Sunday, February 20, 2011

விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக

* மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.

*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.

*கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.

* ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..

*இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.

*தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.

* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.

விஜயகாந்தின் சேலம் மாநாட்டு ஒளிபரப்பை தெரியாமல் கேப்டன் டிவியில் பார்த்துவிட்டேன்.மனிதர் என்னா நிதானம்...என்னா பேச்சு..அப்பப்பா...எத்தனை பெக் உள்ளே போனதோ...தள்ளாடி தள்ளாடி உளறிக் கொட்டி டாஸ்மாக் பெஞ்சு போல இருந்தது அந்த கூட்டம்.இலவசமாக கறிக்குழம்பு..,நம்மாளுங்க தான் இலவசம் னா அதுவும் சோறுன்னா விடுவாங்களா..?

நின்று ஒரு நிதானமாக பேச தெரியாத இந்த மனிதனும் நாளைக்கு முதல்வராக ஆசைபடுகிறார்.கொள்ளையடித்து செல்ல புது கும்பல்.இளைஞர்கள் இவர்கள் பின்னால் செல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.மாற்றுக் கட்சி என்றால் பொறுப்பற்ற கட்சிகளுக்கு மாற்று ஒரு பொறுப்பான கட்சியாக இருக்க வேண்டுமே தவிர ,பொறுப்பற்ற தன்மையில் போட்டி போடுகிற தன்மை அல்ல.விஜயகாந்தின் கனவு வெறும் கனவாகவே மூடிய வேண்டும் என்பதே அடியேனின் விருப்பமும் வேண்டுதலும்.

தேர் திருவிழாவும் குடுமி ஐயரும்


எங்கள் ஊரில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.நடந்த விழாவை பதிவாக போடும்படி ஏராளமான நண்பர்கள் கேட்டுக்கொண்ட படியால் (உண்மையில் என்னை அப்படி கேட்டுக்கொண்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே.ஏராளமானவர்கள் என்று சொல்வது கலிங்கத்துப் பிராணி காலத்திலிருந்தே தமிழர்களின் தொன்று தொட்ட வழக்கம்.வரலாறு காணாத கூட்டம் என்றால் மைக்காரரையும் சேர்த்து ஆறு பேர் என்று அர்த்தம்.இந்த மிகை கலாச்சாரம் ஒரு தனி,மினி மோசடி (சுஜாதா சொன்னது போல) )
இதோ பதிவாக..

தினம் தினம் கலைநிகழ்ச்சிகளாக, பாட்டுக் கச்சேரிகளாக கலை கட்டியது திருவிழா.சத்திய சீலன்,மங்கையர்க்கரசி,அறிவொழி அய்யா என பிரபலமான சொற்பொழிவாளர்களின் வருகைகள் தான் ஹைலைட்.திருவிழா என்றாலே அழகோவியங்களும், அழியா 'ஓவியங்களும்' தானே முதன்மை.ஆனால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம்.இளைஞர்களின் கூட்டங்கள் அவ்வளவாக இல்லை.வருத்தம் மறுநாள் கொஞ்சம் தீர்ந்தது.

மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரில் முருகன் பவனி.இருபதடி உயரத்தில் மிகப் பெரிய மரத்திலான தேர்.படிகளில் ஏறி உள்ளே சென்று தரிசிக்கும் வகையில் தேரின் வடிவம்.நான் ஒரு முக்கிய வேண்டுதலுக்காக கால் கடுக்க வரிசை நின்று தேரில் ஏறி பயந்து பயந்து சுற்றி வந்து முன்னால் நின்றால் முருகனை விட அழகான ஒரு இளம் அர்ச்சகர் தட்டுடன் 'தரிசனம்' கொடுத்துக் கொண்டிருந்தார்.எனக்கு ஆச்சர்யம்,தயக்கம்,கோவில்,முருகன் என்று கலவையான எண்ணங்கள்..அழகான முகத்தில் அருமையான குங்கும நாமம்.கீழே சந்தன கீற்று.கொண்டு போன வேண்டுதல் காணாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

இது அடியேனின் தவறு அல்ல.என் போன்ற பக்தைகளுக்கு (?) இப்படிப்பட்ட சங்கடங்களை முருகன் தவிர்த்திருக்க வேண்டும்.முருகன் மன்னிப்பாராக!இதில் பெரிய எரிச்சலாக அமைந்தது..என் பின்னால் வந்த பிராமண பெண்மணி "சீக்கிரமா போங்கோ..நாங்கள்லாம் தரிசிக்க வேண்டாமா .."என தள்ளிக் கொண்டே வந்தார்.நான் கோபமாகி "தரிசியுங்கோ .. யாரு வேண்டாம்னா..ரெண்டு பேர் இருக்கா,யாரா வென 'தரிசிங்கோ.."என நான் சத்தமாக கூறியதை கேட்டு புரியாமல் விழித்தார்.பின்னர் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.இப்படியாக அரைகுறை 'தரிசனத் தோடு ' வேண்டுதலை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு திரும்பினேன்.

அர்ச்சகர்களில் சிலரிடம் மட்டுமே தெய்வீக அழகு இருக்கும்.ஆனால் அவர்களை போல சிடுமூஞ்சிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. பிராமின்ஸ் சுத்த சைவம் என்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு கோபம் வருவதை போல,வசை வார்த்தைகளை எங்கும் கேட்க முடியாது.சிலர் 'வள் வள்' என்று விழுவதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறார்களோ என தோன்றும் படி இருப்பார்கள்.

அன்று மாலை சத்தியசீலன் அவர்களின் அருமையான பட்டிமன்றம்.அறிவொழி அய்யா,இன்னும் பிரபல பேச்சாளர் என.அதில் சத்திய சீலன் அவர்களுக்கு இந்த வருடம் கலைமாமணி விருது கிடைத்திருப்பதாக அவரும் ,பலரும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு கொஞ்சம் வருத்தம்.அது அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது.நேற்று வந்த நடிகர்கள்லாம் விருது..? அரைகுறை நடிகைகளுக்கும் கலைமாமணி..காலங்கலாமாக தமிழ்,இலக்கியம் என தொண்டாற்றுவோருக்கும் கலைமாமணி.என்னய்யா விருது லட்சணம்?அவர் அதனை நிராகரித்திருக்க வேண்டும் என விரும்பினேன்.

விழாவின் ஒரு பகுதி முழுவதும் கடைகள்,சர்க்கஸ்.ராட்டினம்,ஸ்கேட்டிங்,போட்டிங் என கலை கட்டியது.எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு கையில் இரண்டு பலூனோடு வெளியே வந்தேன்.வேறு என்னத்தை வாங்குவது?எல்லாம் எங்கும் கிடைக்க கூடிய பொருட்கள் தான்.பலூன்கள் மீது சிறுவயது முதலே அலாதி பிரியம்.வாங்கி வந்து வீட்டின் மூலையில் நாள் கணக்காக கிடக்கும். கடைசியில் டென்னிஸ் பால் சைசுக்கு சுருங்கி பின் காணாமல் போய்விடும்.ஆனாலும் ஆசை தீராது.

ஆனால் ஒரு பலூனின் விலை பத்து ரூபாய். கடைக்காரன் புலம்பினான்."எங்கம்மா..இப்பல்லாம் யாரு இதை வந்குராவ..பிளாஸ்டிக் பலூன் தான் உடையாது,காத்து போனாலும் ஊதிக்கலாம்னு இதை யாரும் கண்டுக்கிறது இல்லை.ஏதோ உங்களமாதிரி ரெண்டு பேர் வாங்கினாதான் எங்களுக்கு பொழப்பு.."அவனின் சோக கீதம் என்னை தியாகியாக்கியது.கூட பத்து ரூபாய் கொடுத்து இன்னொன்றையும் வாங்கிக் கொண்டேன்.

பக்கத்து வீட்டு எல்.கே.ஜி.பொடியன் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "ஐய்யே..என்னக்கா இது..சின்ன புள்ளை மாதிரி பலூனோட வரீங்க" அவன் என்னவோ பெரிய மனுஷன் மாதிரி.

நான் சிரித்தேன்.பேசாமல் பளிப்பு காட்டிக்கொண்டே பலூனை தட்டியதை பார்த்து சிறுவனுக்கும் ஆசை வந்துவிட்டது."அக்கா..எனக்கும் ஒன்னு..எனக்கும் ஒன்னு"என்று பின்னாலேயே வந்துவிட்டான்.

"ஏன்டா..உங்கம்மாவை வாங்கி தர சொல்லேன்" என்றேன் அவனிடம் ஒன்றை நீட்டிக் கொண்டே.."போங்கக்கா..அது வெடிச்சிடும்..யூஸ்புல்லா ஏதாவது வாங்கி தரேன்னு சொல்லுது.."சிறுவன் ரப்பரை பிடித்துக் கொண்டு தட்டிய பொது அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பலூன் என்றாலே வேண்டிக்க தானே! அதனோடு ஓடியாடி ,தட்டி தட்டி ஏதோவொரு எதிர்பாராத சமயத்தில் பட்டென்று வெடிக்கத்தானே பலூன்..இதில் என்ன யூஸ்ஃபுல் வேண்டிக்கிடக்கிறது?படிப்பு படிப்பு என மனித்தன்மை தொலைத்த இயந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்து சிறுவர்கள்.

சரி..விழாவிற்கு வருவோம்.திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பு மங்கையர்கரசியின் அருமையான சொற்பொழிவு.தொடர்ந்து ஐந்து நாட்கள்.அருமையான பேச்சு.அதைவிட அருமையான உச்சரிப்பு நடை.காதில் இன்பத் தேன் வந்து பாய வேண்டும் என்றால் இவரின் பேச்சை கேட்டுப் பாருங்கள்.அவ்வளவு அருமை.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர்கள் தங்களால் இயன்ற தொகையை கவரில் வைத்து கொடுக்கலாம்.எல்லோரும் பத்து,நூறு என வைக்க, யாரோ ஒரு தருமப் பிரபு மட்டும் கிரானைட் கல்லை கவரில் வைத்து அதை அழகாக ஒட்டி அனுப்பியிருக்கிறார்.மங்கையர் கரசி அதை மேடையிலேயே சொல்லி அந்த முகம் தெரியாத ஆசாமிக்கு சிறப்பு வாழ்த்துக்களோடு சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சரி,வேண்டுதலுக்கு வருவோம்..என் நண்பர் வேலை வேலை என்று அநியாயத்திற்கு பிஸியாக இருக்கிறார்.அவரின் பணிச்சுமையை குறைத்து கொடு முருகனே .."என்று வேண்டிக்கொண்டு முருகனிடம் விடைபெற்றேன்.முக்கியமான செய்தி..அன்று அந்த பழைய அர்ச்சகர் அன்று இல்லை !

திருவிழா இனிதே நிறைவடைந்தது..!

இவ்வளவு நேரம் இப்பதிவை படித்து தங்கள் பொன்னான நேரத்தை தியாகம் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி..! வணக்கம்..!வந்தே மாதரம் ...!

Friday, February 18, 2011

அரசியல் வாதிகள்

இந்தியாவில் மட்டுமல்ல;உலகம் முழுவதிலுமே அரசியல்வாதிகள் இறைவனின் அபூர்வ ஸ்ருடியாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஒன்று--

சுயநலத்தை அடிப்படையாக வைத்து தங்கள் அரசியலை வைத்து கொள்கிறார்கள்.

இல்லை;அரசியலை அடிப்படையாக வைத்து சுயநலத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்

சுயநலமே இல்லாத அரசியல்வாதிகள் அபூர்வமாக தோன்றி கொஞ்ச நாளிலேயே அஞ்ஞாத வாசம் புரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த சமுதாயம் எந்த கணக்கு போட்டு அரசியல் வாதிகளை ஏற்று கொல்கிறது?

அவனவன் பேச்சையும்,எழுத்தையும் பார்த்து !

காரியம் செய்பவனை விட வேஷம் போடுகிறவனுக்கு தான் நினைப்பது கிடைக்கிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல் சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனை தான் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.

சொந்தமாக தொழில் நடத்தி வருமானம் பெற்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு அரசியலை இலவச கடமையாக செய்வோர் இந்த நாட்டில் மிக குறைவு!

அரசியலையே தொழிலாக நடத்துவோர் தான் மிக அதிகம்.

ஓர் அரசியல் வாதிக்கு திடீரென்று சொத்து வந்தது.வீடு வந்தது என்றால் அது எப்படி வந்ததென்று கேட்க வேண்டியவர்கள் மக்கள்.

சிலர் அதுமாதிரி கேட்கிறார்கள்.சிலர் இப்படி நமக்கு வராதா என்று ஆயாசப் படுகிறார்கள்.

அரசியல்வாதி மக்களுக்கு அரசியலில் மட்டும் தவறான வழியை காட்டவில்லை.நாணயத்திலும் நடத்தையிலும் அதே வழியை காட்டுகிறான்

பணம் எதையும் நிர்ணயித்துவிடுகிறது.

ஓர் அயோக்கியனை யோக்கியன் என்று காட்டுவதற்கும் அது பயன்படுகிறது

பல நேரங்களில் அரசியல் தொண்டர்கள் மீது நான் பரிதாப்படுவதுண்டு.

அவர்களில் பலர் கள்ளங்கபடமே அறியாதவர்கள்.

அதனால் தான் அவர்கள் தலைவர்களாக வரமுடியவில்லை

அரசியலில் கார் வாங்கியவனும் வீடு வாங்கியவனும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறான்.

கால் போனவனும் கண் போனவனும் என் கண்ணுக்கு தெரிகிறான்

யாரை நோவது?

மக்களை தவிர யாரை நோவது?

ஒவ்வொரு தடவையும் எரியாத விளக்குக்கே எண்ணெய் ஊற்றி பழக்கப் பட்டுப்போன மக்கள் இப்போது மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்?

அழகான பேச்செல்லாம் அவர்களுக்கு உண்மையாகவே தோன்றுகிறது.

ஏன்?

படித்தவனுக்கே அப்படிதான் தோன்றுகிறது.படிக்காதவன் நிலை என்ன?

உணர்ச்சி பூர்வமாக தோன்றுகிற உண்மைகளை இதுவரை எந்த அரசியல்வாதி வெளியிட்டிருக்கிறான்?

ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து கூட்டம் முழுக்க நம்பி தன் பக்கம் வந்தவுடன் மெதுவாக அந்த பொய்யிலிருந்து அவனும் வாபசாகி தன்னுடைய கூட்டத்தையும் வாபசாக செய்து அந்த வெறுங் கூட்டத்துக்கு தலைவனாகி விடுகிறான்

என் அனுபவத்தை சொல்லுகிறேன்.

திராவிட நாடு என்பது வெறும் கற்பனை.அது கிடைக்காது என்று தெரிந்தே திராவிட நாடு கேட்டோம்.

ஆனால் திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மிக அழுத்தமாக ஓட்டினோம்

ஒரு கட்டத்தில் அது பற்றி விவாதித்து விட்டு நானும் சம்பத்தும் வெளியேறினோம்.

உடனே திமுக தலைவர்கள் "திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு கேட்போம்.சம்பத் ,கண்ணதாசனைப் போல கோழைகளல்ல நாங்கள் " என்று முழங்கினார்கள்.

அந்தோ! என்ன சொல்வேன்..

பதவிக்கு போகவேண்டும் என்று ஆசை வந்து ஆறாவது மாதமே அவர்களும் வாபசானார்கள்.

வாபசான அழகையும் நியாயப் படுத்தி தங்கள் கூட்டத்தை நம்ப வைத்தார்கள்.அவர்களும் நம்பினார்கள்.

நாத்திக துவேஷம்,சுயமரியாதை,பார்ப்பன துவேஷம் எல்லாம் வாபசான கதையும் இதுதான்..

காலங்களாலே கருத்துகள் மாறலாம்

ஆனால் இதை மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தே ஒரு கருத்தை சொல்வது கிரிமினல் குற்றம்.

நியாயங்கள் தெளிவாக தெரியும் போதே அநியாயங்களுக்கு துணை போகிற மக்கள் உருப்படாத பிள்ளைகளைதான் தலைவர்களாக பெறுவார்கள்.

ஓர் அரசியல் தலைவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு பிறகு அவர் போடும் கோடெல்லாம் ஓவியம்,அவர் கத்தும் வார்த்தைகள் எல்லாம் காவியம் என்று விஞ்ஞான விளக்கம் கூறும் மக்கள் அந்த தலைவர் தவறு செய்வதாக சொன்னால் என்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் என்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த தலைவரும் தவறு செய்வதையே தேசியமயமாக்கி விடுகிறார்.

ஜனநாயகம் வருஷா வருஷம் பாடம் போதிக்கிறது.ஒரே பாடத்தை திரும்ப திரும்ப போதிக்கிறது.

மக்கள் எனும் மக்குகள் இதுவரை ஒரு பரிட்சையில் கூட பாஸ் பண்ணவில்லை !

-- கண்ணதாசன்

Tuesday, February 8, 2011

சாந்தி தெரு - 2 காமன் சென்ஸ்

துங்கும் நேரத்தை தவிர மற்றநேரங்கள் எல்லாம் எப்போதும் இரைச்சல் தான் சாந்தி தெருவில் .அங்கே வசிக்கும் ஜனங்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் நாள் தவறாமல் நடக்கும்.பெண்களே ரிப்பன் வெட்டி சண்டையை துவக்கி வைப்பார்கள்.குழாயடியில் தண்ணீர் சண்டை,வாசல் பெருக்குவதில் எல்லைச் சண்டை,குப்பை கொட்டிவதில் சண்டை,பிள்ளைகள் தெருவில் புரண்டு கொண்டால் பெரியவர்களும் வயது பார்க்காமல் புழுதியோடு புரண்டு சண்டை,பெண்களில் ஒருத்தி மற்றவள் புருசனிடம் சரசம் செய்வது பற்றிய சண்டைகளால் தொண்டை கிழிய மூர்க்கமான குரல்கள் எழும்.

முன்பொருமுறை எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பார்த்தோம்.அதன் பிறகு 'காமன் சென்ஸ்' விவகாரத்தால் அடுத்ததாக பரபரப்படைதிருந்தது சாந்தி தெரு.

அதே நான்கு வீடுகளில் 2 நம்பர் வீட்டில் புதிதாக குடிவந்திருந்தாள் வனிதா என்ற நடுத்தர பெண்.கணவனும்,4 ஆம் வகுப்பு பையனுமாக குட்டி குடும்பம்.வனிதாயின் முகச்சாடைஎப்படி என்றால் சாந்தமாக பார்த்தாலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.கோபமாக பார்த்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. கொஞ்சம் கர்வியும் கூட.டிகிரி ஏதோ படித்திருந்ததால் தன்னை சுற்றி உள்ளே அனைவரும் தன்னை வணங்க வேண்டியவர்கள் என்று ஒரு நினைப்பு.தன் 4ஆம் வகுப்பு மகனுக்கு தானே டியுசன் எடுப்பாள்.6 யும் 4 யும் பெருக்கினால் 22 என்று டியுசன் எடுக்கும் அளவுக்கு அறிவு ஜீவி.தப்பு தப்ப சொல்லி கொடுக்காதம்மா..என தினமும் பையன் அம்மாவிற்கு டியுசன் எடுப்பான்.ஆனாலும் அவளின் மிடுக்கு மட்டும் குறையாது.

வனிதாவின் பக்கத்துக்கு வீட்டில் காமாட்சியின் குடும்பம்.பையன் காலேஜிற்கும் பெண் 10 வகுப்பும் படிக்கிறார்கள்.காமாட்சிக்கு எப்போதும் நியாயம் தான்.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு பேச்சுக்கள் தான்.சண்டைகளில் காமாட்சி சேலையை தூக்கி சொருகினால் எதிரில் ஒருவரும் நிற்கமாட்டார்கள்.விடு ஜூட்..!

இப்படியான ஒரு நாளில் வழக்கம் போல் சூரியன் உதிக்க பொழுது புலர்ந்தது.வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.காமாட்சி மோட்டாரை போட வெளியே வந்தாள்.ஒயரை எடுத்து வனிதாவின் வீட்டின் குறுக்காக கொண்டு சென்று பிளக்கில் சொருகி சுவிட்சை போட்டாள்.வனிதா வீட்டருகில் தான் சுவிட்ச் இருந்தது.காமாட்சி போய்விட்டாள்.

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்குமோ என்னமோ,வனிதா வெளியே வந்தாள்.தனக்கு குறுக்காக ஒயர் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.ஒயரைதாண்டிகொண்டு வெளியே போக முடியாது.பையனோடு கத்திக் கொண்டு வெளியே வந்த அவள் கோபத்தை ஒயரின் மேல் காட்டி அதை வெடுக்கென்று கழற்றி வீசினாள்.பதிலுக்கு ஒயரும் தன் கோபத்தை காட்டவேண்டுமல்லவா...அது அறுத்துக் கொண்டு தொங்கியது.ஒயர் அறுந்துவிட்டதை பார்த்து திடுக்குற்றாள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறுந்த ஒயரை பாங்காக சுற்றி வைத்து விட்டு தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பாந்தமாக உள்ளே சென்று விட்டாள்.

பத்துநிமிடம் ஓடியும் தண்ணீர் வரவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த காமாட்சி என்ன என்று எட்டிப் பார்க்க வந்தாள்.ஒயர் அந்துபோய் கிடந்தது.அந்த காட்சியை பார்த்ததும் அம்மாளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.ஆனால் என்ன இயற்கை அதிசயமோ ரொம்ப அமைதியாக "இது யாரு இப்படி அத்துப் போட்டது?" என்று கேட்டுக் கொண்டே வனிதாவின் வீட்டை நோக்கினாள்.

அந்த பெண்மணியோ"யாராவது வேணும்னு அத்து போடுவாங்களா?"என்று திருப்பி கேட்டாள் கடுகடுவென்று.

"இது என்னடியம்மா..வேணும்னு புடுங்கி போட்டீங்களானா கேட்டேன்.யாரு இப்டி பண்ணதுன்னு தானே கேட்டேன்.அதுக்கேன் சண்டைக்கு வர"

"ஆமாமா...காலங்காத்தாலே உங்கள மாதிரி எங்களுக்கு வேளை வெட்டி கிடையாது பாருங்க..சண்டைக்கு அலையிறாங்க..நீதாமா சண்டைக்கு வந்த..உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட காமன் சென்சே கிடையாதா..?"அவள் கத்திக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

"ஆ..."

காமாட்சியம்மாள் வாயடைத்து நின்றுவிட்டாள். அந்த ஒயர் கூட திறந்த வாய் மூடவில்லை.

காமாட்சி தலைகுனிந்த படியே வீட்டிற்குள் வந்தாள்.அவள் ஒன்றும் பேசவில்லை.காமன் சென்சுக்கு அர்த்தம் புரியவில்லை.அவள் ஏதோ தனக்கு புரியாத ஒன்றை சொல்லி வாயடைத்து விட்டாள் என்று சோகமாக உள்ளே வந்தாள்.தன் பையனை அழைத்தாள்.

"அவ ஏதோ இங்கிலீசுல சொன்னாலே,அதுக்கு என்னா அர்த்தம்..? அவள் அப்பாவியாக கேட்டதை பார்த்து பையன் சிரித்தான்."என்னா வார்த்த?"

"அவ ஏதோ கம்னோ..காம்மன்னோ...தெரிலடா..ஏதோ சொன்னா"

"அது காமனுமில்லா..சோமனுமில்லா.. காமன் சென்ஸ்"

காமாட்சி உற்சாகமாக "அதான்..அது தாண்டா..அப்டினா.."

"பொது அறிவுன்னு அர்த்தம்"

"அப்டின்ன..பொது அறிவில்லனா சொன்னா"அவளுக்கு ஆத்திரம் வந்தது.

"இல்லை. இல்லை.அதுக்கு சரியான அர்த்தம் அறிவு கெட்டவள்னு அர்த்தம்.பையன் தன் பங்கினை சிறப்பாக முடித்து கொண்டு பையை தூக்கி கொண்டு ஓடியே விட்டான்.

காமாட்சிக்கு உடம்பு நடுக்கியது.ஆத்திரம் பொங்கியது. படபடவென்று சேலையை தூக்கி சொருகினாள்
நேராக வனிதாவின் வாசலுக்கு வந்தாள்.

"ஏண்டி..எவ்ளோ திமிர் இருந்தா என்ன அறிவு கெட்டவன்னு சொல்லுவ..நீதாண்டி அறிவு கெட்டவ..உங்கப்பே,,ஆத்தா பெத்த மானங்கெட்ட ஜன்மம்..(டேஷ்..டேஷ்...)காமாட்சி ஜிங்கு ஜிங்கென்று சாமியாடினாள்.வனிதாவின் குடும்ப மானத்தை கப்பலேற்றும் கடமையில் பிஸியாக இருந்தாள்.

வனிதாவும் பதிலுக்கு கத்தினாள்.

அந்த தெருவில் இருந்த சோம்பேறி கூட்டமொன்று இந்த கலாட்டாவை கண்டுகளிக்க..ஒருவரும் வந்து தடுக்கவில்லை.அதுவுமில்லாமல் இவ்வளவு பெரிய தமாஷை நிறுத்த யாருக்கு தான் மனம் வரும்.
சண்டை தொடர்ந்தது.ஒருவரை ஒருவர் மாறி மாறி சபித்து கொண்டனர்.

திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற வனிதா பக்கத்திலிருந்த சீவக்கட்டையை எடுக்கு போக,அதுவரை வேடிக்கையில் சிரத்தையாக இருந்த அவள் கணவனுக்கு எங்கிருந்தோ வீரம் பொத்துக்கொண்டு வர அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.வனிதா மிரண்டு போய் ஸ்தம்பித்து நின்றாள்.அவமானத்தால் வெடுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவன் திரும்பி காமாட்சியம்மாவை பார்த்து "அவ செஞ்சதுக்கு நாம் மன்னிப்புகேட்டுக்கறேன்..."அவனும் உள்ளே சென்றுவிட்டான்.அவள் ஒன்றும் சொல்லாமல் மனதிற்குள் தான் செய்ய நினைத்ததை அவன் செயலாக்கியத்தை உள்ளுர மகிழ்ந்தாள்.

இத்தோடு சண்டை இனிதே முடிவடைந்தது.இறுதி வெற்றி காமாட்சிக்கே!

அவன் மன்னிப்பு கேட்டது அவளுக்கு கூச்சமாக போய்விட்டது.ஒரு ஆம்பிளை..மன்னிப்பு கேக்கறான்..இந்த பஜாரிக்கு இப்டி ஒரு புருஷன் என்று முணுமுணுத்து கொண்டே தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒயர் என்ன நினைத்திருக்கும்?


--
yalini

Friday, February 4, 2011

புது மாதிரிக் கதை



"கதையில் ஒன்றும் புதிதாக இல்லையே..இந்த மாதிரி கதை ஒன்றை பிரெஞ்சு பாஷையில் படித்தது எனக்கு நியாபகத்துக்கு வருகிறது"

இது ஒரு அண்டப் புளுகு..அவனுக்கு பிரெஞ்சு பாஷையில் ஒருவரி கூட படிக்க தெரியாது.அதை அவனுக்கு எடுத்து கட்டினேன்.

"தப்பாக சொல்லுகிறாய்..இது பிரெஞ்சு கதையல்ல.ஜெர்மன் கதை.அந்த பாஷையில் தான் நான் இதை படித்தேன்.நீயும் அதில்தான் படித்திருக்க வேண்டும்."

இருவருக்கும் அந்த பாஷையில் ஓர் அட்சரம் கூட தெரியாது.அதனால் என்ன தமிழிலேயே புளுகுவதற்கு?

--கொனஷ்டை.

அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

ஜெயா டிவியில் இலையாட பூவாட நிகழ்ச்சிக்கு கெமிஸ்ட்ரி புகழ் கலா மாஸ்டரும் நமீதாவும் நடுவராக கலக்கலாம்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்தி நாங்கள்லாம் கலை குடும்பம் என ரஜினியும் கமலும் சோப்பு போடலாம்.கவிப் பேரரசு வைரமுத்து தைரிய லட்சுமி ,தானிய லட்சுமி என கவி பாடலாம்.

அம்மாவின் கதை வசனத்தில் சினேகன் நாயகனாக நடிக்கும் கொடுமைகள் அரங்கேறலாம்.(இலைஞன்?)

ஜெயா பிக்சர்ஸ் ,ஜெ ஜெ மூவீஸ் என்ற பெயர்களில் திரைத்துறைக்குள் கொள்ளை கும்பல்கள் படையெடுக்கலாம்..

ஏதும் விட்டுப் போச்சோ..எவ்வளவோ பாத்துட்டோம்...