகொண்டிருப்பர்கள் . அதனால் வோட்டுசாவடிக்கு போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி.கார்டு இல்லையென்றாலும் வோட்டு போடலாம்..போட வேண்டும். யாருக்கு என்றால் கீழ்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

1 . இருப்பதற்குள் இளைஞர்,அல்லது அதிகம் படித்தவர்க்கு வோட்டு போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதி என்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்து பாருங்கள். டிவியில் பார்த்தால் போதாது. உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியில் இருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2 . உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக ஓட்டு போடுகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி,மக்கள்,டிரைவர் ,வேலைக்காரி ,அல்சேஷன் எல்லாருக்கும் சொல்லலாம்.

3 . யாருக்கு என்று தீர்மானிக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்து வோட்டு கேட்டவருக்கு போடுங்கள். தலையையாவது காட்டினாரே !

4 . உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள். முப்பது விழுக்காடு என்று ஜல்லியடித்துகொண்டிருக்கிறார்கள்.ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். அலங்காரத்துக்கு நிற்கும் நடிகைகளை தவிர்க்கவும்

5 . இதற்கு முன் இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால் அவர் ஆட்சிகாலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையை கட்டியிருக்கிறார் என்றால் அவருக்கு போடலாம். எனவே போடுவதற்கு முன் முகம், அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி பிரதி வைத்து கொள்ளவும். அதை காட்டி ''இதில் நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? '' என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள்.யாராவது நிலையான ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி என்பது இனி சாத்தியம் இல்லை.

6 .சுயேச்சைகளுக்கு போடாதீர்கள்.வேஸ்ட்.

7 .கொஞ்ச நாள் தையா தக்கா,ஆட்டம் பாட்டம், சிக்கு-புக்கு ,முக்காபுலா, போன்ற அறிவு சார்ந்த ப்ரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய்,ரபி பெர்னாட் நடத்தும் தேர்தல் நிகழ்சிகளை பாருங்கள். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும், அல்லது தலைவரும் டிவியிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் திருட்டு முழி முழிக்காதவராக , யாரை பார்த்தால், இவர் எதாவது செய்வார்,முதல் நாளே உள்ளங்கை அரிக்காது என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம். (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது )அல்லது கோர்வையாக பத்து வார்த்தைகள் பேச தெரிந்திருந்தால் போடலாம்.

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும்.ஆனால் கட்டாயம் வோட்டு போடுங்கள். அது அவசியம்.

பார்லிமென்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுகொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்த கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்து கொண்டு ,மரமேஜைகளை தட்டி வெளியென்ற விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருக்கிறது.அது முன்னேற்றத்துக்கான அறிகுறி.அது இப்போது மனிதர்களை சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இத்தனை பாவாத்மாக்கள் இருந்தும் தவறாம பெய்கிறது.

தயவு செய்து வோட்டு போடுங்கள். 'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை ஓட்டை வைத்துகொண்டு இந்த தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும். jokes apart.please vote.its your sacred duty.

--சுஜாதா


Sunday, December 12, 2010

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

நேற்று பாரதியாரின் பிறந்த நாள். தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை பேருக்கு தெரியும்?.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள். அதற்கு டிவி , பத்திரிக்கையில் பண்ணுகின்ற அக்கிரமங்கள் தாங்க முடியலை.காலையில் இருந்து டிவி யில் ரஜினி ரஜினி தான். ஆனால் அதற்கு முன்தினம் பாரதியின் பிறந்த தினத்திற்கு ஒரு செய்தியையும் காணவில்லை. அப்படி ஒருவர் இருந்தாரா என கூட கேட்டுவிடுவார்கள் போல .

நடிகர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என மீடியாக்கள் அவர்கள் பின்னாலேயே ஓடுகிறார்கள் என தெரியவில்லை. எல்லாருக்கும் இருக்கும் ரத்தமும் சதையும் தான் அவர்களுக்கும் உள்ளது. அவங்களும் சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கும் உடல்நலமில்லாமல் போகும். மரணம் வரும். என்னத்தை தான் காண்கிறார்கள் அந்த 'சுதந்திர தியாகிகளிடம் '?

நடிகர், நடிகைகளுக்கு இந்த மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

சன் டிவி செய்தி ஒன்று.. தமிழகத்தில் மழை வந்து வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அவர்களுக்கோ நடிகை பாக்கியலட்சுமி 'காதல் செய்' படத்தின் வில்லன் என்னை கலியாணம் செய் என மிரட்டுகிறார் என்ற புகாரையே திரும்ப திரும்ப முக்கிய செய்தியாக காட்டிகொண்டிருந்தார்கள். நடிகை சரண்யா காணாமல் போய் விட்டார் . இது ஒரு நாள்.

விஜய் டிவி எல்லாதிற்கும் மேல். மன்மத அம்பு இசை வெளியீட்டிற்காக கமலை வரவேற்கிறார்கள். வரவேற்கிறார்கள்... அப்பாப்பா...ஒரே எரிச்சலாக இருந்தது

கன்னியாகுமரியில் வெள்ளத்தை பற்றி சிறப்பு செய்திகளோ, நிகழ்ச்சிகளோ ஒன்றும் இல்லை.

நண்பர் சொன்னார்.. '' எல்லாம் வியாபார நோக்கத்தோடு தான். நாளை ரஜினி இறந்துவிட்டால் அவரையும் மறந்து விடுவார்கள். பாரதியார் வியாபாரம் ஆகமாட்டார். ரஜினி இன்னும் கொஞ்ச நாளைக்கு' என்றார்.

ஆனால் உணர்வு என்பது யாருக்குமே இல்லையா? எல்லாமே இங்கு பணம் தான் !

திராவிடமும் ஊழலும்

Pls..அவசியம் படிங்க...

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.


15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.


படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

---- ஞாநி ----

Tuesday, December 7, 2010

ஏக தத்துவ அப்பியாசம் - யோகம்


''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

இது கண்ணதாசனின் வரிகள்.

நமது வாழ்கையில் இரண்டு கரைகள்.
வெற்றிகரை பசுமையாக இருக்கிறது. தோல்விக்கரை சுடுகாடாக காட்சியளிக்கிறது.

பசுமையான நிலப்பரப்பை விட சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதை பார்த்த பிறகும் அடுத்து வருகின்றவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானதென்றே கருதுகிறான்.

அந்த சுடுகாட்டில் அலெக்ஸாண்டரை பார்த்த பிறகும் அகில ஐரோப்பாவுக்கும் முடி சூட்டிக்கொள்ள முயன்று அங்கேயே போய் சேர்ந்தான் நெப்போலியன்.

அந்த நெப்போலியனின் எலும்புக்கூடு சாட்சி சொல்லியும் கூட உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்கு பக்கத்திலேயே படுக்கை விரித்துகொண்டான் ஹிட்லர்.

அந்த ஹிட்லரை எப்போதும் தனியே விடாத முசோலினி அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டு போய் அவனுக்கு இடம் தேடி வைத்தான்.

அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜாம்பவான்கள் , ஜார்ஜ் பரம்பரைகள் , லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிகொண்டிருக்கிறார்கள்

வாழ்கை நிலையில்லாதது !

''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

அந்த ஒரு வெற்றி, இனிமேல் நாம் செய்வதெல்லாம் சரி என நம்மை நம்ப வைக்கிறது.ஆணவம் கொள்ளசெய்கிறது.

ஆனால் தோல்வியடையும் போது நேரெதிராக புதைகுழியில் புதைந்து விடுகிறது.நம்மை போல பாவப்பட்ட ஜென்மம் உலகிலேயே இல்லை என குமுறுகிறது.

இந்த நிலைகளுக்கெல்லாம் என்ன காரணம்?

நமது மனம் தான்!

ஒழுங்கில்லாமல் சுற்றும் மனதோடு நாமும் அலைவதால் ஏற்படும் விளைவுகள்.

நாம் மனதினால்தான் எண்ணுகிறோம். அதன் வழியாகவே செயல்கள் புரிகிறோம்.அதன் பலன்கள் எல்லாம் மனதை தான் பாதிக்கும்.அலைகழிக்கும்.

நல்லதை நினைத்தால் நல்லபடியாக இருக்கும்
தீயதை என்றால் பலனும் மோசமாகத்தான் இருக்கும்

''மனம் எனும் மாயை''
''மனமே ஆன்மா'' என்பார்கள்.

அதை வளப்படுத்தும் பயிற்சிகள் பல உள்ளன. அதில் ஒன்று 'குண்டலினி யோகம்' .

ஜெயா டிவியில் காலைமலரில் யோகேஸ்வர் கார்த்திக்ராஜா அவர்கள் சொன்ன பயிற்சி முறை தான் 'ஏக தத்துவ அப்பியாசம்'. வாழ்க்கைக்கு அவசியமான அனைவரும் பின்பற்ற வேண்டிய தத்துவம்.

அதாவது நாம் தினந்தோறும் செய்யும் செயல்களின் ஒவ்வொரு நிலையிலும் 'அனித்யத்தை' உணர்வது. கடைபிடிப்பது.

அனித்யம் என்றால் இது நிலையில்லாதது. இதுவும் முடிந்து விடக்கூடியது என அர்த்தம்.

நீங்கள் காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறீர்கள். ஒவ்வொரு துளி காபியும் தொண்டையில் இறங்குகிறது. அதன் சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம்.இந்த நிலையில் அநித்தியத்தை உணர்வது. .... மீண்டும் அந்த காபியை குடிக்கிறோம். தொண்டையில் இறங்குகிறது. சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம். இந்த ஒவ்வொரு நிலையிலும் இது அனித்யமானது என்ற எண்ணத்தை நம் மனதில் செலுத்துவது 'ஏக தத்துவ அப்பியாசம்'.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதை ஒரு பயிற்சியாக ஒவ்வொரு செயலிலும் செய்ய செய்ய மனம் சமநிலையில் இருக்கும். இதில் ஆழ்ந்து விட்டால் இன்பம் , துன்பம் போன்ற எந்த மாதிரி நிலையிலும் நமது மனம் பாதிக்கப்படாமலும் சமநிலை இழக்காமலும் இருக்கும்.

நமது மனமானது பாசிடிவ் சம்பவங்களையே விரும்புகிறது.அதுவே மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கும். ஆனால் அவற்றை விரைவில் மறந்துவிடும்

ஆனால் நெகடிவ் சம்பவங்களை மனம் விரும்புவது இல்லை. அப்படி நடக்கும் சம்பவங்கள் நமது மனதை விட்டு நீங்குவதும் இல்லை

எந்த மாதிரி மகிழ்ச்சியான மனநிலையிலும் கவலையான நிலையிலும் நாம் இருக்கும் போது இது அனித்யம் அனித்யம் என்று உணரும் போது உணர்ச்சி வேகத்தில் இருக்கும் மனநிலை சமநிலைக்கு வந்துவிடும்.

அதாவது இது நிலையில்லாதது. இந்த நிலை மாறும்

இதை பலமுறை செய்தால் தான் உணர முடியும். காலையில் இருந்து ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் எண்ணங்களிலும் அநித்தியத்தை உணரும் போது தான் அதன் பலனை நாம் உணர முடியும்.

வெற்றி, தோல்வி, ஏமாற்றம், துரோகம் என எல்லாவற்றினாலும் பதிக்கப்படும் மனதை சீர்படுத்த வேண்டியது நமது கடமையே. ஒரே ஒரு நாள் உங்கள் மனதை நினைத்து பாருங்கள் .அதில் என்ன என்ன விதமான எண்ணங்கள் வந்து அலைகிறது, எவற்றினால் குழம்பிபோகிறது, என பார்த்தால் பல உண்மைகள் உங்களுக்கே புரியும்.

இதற்கு இந்த ஏகதத்துவம் ஒரு நல்ல யோகம்.


Thursday, December 2, 2010

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் - சுஜாதா

Things you would never know without the movie industry.. என்று என் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவிற்கு வந்த மின்னஞ்சல் ஒன்று. ஹாலிவுட் சினிமாக்களில் தான் இவை எல்லாம் பார்க்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.


1 . என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக தான் இருக்கும்.

2 . இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர்

3 . பாம் வெடிப்பதை தடுக்க வேண்டும் எனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.

4 . எவ்வளவு பேர் கதாநாயகனை தாக்க வந்தாலும் ஒவ்வொருவராகத்தான் வந்து உதைபடுவார்கள்.

5 . அதுவரை மற்றவர் உதைபட தங்கள் முறை வரும் வரை சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

6 . ராத்திரி படுத்துக் கொள்ளும் போது பெட்ரூம் விளக்கை அனைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும். என்ன, கொஞ்சம் நீலமாக தெரியும்....அவ்வளவுதான்

7 அழகான இருபத்திரண்டு வயது கதாநாயகி அணுஆயுத நியூக்ளியர் ரகசியங்களிலும் கம்ப்யூட்டரிலும் எக்ஸ்பெர்டாக இருக்க முடியும்

8 விசுவாசமுள்ள , கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டையர் ஆவதற்கு பத்து நாள் முன்பு சுட்டுகொள்ளப்படுவார்

9 வில்லன் கதாநாயகனை நேரடியாக சுட்டு கொள்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள், பியூஸ்கள் , விஷவாயுக்கள், சக்கரங்கள், லேசர் அல்லது சுறாமீன்களிடம் விட்டு விட்டு சுற்றி வளைத்து தான் கொல்வான். நாயகன் தப்பிக்க முப்பது நிமிஷமாவது கிடைக்கும்

10 போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக ஒரு நைட் க்ளப்பில் போய் விசாரித்தாக வேண்டும். பின்னால் மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்

11 எல்லா படுக்கைகளிலும் ஸ்பெஷலாக போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும், ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் (ஆண்கள் அப்போது சிகரெட் குடுத்தே ஆக வேண்டும்)

12 . யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும். கண்ட்ரோல் டவரிலிருந்து எப்போதும் சிகரெட் குடிக்கும் ஆசாமி பேசியபடியே இறங்க வைப்பான்.

13 . தண்ணீருக்கடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது.

14 . எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை நாயகன் இறக்க மாட்டான். எடுத்து காட்டி விட்டால் அடுத்த காட்சியில் அவன் க்ளோஸ்

15 . பாரிஸ் நகரில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் ஈபில் டவர் தெரியும்

16 . கதாநாயகன் வில்லனிடம் செமையாக அடி வாங்கும் போது வலி தெரியவே தெரியாது. ஆனால் நாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் 'ஸ்ஸ்... ஆ...' என்பான்

17 . ஒரு பெரிய கண்ணாடி காட்டப்பட்டால் அதன் மீது யாராவது தூக்கி வீசி எறியப்படுவார்

18 . காரில் நேரான ரோட்டில் நேராக போனாலும் நாயகி அடிக்கடி ஸ்டியரிங்கை திருப்புவாள்.

19 . எல்லா 'டைம் பாம் 'களிலும் வெடிக்க எத்தனை செகண்ட் பாக்கி இருக்கிறது என தெரிந்தே ஆக வேண்டும்

20 . போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் பண்ணதும் தான் கேசை துப்பு துலக்க தேவைபடுவார்.

21 . தெருவில் நீங்கள் நடனமாட தொடங்கினால் தெருவில் வரும் போகும் எல்லோரும் அதே தாளத்தில் ஆடுவார்கள்.

22 .பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் எதாவது வினோத சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்க சிக்கனமான உடையில் தான் நடந்து செல்வார்கள்.

23 .போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எப்போதும் நேர்மாறான குணமுள்ளவர்களாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

24 .ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் தங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள்



இவை பெரும்பாலும் நம் பாலிவூட், கோலிவூட் சினிமாக்களிலும் பொருந்துவதை நீங்கள் இது நேரம் உணர்ந்திருப்பீர்கள். கோடம்பாக்கத்துக்கு 24 க்கு மேல் அனுபந்தமாக சில விஷயங்கள் உண்டு.

25. உணர்ச்சி வசப்படும் காட்சியில் திடீர் என்று மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும். நாயகி வீட்டை விட்டு துரத்தப்படும் போது , டூயட்டின் போது, காதலின் போது எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மழையின் போது மட்டும் எப்போது அவள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் புடவை அணிய வேண்டும்

26 .பாடல் காட்சியில் ஒரு வரி மயிலாப்பூரிலும் அடுத்த வரி மியாமியிலும் பாடப்படலாம்

27 .ஒரே பாட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது உடை மாறலாம். நிறம் மாறலாம்.

28 .சட்டென்று எல்லா பிஜிஎம்மும் நின்று விட்டால் யாரோ செத்து போய்விட்டார்கள் என்பது உறுதி.

29 .கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த கட்டத்திலும் நுழைந்து உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றவாறும் சாட்சி சொல்லலாம்.

30 .'முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ணை வரசொல்லுங்கோ' என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போக போகிறாள் என்று அர்த்தம்.

31 இறுதியாக பாடலின் எந்த காட்சியிலும் எந்த வேளையிலும் எந்த லோகேஷனிலும் நாற்பது பெண்கள் வரலாம்.எல்லாரும் குட்டை பாவாடை அணிய வேண்டும்



இந்த வரிசையில் இன்னும் எதாவது விட்டு போயிருக்கிறதா?

Wednesday, November 24, 2010

மைனா - ஓர் உலக காவியம் !

திருப்பூரில் முதல் முறையாக டைமன்ட் தியேட்டரில் என் காலடி பட்டது மைனா படம் பார்பதற்காக.. (டைமன்ட் புனிதமடையட்டும்!). A Journey Of LoveStory நன்றாகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சலிப்பே இல்லை. மலைக்காட்டு பிரதேசத்தில் ஒரு பயண அனுபவம். கிளைமாக்சில் அந்த பெண் ஆட்டோவில் போகும் போதே நமது மனம் அலாரம் அடிக்க தொடங்கி விடுகிறது. சரி தான் ஏதோ நடக்கபோகிறது என்று. அதே போலவே 'சுபமாகவே' முடித்தார் இயக்குனர். இது ஒன்று தான் இடிக்கிறது?!

ஒரு உண்மை காதல் கதை என்றாலே காதலர்கள் சாக வேண்டும். அதுவும் ரத்த களரியோடு கொடூரமாக முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சினிமாவில் என்றில்லை.. உலக இலக்கியங்களிலிருந்து பார்த்தாலே இப்படி தான் இருக்கிறது. ரோமியோ-ஜூலியட் , லைலா-மஜ்னு.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஏன் இப்படி என தெரியவில்லை.

காதலர்கள் இறந்தால் அங்கே காதல் வாழ்கிறது
அந்த காதல் எங்கே சாகும் என்றால், அவர்கள் கலியாணம் முடிக்கும் போது.

ஒன்று இருவரும் சாக வேண்டும். இல்லை, நாயகனுக்கு பைத்தியம் பிடிக்கவேண்டும் அல்லது அவன் மட்டும் சாகவேண்டும். அப்போது தான் நாம் கண்ணீரோடு வெளியே வருவோம் அல்லது கனத்த மனதோடு புத்தகத்தை மூடி வைப்போம்.

சரி. நம் எல்லோர் வாழ்விலும் இந்த மாதிரி மைனா கதைகள் வந்திருக்கும்.

என்ன, சினிமாவில் ஒருத்தனுக்கு ஒரு மைனா என கதையளப்பார்கள். யதார்த்த வாழ்வில் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எத்தனையோ 'மைனாக்கள்' வந்து போகும்.

இந்த படத்தை பார்த்த போது எனக்கும் என் சிறுவயது 'மைனா' நினைவு வந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு 3 வயது. என் 'மைனா'விற்கும் அதே வயது. (மைனாவிற்கு ஆண்பால் என்ன?)

நகர அங்கீகாரதிற்காக போராடிகொண்டிருந்த எங்கள் கிராமத்தில் எங்கள் நட்பு. பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. எங்கும் ஒன்றாகவே சுற்றி திரிந்தோம். 3 வயதில் புழுதியோடு புரள்வதை தவிர வேறு என்ன தெரியும். அதையே செய்தோம். எப்போதும் ஒன்றாக கைகோர்த்து ஊரெல்லாம் சுற்றினோம்.பண்ணாங்கல் , தாயம், வயல் வெளி புல்வெளி என மைனா படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் என்னென செய்தார்களோ அதேபோல இருந்தோம். எங்களோடு யாரையும் செட்டு சேர்த்து கொள்வது கிடையாது . 5 வயது வரை இப்படியே ஓடியது. இப்படி சந்தோசமாக போய்கொண்டிருந்த எங்கள் நட்பில் ஒருநாள் இடி விழுந்தது.

என்னையும் என் 'மைனாவையும்' பள்ளியில் சேர்த்து விட்டார்கள். எப்போதும் பிரிந்திருக்காத நாங்கள் அழுது தீர்த்தோம். வேறு என்ன செய்ய? கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த உடன் கட் அடித்துவிட்டு வயல்வெளியில் எலிபிடித்து விளையாடி கொண்டிருந்தோம்.

உஷாரான எங்கள் பெற்றோர்கள் என்னை டவுனிற்கு கூடி போய்விட்டார்கள்.

சதிகாரர்கள் !

சின்னப்பெண் யாழினியால் என்ன செய்ய முடியும். அழுது அழுது ஓய்ந்து தூங்கிவிட்டேன் .

பிறகு பல வருடங்கள் கழித்து எனது பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு வந்தேன். அதுவரை இடையிடையே வந்தும் மைனாவை பார்க்க முடியவில்லை. அப்போது எனக்கு ஓரளவே மைனா நினைவு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் எங்கள் பாட்டியோடு பேசிகொண்டிருந்தான். என் பாட்டி உற்சாகமாக ''இவன யாருன்னு தெரியுதா?'' என கேட்டார்.

''தெரியலையே'' என்றேன்.

''உன் சின்ன வயசு பிரெண்டு .. சுரேஷு... மறந்துட்டியா .. எப்போ பாரு ஒன்னாவே சுத்திட்டு இருப்பீங்களே... அவன் தான் ''

நான் ஆர்வமாக பார்த்தேன்.. ஆனால் அவனை பார்த்த போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. தேமே என நின்றுகொண்டிருந்தேன். அவனும் என்னை சட்டை செய்துகொள்ளவில்லை.

எங்கள் பிரிவு எங்கள் நட்பை அழித்து விட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு உன்னத காவியம் இதோடு முடிந்துவிட்டது .

இவ்வாறாக எனது வாழ்வில் மைனா காவியம் இதோடு முடிந்து விட்டது. ஒரு உலக காவியம் உருவாகும் நேரத்தில் அதை கிள்ளியெறிந்து விட்டார்கள்.

Wednesday, November 17, 2010

கவிதை கவிதை

மறைந்திருக்கும் உண்மைகள் வாழ்வின் பல துறைகளில் உள்ளன. கவிதையிலும் உண்டு. பிருந்தாவின் இந்த ஹைகூவில் என்ன என்று யோசித்து பாருங்கள் !


''காலடிப் பதிவை
கவிதையாக்கிப் போகும்
கொலுசு சிணுங்கல்."

Friday, November 12, 2010

நம்பிக்கை என்பது யாதெனின்..

யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ, அதே போல் மனிதனுக்கு நம்பிக்கை அவ்வளவு அவசியம் என்று எவரேனும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அப்படி சொன்னவரை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில்.. யானையின் அங்கமும், ஆறறிவுக் கொண்ட மனிதனின் ஊக்க உணர்வும் ஒன்றா என்று உதட்டோரம் ஓர் ஏளன புன்னகையை அழகாக சிந்தி விட்டு பெருமிதத்துடன் பெருமூச்சு விட்டவாறே அவ்விடத்தை விட்டு அகன்றிருப்பீர்கள். இல்லையெனில் ஓர் அசட்டுத் தனமான புன்னகையால் சொன்னவரின் கூற்றை ஆமோதித்தும் இருக்கலாம். எப்படியோ நம் அனைவருக்கும் நம்பிக்கை என்ற மந்திரச் சொல்லின் அவசியத்தை சிறு வயது முதலே சொல்லி சொல்லி நம்பிக்கையின் மீதான நம்பிக்கையை ஆழ நம்முள் பதித்து விடுகின்றனர். ஆனால் பெரும்பாலும் நமது நம்பிக்கைகளில் குருட்டுத்தனமும், ஓர் அவசரமுமே அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு உடல் குறைய வேண்டுமென நம்பிக்கையுடன் உடற்பயிற்சி நிலையம் சென்று ஒரு வாரத்தில் உடல் இளைக்கவில்லை என முயற்சியை கை விடுவது.

'எங்கப்பா உடம்பு குறையுது? நானும் என்னன்னமோ செய்து பார்த்து விட்டேன். பணம் போனது தான் மிச்சம். அதெல்லாம் சிலர் உடல் வாட்டு' என்று சொல்லிக் கொண்டே உருளைக் கிழங்கு வறுவலினை ரசித்து நொறுக்குவோர் தான் அதிகம். முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. அவைகளால் யாதொரு பயனும் இல்லை.



நம்பிக்கையைப் பற்றி பல கதைகள் உள்ளன. அதில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

ஓர் ஊரில்.. ஒருவருக்கு சரும வியாதி வந்து விடுகிறது. அவர் வைத்தியரிடம் செல்கிறார். அவர் என்பதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாமா? ச்சே.. சட்டென்று ஒரு பெயர் நினைவில் வந்து தொலைய மாட்டேங்கிறது. கதை சொல்லும் ஆர்வமே போய் விடும் போல!! ம்ம்.. அவசரத்திற்கு செங்கிஸ்கான் என வைத்துக் கொள்ளலாம். வைத்தியர் செங்கிஸ்கானின் சருமத்தை சிறிது நேரம் ஆரய்ந்து விட்டு, செங்கிஸ்கானை ஏற இறங்க பார்த்தார்.

"செங்கிஸ்கான்.. நீங்க தீவிரமான சைவராச்சே!!" (ஷ்ஷ்ஷ்.. மத ஒருமைப்பாடு மலரட்டும். கண்டுக் கொள்ளாதீர்கள்.)

"அதனால் என்ன? சிவனின் பக்தருக்கெல்லாம் சரும நோய் வராதா என்ன?"

"அதில்லை?"

"எதில்லை!!" என்றார் செங்கிஸ்கான் கோபமாக.

"உங்களுக்கு அசைவம் என்றால் ஆகாது. ஆனால் இந்த வியாதிக்கு மலைப் பாம்பின் கொழுப்பை எடுத்து ஒரு மாதம் தடவினால் தான் குணமாகும்."

"வேறு வழியே இல்லையா?"

"வைத்திய சாஸ்திரத்தில் இல்லை."

செங்கிஸ்கான் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி வர்றேன். ஈசன் பார்த்துக் கொள்வான்" என்று சென்று விட்டார்.

ஈசனாவது பார்ப்பாதாவது என வைத்தியர் இறுமாந்திருந்தாலும் செங்கிஸ்கானுக்கு சரும வியாதி முற்றிலுமாக முப்பதே நாளில் நீங்கி விட்டது. வைத்தியர் தலையில் இடி. தான் கற்ற சாஸ்திரம் பொய்த்து விட்டதா இல்லை மந்திரத்தால் மாங்காய் என்பதெல்லாம் உண்மை தானா அல்லது நமக்கு தெரியாமல் வேறு எவரிடமாவது வைத்தியம் செய்துக் கொண்டாரா என்று பெருஞ்சந்தேகம். வைத்தியர் நேரில் செங்கிஸ்கானிடமே சென்று கேட்டு விட்டார்.

"நான் என்ன செய்தேன்? குளத்தில் தொடர்ந்து முப்பது நாள் முழுக்கு போட்டு விட்டு பிரகாரத்தை ரெண்டு சுத்து அதிகமா சுத்தி வந்தேன். எல்லாம் ஈசன் அருள்" என்றார் செங்கிஸ்கான் கம்பீரமாக.

வைத்தியர் நேராக குளத்திற்கு சென்றார். குளம் பளிங்கு போல் இருந்தது. பிரகாரத்தை சுற்றிப் பார்த்தார். மீண்டும் குளத்திற்கு சென்று அதற்கு நீர் வரும் கால்வாயைத் தொடர்ந்து நதி இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கே ஆளரவமற்ற ஓரிடத்தில் உடல் பிளவுப்பட்ட மலைப் பாம்பு ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. 'ஆக மலைப் பாம்பின் கொழுப்பு தான் செங்கிஸ்கான் குணம் ஆனதற்கு காரணம்' என்று தெரிந்து அகமகிழ்ந்தார். வைத்தியருக்கு தன் தொழில் மேல், செங்கிஸ்கானுக்கு தன் பக்தி மேல் உள்ள உள்ளார்ந்த நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளே இக்கதை சொல்லும் நீதி.

இதை ஆங்கிலத்தில் Placebo Effect என்பார்கள். மருந்துகள் மனிதனை குணமாக்குவது இல்லை. மருந்துகள் குணமாக்கி விடும் என்ற நம்பிக்கையே மருந்துகளை நம்முள் வேலை செய்ய வைக்கிறது.

நம்பிக்கை என்னும் அகச் செயல் மனதினுள் தொடர்ந்து நிகழ வேண்டிய ஒன்றாகும். அவை நம் ஆழ் மனதில் ஊறி நமது புறச் செயல்களில் பிரதிபலிக்கும். அகமும், புறமும் ஒத்திசைக்கும் இயக்கத்திலேயே நம்பிக்கை முழுமை அடைகிறது. நம்பிக்கை என்பது சோம்பிக் கிடக்கும் மனதில் தோன்றும் தப்பிக்கும் மனநிலை அல்ல. அவை வாழ்வின் தொடர் தூண்டுதல்களுக்கான அற்புத சக்தி. நம்பிக்கைகள் இலக்குகளால் உருவாவது இல்லை. நமது சின்னஞ்சிறு செயல்களிலும் அவை பிரதிபலிக்கும்.

நம்பினார் கெடுவதில்லை- இது
நான்மறை தீர்ப்பு.

Monday, November 8, 2010

வெறுப்பதில் உள்ள சந்தோசம்

வில்லியம் ஹாஸ்டலி என்னும் ஆங்கில இலக்கிய கர்த்தா வெறுப்பதில் உள்ள சந்தோசத்தை பற்றி 'On the pleasure of hating' என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ''நாம் வெளிப்படையாக செய்யும் காரியங்களில் மனிதாபிமானம் கலந்து விட்டோம். ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளையும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்ச நாளாகும்'' என்றார். இது 1828 இல் எழுதிய கட்டுரையில். இன்று 2010 இல் கூட வெளிசெயல்களுக்கும் உள்மன விருப்பத்திற்கும் உள்ள வேற்றுமை அப்படியே இருக்கிறது.


அண்மையில் பரபரத்த நித்யானந்தரின் டிவி காட்சிகள். ஒருவர் விடாமல் எல்லாரும் பேசி பேசி தீர்த்தார்கள். பிரபல சாமியார், நடிகை, செக்ஸ் வக்கிரங்கள், வெளியில் தெரியாத நடவடிக்கைகள் மேல் ஓர் ஆர்வம் எல்லாம்தான் காரணம். (நித்யா கொஞ்சம் இருந்ததும் ஒரு காரணம் )

இதில் ஆழமாக பொதிந்துள்ளசமூக அடையாளங்களை தான் ஹாஸ்டலி அப்போதே சொல்லி இருக்கிறார். ''We give up the external demonstration, the brute violence but cannot part with the essence or principle of hostility.''

மூர்க்கதனமான வன்முறையின் வெளி வடிவங்களை நாம் கைவிடுகிறோம். ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மால் கைவிட முடியாது.

நம் ஊடகங்கள் (பத்திரிக்கை , டிவி செய்தி சேன்னல்கள்) எப்போதும் கெட்ட செய்திகளையே தருவதற்கு இதுதான் காரணம். குடிசை எறிந்தால் தான் வியாசர்பாடி பற்றி நியூஸ் வரும். எங்காவது குண்டு வெடித்து ரத்த கெளரியா? , கட்டிடங்கள் பற்றி கொண்டு எரிகிறாதா உடனே கேமராவை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அதை நாடு முழுவதும் சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்.

அசாமில் உள்ள சிறிய ரயில் நிலையமான கைஸ்வல் சரித்திரத்தில் இடம்பெற 500 பேர் சாக வேண்டி இருக்கிறது. இரட்டை கோபுரமும், ஒசாமாவும் எல்லாரும் அறிய 2000 பேர் சாக வேண்டி இருக்கிறது. ரயில்கள் ஓடுவது செய்தி அல்ல. அவை மோதிக்கொள்வது தான் செய்தி. பி.பி.சி., சி.என்.என் போன்ற உலக செய்திகளும் அவ்வண்ணமே. ஒரு வாரம் அந்த சேன்னல்களை கவனித்தால் இந்தோனேசியாவில் கிறிஸ்தவ - முஸ்லிம் இனக்கலவரம்...கொசோவாவில் அல்பேனிய - செர்பியா மோதல்கள், ஆப்ரிக்க இனச்சண்டையில் கைகால் வெட்டினது, ஸ்ரீ லங்காவில் மனித வெடி குண்டு .... இப்படி செய்தி என்பதற்கே கெட்ட செய்தி மட்டும் என்றாகி விட்டது.

எத்தனையோ நகரங்களில் எத்தனையோ அழகான மனைவிகளுடன், மச்சினர்கள் கேலியும் அன்பும் பாராட்டுமாக சரளமாக வாழ்கிறார்கள். ரயில்களும் ஏரோபிலேன்களும் நேரத்தில் பத்திரமாக செல்கின்றன. இவையெல்லாம் செய்தி இல்லை. மதனியின் முன் மச்சினன் அண்டர்வேரில் நடை பழக வேண்டும். ரயில் மொத்த வேண்டும். ப்ளேன் நொறுங்க வேண்டும். நதி வெள்ளம் ஊருக்குள் புகுந்து நூறு பேருக்காவது காலரா வார வேண்டும். அப்போதுதான் செய்தி. எத்தனையோ ஊர்களில் சின்ன சின்ன பாட்டு போட்டியும் பேச்சு போட்டியும் நடனங்களும், உரியடிகளும், கரகங்களும் கொடிதிருவிழாக்களும் நடக்கின்றன. அவையெல்லாம் செய்தி இல்லை. யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டால் தான் 'ஊடக' தகுதி பெறுகிறார்கள். . பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ உருப்படியாட ஏதாவது நடந்தால் செய்தி இல்லை. வேட்டியை உருவிக்கொண்டால், நாற்காலிகள் பறந்தால் அது தான் முக்கிய செய்தி.

சுஜாதா அவரின் நண்பரிடம் இது பற்றி கெட்ட போது..''நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்து விடும்'' என்று சொல்லி இருக்கிறார். ஒரு சைக்காலஜிஷ்டை கேட்டால், ''நம் மனதில் சமூக தேவைகளாலும் நாகரீகத்தினாலும் கட்டுப்பாடுகளினாலும் அடக்கிவைக்கப்பட்ட வன்முறை உணர்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்கள் இவை'' என்கிறார்.

வெறுப்பதில் சந்தோசம் இருக்கிறது. ஒரு கரப்பான் பூசியையாவது சிலந்தியையாவது வெறுக்க வேண்டும்.
நம் எண்ணங்களின் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் என்கிறார் ஹாஸ்டலி. ...''without something to hate, we should lose the veru spring of thought and action...''

மத சார்பு , தேசபக்தி எல்லாமே நம் உள்ளே உள்ள வெறுப்பின் கௌரவமான வடிகால்கள் நொண்டி சாக்குகள் என்கிறார். தொலைகாட்சியில் இந்த அவலங்கள் எல்லாம் உண்மையாக நம் நடுக்கூடங்களில் தெரிந்தாலும் எல்லாமே பிக்ஸெல் வடிவங்கள். எவ்வித பொறுப்பும் அபாயமும் இன்றி வெறுக்க முடிகிறது. கறிகாய் நறுக்கி கொண்டே ரத்த தரிசனம் செய்ய முடிகிறது. நம்மிடம் மிச்சமுள்ள ஆதி மனித இச்சையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. தெருவில் யாராவது சண்டை போட்டால் கொஞ்சம் போடட்டும் என்று விட்டுவிட்டு தான் அடக்க முயற்சி செய்கிறோமே.. அதுபோல !

WWF காட்சிகளை ஐந்திலிருந்து பதினெட்டு வரை நாற்பதுக்கும் மேல் உள்ள தாத்தாக்கள் வரை ரசிப்பதற்கும் இதுதான் காரணம். நல்ல விஷயத்தை யாரும் பார்பதில்லை என்கிற ஆதாரமான அதிர்சிகரமான சித்தாந்தம் தான் காரணம்.

Wednesday, November 3, 2010

அரசு ஊழியர்கள் அகால மரணம் - ஐயோ பாவம்

சென்ற வார செய்தி

பணி மிகுதியின் காரணமாக அரசு ஊழியர்கள் அகால மரணம் அடைகிறார்கள். மக்கள் நினைப்பது போல அவர்கள் வேலை வெட்டி செய்யாமல் சும்மா எல்லாம் இல்லை.

அரசு ஊழியர் சங்கம் கோவை..

அப்படியா? உங்களின் பணிமிகுதின்னா என்ன? இதுவா?

எந்த கடையில் எந்த வடை டேஸ்டா இருக்கும்

அலுவலகத்தில் மானாவாரி அரட்டை அடிக்கறது

இரட்டை அர்த்தத்தில் அலுவலகத்தில் கும்மாளமடிப்பது

போனா போகுதுன்னு ஒப்பிற்கு சில கையெழுத்து

அப்பாவி மக்களை இஸ்டத்திற்கு அலைக்கழிப்பது

இளிச்சவாயன் யாராவது மாட்டினா தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் வசைமொழிகிறது (கெட்ட வார்த்தை கத்துக்கணும்ன அவங்க கிட்ட போகலாம் )

உள்ளூர் பெண் ஊழியர்கள்னா, நைட்டியோட அலுவலகம் வந்து குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட சொல்றது, (முக்கியமா விஜய் பாட்டுக்கள்)

உன் புருஷன் இவன்தான்றதுக்கு என்ன சாட்சி? குடும்ப அட்டையில் இருப்பது உன் புருஷன் தான்னு எப்படி எங்களுக்கு தெரியும்? என்பது போன்ற கொச்சை கேள்விகள் கேட்பது.

'கமிஷன்' எவன் குடுக்கரானோ அவனுக்கு முதலில் கையெழுத்து போட்டு தங்கள் கடமையில் கண்ணா இருப்பது

தங்கள் குடும்பம் , உறவு, தூரத்து உறவுக்கெல்லாம் வேலை வாங்கி வாங்கி கொடுக்கிறது

இந்த கடமைகளுக்காகவா அகால மரணம் அடையறாங்க..
எங்களுக்கெல்லாம் காது குத்தியாசுப்பா எப்பவோ..

(இக்கட்டுரை மேற்கண்ட 'பணிகளை' செய்பவர்களை மட்டுமே ..! அவர்களை நேரிலேயே பார்த்தால்... நேர்மையான உழியர்கள் இருந்தால், அவர்களை அல்ல.. )

Wednesday, October 27, 2010

'சைபிகூ' கவிதைகள் -சுஜாதா



அடுத்த நூற்றாண்டு கவிதைகள் இப்படிதான் இருக்கும் என்று சுஜாதா குறிப்பிட்டவைகள்

விஞ்ஞான கற்பனைகளை பற்றி ஹைக்கூ எழுதுவது 'சைபிகூ' என்று பெயர். இதோ சில அருமையான 'சைபிகூ' கவிதைகள்.

* எரிகற்கள்
ஒரு சப்தமுமின்றி மோத
சிதறல்களினூடே செல்கிறோம்'


* புராதன நகரில்
தோண்டி எடுத்தோம்
டென்னிஸ் ஷூவின் பதிவை.

* உடை கலைந்த போது
அவள் மனுஷி இல்லை.

* சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும் போது
கதவை பூட்டினேனோ?

* குப்பை பொறுக்கும்
சிறுமியின் கையில்
ப்ளாப்பி டிஸ்க் !!

மரணம் பேசுகிறது

மரணம் பேசுகின்றதா!?

ஆம்.

ஓர் ஆழ்ந்த மெளனத்தில் மரணம் நம்மை சுற்றி இருப்பவர்கள் மேல் வியாபித்து நம்மோடு தொடர்புக் கொள்கிறது. அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் உலகம் முழுவதும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

மரணத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. ஜெப்ரி ஆர்ச்சரின் சிறுகதை தொகுப்பில் இருக்கும் அரபிக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதை அது. அந்த கதையினைப் படைத்த ஆதி கர்த்தா யாரென்று தெரியவில்லை. கதை இது தான்.

பாக்தாத்தில் ஒரு வியாபாரி. தன் வேலைக்காரனை கடைத் தெருவிற்கு சரக்கு வாங்கி வர அனுப்பினான். போனவன் சிறிது நேரத்தில் வெளிறிய முகத்துடனும் நடுங்கும் கைகளுடனும் திரும்பி வந்து விட்டான்.

'எஜமானே, மார்க்கெட்டுக்கு சென்ற போது கூட்டத்தில் ஒரு பெண், என் மேல் இடித்தாள். திரும்பி பார்த்தால்.. அது மரண தேவதை. என்னை பயமுறுத்தும் சைகை செய்தாள். உங்கள் குதிரையை உடனே கொடுங்கள். நான் என் விதியில் இருந்து தப்பிக்க, இந்த கணமே நகரத்தை விட்டு சமாராவுக்கு ஓடிப்போய் விடுகிறேன்' என்றான்.

வியாபாரி தன் குதிரையை அவனுக்கு கொடுக்க, வேலைக்காரன் பாய்ந்து ஏறிக்கொண்டு, குதிரையை இரண்டு குதிகால்களாலும் தூண்டி விரட்டி தலைதெறிக்க சமாராவை நோக்கி சென்று விட்டான்.

அதன் பின் வியாபாரி கடைத் தெருவிற்கு சென்றான். அங்கே கூட்டத்தில் மரண தேவதையை பார்த்தான்.

'இன்று காலை என் வேலைக்காரன் வந்தபோது, ஏன் பயமுறுத்துவது போல சைகை செய்தாய்?' என்று கேட்டான்.

'அது பயமுறுத்தும் சைகை இல்லை.. ஆச்சர்யம். அவனை நான் பாக்தாத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நான் அவனை சந்திக்க வேண்டியது சமாராவில் அல்லவா??'





ந்தியாவிலும் கருட புராணத்தில் அதே போல் ஒரு கதை வருகிறது. எமன் ஒரு விருந்திற்கு செல்கிறான். வாசலில் இருக்கும் ஒரு எலியை சற்று நேரம் உற்று பார்த்து விட்டு உள்ளே போகிறான். பயந்துப் போகும் எலி பருந்து ஒன்றின் உதவியோடு மலை உச்சியில் இருக்கும் பொந்து ஒன்றில் மறைந்துக் கொள்கிறது. என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள பருந்து மீண்டும் விருந்து நடக்கும் இடத்திற்கு வருகிறது. வெளியில் வரும் பொழுது எலியை காணாமல் திகைக்கும் எமனிடம் என்னவென்று விசாரிக்கிறது பருந்து. 'இங்கிருந்த எலியின் உயிர் மலை உச்சி ஒன்றில் பாம்பின் மூலமாக போகும் என்பது விதி. இவ்வளவு விரைவில் எலியால் எப்படி அவ்விடத்திற்கு போக முடிந்தது என்றெண்ணி வியப்படைகிறேன்' என்று எமன் பதிலளித்தான்.

இந்தியாவோ, ஈராக்கோ மரணம் என்பது மாறாத உண்மை. அவை நம்முடன் பேசிய வண்ணமே தான் உள்ளன. ஆனால் மரணம் குறித்த பிரமிப்பும், பயமும் இன்னும் விலகியபாடில்லை.

Tuesday, October 26, 2010

இழந்த அடையாளங்கள்

'ஒன்றா, இரண்டா இழந்தவை.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?' என காக்க காக்க பட பாடல் பாணியில் இழந்தவைகள் அனைத்தையும் பட்டியல் இட்டால் எழுத எனக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் போதாது.

மாதர்களின் கை வண்ணமாய் திகழும் கலை வண்ண வாசல் கோலங்கள்.. அடுக்குமாடி கட்டிடங்களின் வரவு, நகரமயமாதல் போன்றவற்றால் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. சாணம் கலந்த தண்ணீரால் சாப்பிட அமர்ந்த இடத்தை சுத்தம் செய்யும் பழக்கத்தை இழந்து விட்டோம். சொந்த பந்தங்கள் ஒன்றாய் கூடி ஒரு மாத காலம் களை கட்டும் கல்யாண வீடுகள், கூட்டு குடும்ப கலாச்சாரம், எளிமையான அரசியல் போன்ற நாம் இழந்த இழந்து வரும் புற அடையாளங்கள் எண்ணற்றவை.



கூட்டுக் குடும்பம்- நாம் இழந்ததிலேயே அதி முக்கியமானது. ஏன் அதி முக்கியம்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு அன்றோ!! ம்ம்.. ஆனால் இன்று அதெல்லாம் அங்கே? தனி குடித்தனம் என்ற பெயரில்.. வந்ததை தின்று, இயந்திரமாய் கூடி மகிழும் இரண்டு தனி தனி தீவுகள் அன்றோ ஓர் அறையில் அடைப்பட்டுள்ளது. அதுவும் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்.. முடிந்தது கதை. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ள கூட நேரமில்லாமல்.. பறந்து பறந்து சம்பாதிப்பது. அப்படி சம்பாதிப்பது எதற்கு அல்லது யாருக்கு?

முதலில் எதற்கு என்பதை பார்ப்போம். வேறு எதற்கு.. செலவு செய்ய தான். ஆனால் வேலை பளு மற்றும் மேலதிகாரிகளின் நெருக்கடி தாளாமல்.. அந்த நேர தப்பித்தலுக்காக கை நிறைய சம்பாதிக்கும் பணத்தினை செலவு செய்யும் வழி தெரியாமல் ஓட்டையில் கசியும் நீர் போல் இழப்பவர் தான் ஏராளம் இங்கு. பணத்தினை செலவு செய்தல் அல்லது உபரி பணத்தை முதலீடு செய்தல் என்பதெல்லாம் அனுபவத்தால் கைக் கூடும் திறமை. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்றைய இளம் தனிக் குடித்தனக்காரகளுக்கு கிடைப்பதில்லை.

அடுத்து சம்பாதிப்பது யாருக்கு என்ற கேள்விக்கு அடுத்த தலைமுறையினர் என்பதே நம் அனைவரின் ஏகோபித்த பதிலாக இருக்கும். தனியாக பிரிந்து சென்ற இளம் பெற்றோர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் வீட்டு குழந்தை படுத்தும் பாடு. அவ்வொற்றை குழந்தையை சமாளிக்கும் வழி தெரியாமல் செல்லம், செல்வம் என பாசத்தினை வாரி வழங்குகிறார்கள். விளைவு? வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ துளி மரியாதையும், மதிப்பையும் கொடுப்பதில்லை. இன்று முரட்டு பிடிவாதம் மட்டுமே இன்றைய குழந்தைகளின் பொது குணமாக உள்ளது. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தையை பிடிப்பதில்லை. தொலைகாட்சி பிரமாதப்படுத்தும் நாயகன் வழி்பாட்டினை பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மூர்க்க குணம் தோன்றுவது இயற்கை தானே!! குழந்தைகள் நம்மை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். அன்று கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்களிடம் இளையவர்கள் காட்டும் மரியாதையை பார்த்து குழந்தைகள் தானாகவே கற்றுக் கொண்டனர்.

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனா காலம்!!



கோலங்கள்- விடியற்காலையில் எழுந்து வளி மண்டல ஓசோனின் தூய காற்றை நுரையீரல் முழுவதும் நிரப்பி.. பெண்கள் கற்பனை குதிரையை ஓட விட்டு கோலம் போடும் வழக்கம் எத்தகைய மகத்தானது. நுண்ணுயிர்களான எறும்பிற்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற ஈகை சிந்தனையை பிரதிபலிக்கும் கோலம் போடுதல் வழக்கொழிந்து வருகிறது. அது கூட பரவாயில்லை.. பெற்றவர்களுக்கே உணவளிக்க யோசிக்கும் அவல நிலை இன்று நிலவுகிறது. நாம் எதை இழந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பதற்கே அருவருப்பாக உள்ளது.



பானை- இது ஓர் அடையாளமா என்று சிரிப்பது கேட்கிறது. கண்டிப்பாக அதுவும் நமது அடையாளம் தான். வெயில் காலத்தில் தொண்டை வறண்ட நேரத்தில் ஒரு சொம்பு பானையின் குளிர்ந்த நீரின் சுவையை அனுபவித்தது உண்டா? அதுவும் அந்த பானையில் வெள்ளை துணியில் கட்டப்பட்ட வெட்டிவேர், அதி மதுரம் போன்ற மூலிகைகள் மிதந்ததால்.. நீரின் வாசமும், மருத்தவ தன்மையும் மிகுந்த புத்துணர்ச்சியை அளிக்கும். பானையின் மாற்றாக வந்திருக்கும் குளிர்சாதனப் பெட்டி ஒரு சபிக்கப்பட்ட கண்டுபிடிப்பாகவே எனக்கு படுகிறது. உணவுகளை பதப்படுத்தும் தற்காலிக வசதியை அது தருவதால்.. வாரத்திற்கு ஒருமுறை சமைத்து அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் பொழுது அந்த உணவின் தரம் எப்படிப் பட்டதாக இருக்கும். அப்படியே தினமும் சமைக்க வேண்டுமா என்ற கேள்வினையும், சோம்பேறித் தனத்தையும் அல்லவா நம் மனதில் சேர்த்து விளைக்கிறது. அது கூட போகட்டும்.. குளிர்சாதனப் பெட்டி வெளியிடும் 'க்ளோரோ ஃப்ளூரோ கார்பன்: CFC- ChloroFluoroCarbon) என்னும் நச்சுக் காற்று ஓசோனில் துளைகள் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. புவி வெப்பமயமாதல் என்னும் பூதாகர பிரச்சனையை உருவாக்கும் குளிர் சாதனப் பெட்டியை விட இயற்கையோடு இணைந்த பானை எத்தகைய அருமையான ஒன்று.




இப்படி ஒன்றொன்றாக நாம் இழக்கும் பல அருமையான அடையாளங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

அகமும், புறமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. நாம் உண்மையில் இழந்தது நமது அக அடையாளங்களையே!! இப்படி ஒவ்வொன்றாக நாம் இழக்க காரணம் நாம் நமது சுயத்தினை தொலைத்ததால் தான்.

ஒருவரின் சுயம் அவர் பெறும் கல்வி, அனுபவம், கேள்வி ஞானம், சான்றோர்களுடனான பழக்கம் முதலியவற்றால் கட்டமைக்கப் படுகிறது. ஆனால் இன்றைய கல்வி ஒருவனின் சுயத்தை கட்டமைக்கிறதா? 'ஆம் கட்டமைக்கிறது' என எவரேனும் நினைத்தால்.. உங்களுக்கான கட்டுரை இது இல்லை.


ந்திய திருநாட்டினை அடிமைப்படுத்த அந்நாட்டின் முதுகெலும்பான செவ்வியல் பண்பாட்டினையும், பழைமை சிறப்புடைய கல்வி முறையினையும் சீர் குலைத்தல் அவசியம் என்று நம்பினார் மெக்காலே துரை அவர்கள். அதை தனது 'மெக்காலே கல்வித் திட்டம்' மூலம் அவர் அன்று நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு விலகினாலும், அவர்கள் நம் மீது திணித்து விட்டு சென்ற நச்சு கல்விமுறை வேரூன்றி இன்று விருட்சமாகி நம்மை பலவீனர்களாக்கி வருகிறது. அதே போல் அவர்களின் குள்ளநரி யுக்தியான பிரிவினையும் அது தொடர்பான சங்கடங்களும் இன்னும் விலகியபாடில்லை. பாரதியார் அன்றே இக்கல்விமுறையை ஒதுக்கி புறந்தள்ளி 'பேடிக்கல்வி' என இகழ்ந்தார். அத்தீர்க்கதரிசியின் வாயில் சக்கரையை தான் போட வேண்டும்.



நமது கல்விமுறை நம்மை விஞ்ஞானத்தை நோக்கி தள்ளும் பகுத்தறிவாதிகளாக மாற்றுவதாக ஒரு வாதம் எழுப்பப் படலாம். சுயமற்றவர்கள் ஆன நாம் வள்ளுவர் விரும்புவது போல் கேள்விகள் எழுப்புவதில் மட்டும் வல்லவர்களாகி வருகிறோம். கேள்விகள் எழுப்புவது ஒரு தவறா என நீங்கள் சிரிக்கக் கூடும். தவறே இல்லை. செல்வத்துள் எல்லாம் தலையாக செவிச்செல்வத்தையே வள்ளுவரும் வழிமொழிகிறார்.

ஆனால் கேள்வி கேட்கிறவன் அறிவாளி என்ற மாய மயக்கங்களில் மூழ்கி, விதண்டவாத கேள்விகளையே எழுப்புகின்றோம். உதாரணத்திற்கு நாம் இதே போல் நாம் பெரியவர்களை கேள்வி கேட்போம்.

"ஏன் சாப்ட்ட அப்புறம் சாணி தண்ணி தெளிச்சு மொழுவுறீங்கம்மா?"

"தெர்லப்பா.. எங்கம்மா எனக்கு சொன்னாங்க. எங்கம்மாவுக்கு அவங்கம்மா சொன்னாங்க. நாங்க எல்லாம் உங்கள் மாதிரி படிச்சோமா என்ன?"

"சும்மா லூசுத்தனமாக அந்தக் காலத்தில் சொல்லி வச்சுட்டு போனதை எல்லாம் இனிமே செய்யாதீங்க. சரியா?"

படிப்பு நமக்கு மேதைமையை தந்துள்ளது என பெற்றவர்களுக்கு நம்மைப் பற்றி பூரிப்பு. விடையற்ற கேள்விகளை எழுப்பி விட்டோம் என நாமே நம்மை அறிவாளி என மெச்சிக் கொள்கிறோம். தளும்பினால் அது குறை குடம் அன்றோ!!

பகுத்தறிவு என்பது கேள்விகள் கேட்பது மட்டும் அல்ல. பகுத்து ஆய்ந்து அறிவது. கேள்வி கேட்டு மற்றவர் வாயை மூடிவிட்டால் போதுமென்று நினைக்கும் நம் பொன்மனத்தை தான் நான் சுயமற்ற தன்மை என்று சொல்கிறேன். சுயமற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்பதாக கேள்வி. நமது கேள்விகள் "மாட்டு சாணம்" சிறந்த கிருமி நாசினி என்ற பதிலினை நோக்கி நம்மை தள்ளவில்லை. தேடல்கள் மற்றும் உள்ளார்ந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு எழுப்ப படாத கேள்விகளால் என்ன பயன்? பாழும் பயன் என்பதே நிதர்சனம்.

சாப்பிடும் உணவையே அப்படியே வாந்தி எடுப்பதால் உடலிற்கு ஏதேனும் நன்மை விளைகிறதா என்ன? அப்படி தான் உள்ளது நமது கல்வி. புத்தகத்தில் இருப்பதை மாங்கு மாங்கு என முடிந்த அளவு மனனம் செய்து, தேர்வில் வாந்தி எடுத்து விட்டால் பெரும் சுமை நீங்கியதாக நமது மாணவர்கள் குதூகலிக்கின்றனர். என்னத்த சொல்ல!!

அசோகர் சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டார்.

சுமார் 2200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அசோகர் செய்தவை எல்லாம் நாம் இப்ப தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமென்ன? அதை நம் ஞாபகத்தில் நிறுத்தி நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த வரலாறு நமக்கு சோறு போடுமா? என்று நமக்கு கேள்விகள் சரளமாக எழும்.

இந்த வரலாற்றினை புத்தகத்தில் மனனம் செய்யும் மாணக்கரை சித்திரை அல்லது வைகாசி மாத நண்பகல் வேளை ஒன்றினுள் அழைத்து.. மரமற்ற சாலையில் நடக்க வைத்தால், மரங்களின் அவசியமும் வெயிலும் அவர்களுக்கு உச்சி மண்டையில் 'சுர்ர்ர்ர்ர்' என ஏறும். பிறகு 'இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க தான் அசோகர் சாலைகளில் மரங்கள் நட்டார்' என்று ஒரு தடவை சொன்னால் போதாதா?

நம்முள் செல்வது வெறும் எழுத்துக்களாகவே இருக்கின்றன.



பல் உள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுவார்கள். அதே போல் சுயம் உள்ளவர்கள் சிந்திக்கிறார்கள். சிந்திக்க தெரியாதவர்கள் தங்களது அக, புற அடையாளங்களை தாமாகவே தொலைத்து இழக்கின்றனர். உயிர்ப்புள்ள சிந்தனையை தட்டி எழுப்பாத கல்வி தான் மெக்காலேவின் வெற்றி.

சிந்திக்க தெரியாத நம் மூளைகளை ஏதேனும் ஒன்று பலமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன்? 'Faith heals fear' என்பார்கள் ஆங்கிலத்தில். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகை பயம் அல்லது தேவைகளினால் அல்லலுறுகிறோம். அதிலிருந்து தப்பிக்கவே கெட்டியாக எதையாவது பற்றிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு மதம், சினிமா, அரசியல் என்று அச்சங்களை மறக்கவே நமக்கு விருப்பானவற்றை தேர்ந்தெடுக்கிறோம்.

அது தவறில்லை. எனினும்.. தேர்ந்தெடுத்த துறையில் நம் சிந்தனையை முழுவதுமாக ஈடுபடுத்துகிறோமா?

'காந்தீஜி பெரியவர். தூய வாழ்வு வாழ்பவர். அதனால் அவர் சொல்வதை எல்லாம் சரியானதாக இருக்கும் என்று சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்று பகவத்சிங் 'நான் ஏன் நாத்திகன் ஏன்?' என்ற புத்தகத்தில் தனது கருத்தினை பதிந்துள்ளார். அவர் சுயம்பு. சிந்திக்க தெரிந்த வீர இளைஞர். அப்படி தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோமா?

சிந்திக்க தெரிந்த சமூகமே தனது அடையாளங்களை இழக்காமல்.. புதியன தோன்றுவதில் நன்மை செய்பவைகளை ஆராய்ந்து தனக்குள் இழுத்துக் கொண்டு, பழைமையானவற்றில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றி மேன்மையுறும். தேவை நல்லதையும், கெட்டதையும் பகுத்தாயும் சிந்தனை மட்டுமே!!

Tuesday, October 19, 2010

பகுத்தறிவு - கண்ணதாசன்


கண்ணதாசனின் 'கடைசி பக்கம்' புத்தகம் படிக்க கிடைத்தது. பகுத்தறிவு பற்றி அவர் சொல்லிய அருமையான கருத்துக்கள்...

---

பகுத்தறிவு உலகத்தை மாற்றி அமைத்தது.

காற்றில்லாத வீடுகளுக்குள்ளே மனிதர்கள் அடைபட்டு கிடந்த காலம் போய், சொகுசான ஒரு காலத்தை பகுத்தறிவு கொண்டு வந்தது.

உட்கார்ந்த இடத்திலேயே காற்று,படம்,ஒலி, ஒளி, செயற்கை மழை போன்ற ஷவர் பாத்; சிங்கார வாகனங்கள்; செவ்வாய் கிரகனதுக்கே பயணம் செய்ய கூடிய எல்லாவற்றையும் விஞ்ஞானம் நமக்கு கொடுத்ததற்கு காரணம் பகுத்தறிவுதான். அணுவை பகுத்து அதன் அளப்பரிய சக்தியை கண்டு பிடித்த அறிவு. உண்மையிலேயே அற்புதமான அறிவுதான்.

அந்த பகுத்தறிவு, அதிலே இது உண்டு. இதிலே அது உண்டு. என்று காட்டிற்றே தவிர, எதையும் 'இல்லை இல்லை' என்று சொல்ல முயன்றதில்லை.

ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.

ஒரு பகுத்தறிவாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

''அய்யா, 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறார்களே, 'சிவாய நம' என்று சொல்லிக்கொண்டே ஆயிரம் வால்ட் மின்சாரத்தை தொட்டால் அபாயம் ஏற்படாதா?''

__என்று கேட்கிறார்.

நல்லது. அபாயம் ஏற்படத்தான் செய்யும்.

கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்.

அந்த பாடலை பாடிய அடியவர் ' 'சிவாய நமவென்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று சொல்லவில்லை. 'சிந்தித்திருப்போர்க்கு' என்று தான் சொன்னார்.

அவர் சிந்தனையை சொன்னாரே தவிர செயலை சொல்லவில்லை.

கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவு படுத்தும் பாடு.

நம்ம ஊர் பகுத்தறிவு ஓர் அழகான பெண்ணை கண்டால் அவளது அழகையோ, பண்பையோ சிந்திப்பதில்லை. அவளுடம்பில் எத்தனை வீசை கறி, எத்தனை வீசை எலும்பு என்றுதான் ஆராயும்!.

'மனதைப் பகுத்தறியலாம்;உடம்பை பகுத்தறியலாமா?என்றுகூட யோசிப்பதில்லை!

இந்து மத தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்து வைத்த பொம்மைகளில்லை. பகுத்து பகுத்து அறிந்த பின்பே உருவாக்கப்பட்டவை.

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் , உடம்புக்குள்ளே ஒரு காற்று எந்த சக்திக்கு கட்டுப்பட்டு நீண்ட காலம் வெளியேறாமல் நிற்கிறது?

விஞ்ஞானிகளே யோசிக்கும் இடம் இது .

ஆனால், நம்ம ஊர் பகுத்தறிவு இதை யோசிக்காது. 'இது இயற்கையாகவே நிற்கிறது ' என்று சொல்லும்.

எது அந்த இயற்கை ?

மண்ணா ?.. மரமா ?. செடியா ..? கொடியா ..?

இப்போது மேல்நாட்டு விஞ்ஞானிகள் உடம்பில் இருந்து வெளியேறும் உயிர் எவ்வளவு வேகத்தில் வான மண்டலத்துக்கு பயணமாகிறது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறும் உயிரின் வேகம்தான் ஆராய்ச்சியில் இருக்கிறதே தவிர , அது வெளியேறாமல் இருக்கும் வழி அவனுக்கும் தோன்றவில்லை ; அடுத்த தலைமுறைக்கும் தோன்றவில்லை.

மானிட சக்திக்கு மேற்ற்பட்ட மூலத்தை புகழ் பெற்ற விஞ்ஞானிகளே மறுத்ததில்லை .

சந்திர மண்டலத்து பயணிகள் சர்ச்சுக்கு போய்வந்து தான் பயணமானார்கள் .

ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின .

இரண்டுமே ஒரு மூலத்தை நம்புகின்றன.

'சுடு 'என்று சொன்னவுடனே யாரை சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு

வெற்றி தேடி தந்திருக்கின்றன.

அதே நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால், பகுத்தறிவு மிஞ்சும் . நாடு மிஞ்சாது.

'போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் அதை தான் சொன்னான்.

'போர் என்று வந்தபின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது ' என்றான்.

கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தை தூக்கினான் ; முடிவு வெற்றியாக கனிந்தது .

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுதுகின்றது .

பக்தி யோகம் தியானத்தை வலியுறுத்துகிறது .

கடமையும் நம்பிக்கையுடன்தான் நடை பெறுகிறது ; தியானமும் நம்பிக்கையுடன்தான் நடைபெறுகிறது .

'மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு .

அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும் .

ஆகவே தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி நான் வருந்தவில்லை.

''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !.

Saturday, October 16, 2010

ஆதாம் ஒரு பிற்பகல்

புதிதாக குடிவந்திருக்கும் எதிர்வீட்டுக்காரரின் மகனுக்கு நீண்ட தலை முடி. ஏதோ ஒன்றை சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராக கட்டியிருந்தான். ஒரு கையால் பெயின்ட் வாளியை பிடித்தபடி மறு கையால் சுவற்றிற்கு வண்ணம் அடித்துக்கொண்டிருந்தான். சுவற்றிற்கு ஏதோ வலிக்கும் என்பது போல மிகுந்த ரசனையுடன் மெல்ல மெல்ல தடவிக்கொண்டிருந்தான்.

மாடியிலிருந்து அவனை பார்த்துகொண்டிருந்த யோகிதா, சுவற்றிற்கு வண்ணம் அடிப்பது எவ்வளவு அழகான குதூகலமான வேலை என நினைத்துக்கொண்டாள். அவன் அரைக்கால் டவுசரும், சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணினுடைய தோற்றத்தை அவனுக்கு தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது.

அவள் வேடிக்கையை நிறுத்தி விட்டு தன் இரு கையையும் தட்டினாள்.

''ஏ.. பையா..'' அவள் அழைத்தாள்.

அந்த பையன் தலையை நிமிர்த்தி யோகிதாவை பார்த்து புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள தலைமுடியுடன் ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததை போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்கு காரணம்.

அந்த பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையை பார்த்து யோகிதா விடாமல் சிரித்ததோடு என்ன என்பதுபோல பதில் சைகை செய்தாள். ஆனால் அந்த பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு மறுகையால் பெயின்ட் வாளியை தூக்கிகாட்டினான்.

அவள் மாடியிலிருந்து இறங்கி வந்து வாசலில் நின்று கொண்டு அந்த பையனை பார்த்து சிரித்தாள்.

''இங்க வா..'' என்றான் அந்த பையன்

''என்ன அது''

''பெயின்ட். இங்க வந்து பார்..''

''எதற்கு என்று சொல்''

'' நீ இந்த சுவற்றிற்கு வெள்ளை அடிக்கிறாயா?. இதோ இப்படி'' அவன் செய்து காட்டினான்

''நான் போக வேண்டும் . அம்மா திட்டுவாள்.''

''உனக்கு இது வேண்டாமா?உடனே வா''

''கொஞ்சம் பொறு'' யோகிதா வீட்டை திரும்பி பார்த்து விட்டு அந்த பையனை நோக்கி நடந்தாள்.

அவள் குதிகாலை தூக்கிக்கொண்டு துள்ளி நடந்து வந்தாள். அவளின் நடை எப்போதுமே அப்படித்தான். அவளுக்கு சின்னஞ்சிறிய வட்ட வடிவ முகம். காலர் கொண்ட பூப்போட்ட சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத முகம் யாரையும் எளிதில் ஈர்த்து விடும். மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என அவள் எப்போதுமே சிரித்துகொண்டிருந்தாள்.

''ஹலோ'' என்றால் யோகிதா.

''ஹலோ'' என்றான் அந்த பையன். அவனுடைய கழுத்து , மார்பு, முகம் எல்லாம் பெயின்ட் அப்பியிருந்தது.

''உன் பெயர் என்ன?'' யோகிதா கேட்டாள்

''அபுபக்கர்.''

''அபுபக்கர்.. அபுபக்கர்... என் நண்பன் பெயர் கூட அபுபக்கர் தான். ''

''யார் அது?''

''என் பள்ளித்தோழன். ஆனால் அவனுக்கு இவ்வளவு நீளமான முடி இல்லை. ''

'' நீ என்ன படிக்கிறாய்?'' கேட்டான் அபுபக்கர்.

''பத்தாவது. நீ?''

'' நான் பள்ளிக்கு போவதில்லை.''

''நீ ஏன் பள்ளி செல்வதில்லை?''

''படிப்பு வரலை. அப்பாவிற்கு ஒத்தாசையாக இருக்கிறேன்''

''உங்கள் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டாரா?''

''மாட்டார்''

''உன் பெயர் என்ன?''

''யோகிதா. எதற்காக கூப்பிட்டாய்?''''

''வண்ணம் அடிக்கிறாய இவற்றிக்கு?'' என்றபடி பிரஷை அவளிடம் கொடுத்தான்.

அவள் உடனே உற்சாகமாகி பிரஷை அவனிடமிருந்து வாங்கிகொண்டு வாளியை தூக்கிகொண்டாள்.

''இரு.. நான் எப்படி என்று சொல்லித் தருகிறேன்'' என்றபடி அபுபக்கர் அவளுக்கு விளக்கினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஒரு பக்க சுவரை முடித்தார்கள்.

''சரி.வா. நான் உனக்கு ஒன்று காண்பிக்கிறேன்'' வாளியை கீழே வைத்தபடி அவள் கையை பிடித்தான்.

யோகிதா தயங்கினாள். ''முதலில் என்னவென்று சொல்''

''காண்பிக்கிறேன் வா.. அதை உனக்கு அன்பளிப்பை தருகிறேன்.''

''அதை எனக்கு தருவாயா''

ஆம். தருகிறேன். அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டு அறைகளை கடந்து பின்வாசலை அடைந்தான்.

வெளியே அவர்களின் தோட்டம் பரவி இருந்தது.

மலர் தோட்டத்தின் ஒரு மூளைக்கு அழைத்து சென்றான்.

ஆகாயத்தை நோக்கி கம்பீரமாக மொட்டு அரும்பி இருந்த அள்ளி மலர்க் கூட்டத்தினிடையே நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாக பார்த்த படியும் தன் கைவிரல்களை அங்குமிங்குமாக அலைய விட்டபடியும் தன் உள்ளங்கையில் எதையோ மறைத்த படியுமாக அபுபக்கர் இருந்தான்.

மலர் கூட்டத்தினிடையே யோகிதா செல்லவில்லை. மௌன புன்னகையோடு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அபுபக்கர் எல்லா அல்லி செடிகளின் மீதும் பார்வையை படரவிட்டான். ஒரு கையால் மறு கையை பொத்தியபடி யோகிதாவை நோக்கி வந்தான்.

'' உன் கையை திற'' என்றான். யோகிதா தன் கைகளை ஒரு கிண்ணம் போல் குவித்திருந்த போதிலும் அவனுடைய கைகளுக்கு கீழாக கொண்டு போக பயந்தாள்.

'' உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய்?''

''அருமையான ஒன்று''

'' முதலில் காண்பி''

அபுபக்கர் அவள் பார்க்கும் வகையில் தன் கைகளை திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ண சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பும் ஊதா, என இருந்த போதிலும் பச்சை வண்ணம் மிக அழகாக இருந்தது. அவை மென்னிரைச்சலோடும் ஒன்றோடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு சிறிய கால்களை காற்றில் அலைய விட்டபடி இருந்தன. யோகிதா பயந்து போய் பின் வாங்கினாள்.

'' இப்படி நீட்டு..'' என்றான் அபுபக்கர். ''உனக்கு பிடிக்கவில்லையா..?''

''தெரியலை'' நிச்சயமில்லாமல் சொன்னாள் யோகிதா.

''இவை கடிக்காது. கையை நீட்டு''

அவள் மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். அபுபக்கர் எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அலையலையாக அவள் கைகளில் கொட்டினான்.

''அம்மா...'' அவை கடிக்ககூடும் என்று அவள் அறிந்திருக்கவில்லை. கைகளை திறந்து விட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்பு பூசிக்கூட்டம் மறைந்ததை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

''ச்சே.. எவ்வளவு அழகானவைகள். விட்டுவிட்டாயே..''

''நான் போக வேண்டும். அம்மா தேடுவாள். யோகிதா தன் செயலுக்காக வருத்தப்பட்டாள்.

''அவ்வளவு தானா. நான் உனக்கு காண்பிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.''

''என்ன அது''

''வந்து பார்'' மீண்டும் அவள் கையை பிடித்து கொண்டு நடந்தான். தோட்டத்தை கடந்து வெகு தூரம் சென்றார்கள்.

ஓரிடத்தில் நின்று அபுபக்கர் கத்தினான். ''அங்கே பார்''

அவன் காட்டிய திசையில் ஒரு பாம்பு புற்று நான்கடி உயரத்தில் இருந்தது.

யோகிதா பயந்து கொண்டு பத்தடி பின் வாங்கி ஓடினாள். ''பயப்படாதே வா'' என்றான் அபுபக்கர் சிரித்தபடி.

''நான் மாட்டேன்''

''நாம் அதில் பாம்பு இருக்கிறதா என பார்க்கலாம் வா. நான் கையை விடப்போகிறேன்''

''உனக்கென்ன பைத்தியமா? அது விஷம். நேரம் ஆகிறது. நாம் போகலாம்.'' அவள் கத்தினாள்.

அபுபக்கர் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் புற்றை நோக்கி நடந்தான். அவள் பயந்தபடியே விலகி இருந்தாள். அவன் கையை உள்ளே விட்டபடி யோகிதாவை பார்த்து பளிப்பு காட்டி சிரித்தான்.

கொஞ்ச நேரத்தில் ''இங்கே பார்'' உள்ளிருந்து எதையோ எடுத்தான்.

யோகிதா பயந்தபடி ''என்ன அது?'' அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

''பொறு''

யோகிதா அவனின் தோள் வழியாக கூர்ந்து பார்த்தாள். ''ஐயோ.. என்ன அது. முட்டையா?.. பாம்பினுடையதா ?''

''ஆமாம் ஆனால் இது உடைந்திருக்கிறது. தொட்டு பாரேன் ''

''என்ன கன்றாவி இது? வா போகலாம். நான் போகிறேன்''. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

''இரு இரு. பயந்து விட்டாயா?

அபுபக்கர் மீண்டும் அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான். அங்கிருந்த அணில்களை துரத்தி விளையாடினார்கள்.

எலுமிச்சை தோட்டத்தில் புகுந்து காய்களை பறித்தார்கள். தோட்டதுக்காரர்களுக்கு தெரியாமல் மாம்பழம் , கொய்யா பழங்களை பறித்துக்கொண்டு ஓடினார்கள். ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டார்கள்.

யோகிதா ஒரு மாம்பழத்தை தின்ன ஆரம்பித்தாள். அபுபக்கர் பாறையில் படுத்துக்கொண்டான்.

''நீ ஏன் நீள முடி வைத்திருக்கிறாய்? என்றாள்.

''ஏன் என்றால்.. அதுவாக வளருகிறது. ''

''உனக்கென்ன வயது?''

''பதினைந்து. உனக்கு..''

''பதினாலு''என்றபடி யோகிதா அவனை பார்த்தாள். எவ்வளவு வேடிக்கையானவன். எவ்வளவு சுதந்திரமாக சுற்றித்திரிகிறான். வேடிக்கை காரன்.

அப்போது தோட்டக்காரனின் சத்தம் கேட்டு மீண்டும் எழுந்து ஓடினார்கள். அப்போது கள்ளிசெடிகளை நோக்கி அபுபக்கர் குனிந்தான். யோகிதா அவன் பின்னால் நின்றபடி எட்டிப்பார்த்தாள்.

''இதோ பாரேன் . அட்டை. அவை கைகளில் மீது ஊறும் போது ஒரு மாதிரியாக சிலிர்க்கும் பாரேன். '' என்றபடி ஒரு அட்டையை தூக்கி அவள் கையில் போட்டான். அவள் அலறியபடி உதறிக்கொண்டு ஓடினாள்.

அபுபக்கர் பலமாக சிரித்தான். அவன் ஓவ்வொரு அட்டையையும் எடுத்து தன் கை மீது போட்டுக்கொண்டான். அவைகள் வெகு வேகமாக குதித்துக்கொண்டு அவன் மீது ஏற ஆரம்பித்தன. முழங்கை, கழுத்து என பரவிக்கொண்டிருந்தன.

யோகிதா கத்தினாள் ''உதறிவிடு அபுபக்கர்..''

அவளின் பயத்தை பார்த்து அவன் இன்னும் பலமாக சிரித்தான். ஆனால் உதறிவிடவில்லை.

யோகிதா நேராக வந்து அவன் மீதிருந்த அட்டைகளை எல்லாம் தட்டி விடத் தொடங்கினாள். பயத்தில் அவள் அழுவதற்கு ஆயத்தமானது போல கண்களில் நீர் கோர்த்துகொண்டது. அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு அபுபக்கர் அசட்டையாக கைகளை துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய் விட்டதென்னவோ உண்மை.

''சரி. நான் உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். நீ எப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்.?''

''இன்னும் நான்கு நாட்களில்.''

''ஒ..அதற்குள் தந்துவிடுவேன்.''

அவர்கள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் கழித்து வாசலில் ஏதோ சத்தம் கேட்டு யோகிதா வெளியே வந்தாள். அபுபக்கர் சிரித்தபடி நின்றிருந்தான்.

''யோகிதா. நான் உள்ளே வரட்டுமா? உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்..''

''இல்லை. அம்மா திட்டுவாள். அது என்ன கையில்..? அச்சமயத்தில் அவள் அம்மா அழைக்க சிட்டாக பறந்து விட்டாள்.

அவள் திரும்ப வந்து பார்த்த போது அபுபக்கர் அங்கே இல்லை. சுற்றிலும் தேடியும் எங்கும் அவனை காணவில்லை. வாசலில் ரிப்பன் காட்டிய ஒரு பரிசுப் பெட்டி ஒன்று இருந்தது.

யோகிதா அதை பிரித்து பார்த்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் ஒரு கண்ணாடி சீசா நிறைய பல வண்ணங்களில் சில்வண்டுகள் சிறகடித்துக்கொண்டிருந்தன . ஒரு அழகிய வெள்ளை முயல் கழுத்தில் மணியுடன் அவளை மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தது. மலர்ந்த அழகிய சிகப்பு ரோஜா ஒன்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது .

Sunday, October 10, 2010

எந்திரன் vs அவதார்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.






இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

Tuesday, October 5, 2010

எந்திரன் -- பரபரப்பு செய்திகள்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.






இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்.