Friday, January 21, 2011

நல்ல பிசாசு

நான் கணேஷை வழியனுப்ப ரயில்நிலையம் வரை சென்றேன்.மதுரைக்கு பெற்றோரை பார்க்க செல்கிறான்.டிக்கெட்டுகள் வாங்கும் படலம் எல்லாம் முடிந்த பின் இருக்கையில் அமர்ந்தோம்.ரயில் கிளம்ப இன்னும் 15 நிமிடம் இருந்தது.வளவளவென பேசிக்கொண்டே இருந்தான்.

நான் அவனிடம் வரும் போது ஒரு புத்தகத்தை சொல்லிவிட்டேன்.மறக்காமல் வாங்கிவருமாறு.எங்கு தேடியும் கிடைக்காமல் ஏமாற்றியது."மறக்காம கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.சரியா...ப்ராமிஸ்" சிரித்தான்.

"சரி...பாத்து பத்திரமா போ..கால் பண்ணு போனதும்...சரியா.. அப்புறம்...அப்பாவ கேட்டதா சொல்லு...அப்புறம்..". நான் சொல்வதை கேட்டு கடகடவென சிரித்தான்.நான் ஒரு சிறு குழந்தைக்கு புத்திமதி சொல்வது போல சிரத்தையுடன் கூறியது அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது போலும்.நானும் சிரித்தேன்.அவன் எப்போதுமே அப்படிதான்.அழகான முத்து போன்ற பற்கள் அவனுக்கு.அவன் சிரிக்கும் போது நான் அவன் முகத்தையே ஆவலாக பார்த்துக்கொண்டிருப்பேன்.

ரயில் கிளம்பியது.பரஸ்பரம் விடைபெற்றுக்கொண்டோம்.மின்னலைப்போல வேகமெடுத்து வண்டி கிளம்பியது.நானும் அலுவலகம் திரும்பினேன்.இனி இந்த பாழாய்ப்போன டிராப்பிக்கில் மாட்டிகொண்டு போய் சேர ஒருமணி நேரமாவது ஆகும்.எரிச்சலாக வண்டியை கிளம்பினேன்.

வழியெங்கும் எனக்கு கணேஷின் நினைவு.கல்லூரியில் அறிமுகமான என் அருமை நண்பன்.சரியான புத்தக பைத்தியம்.அவன் சக நண்பர்கள் எல்லோரும் கேர்ள் ப்ரெண்ட்ஸ் ,ஸ்பென்சர்,பீச் என்று சுற்றிக்கொண்டு இருக்க அவன் மட்டும் எங்கெங்கோ புக் ஃபேராக தேடி அலைவான்.ஹாஸ்டலில் எங்கள் அறையில் ஒரு மினி லைப்ரரியே வைத்திருப்பான்.இலக்கிய பைத்தியம்.தேடி தேடி வாசித்துவிட்டு அதை அவன் விமர்சிக்கும் முறையே அலாதியானது.அதற்காகவே நான் காத்துகொண்டிருப்பேன்.இவனோடு சேர்ந்து எனக்கு அந்த பைத்தியம் பிடித்ததில் ஆச்சர்யமில்லை.இருவருமாக சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம் புத்தகங்களை தேடி..

தனக்கு என்று சில எழுத்தாளர்களை பூஜித்துக் கொண்டிருப்பான்.என் ஆஸ்தான எழுத்தாளர் என்றால் அவர் ஈ ஓட்டுவது கூட இலக்கியம் தான் என்பான்.அதுவுமில்லாமல் அவன் ஒரு குஷி பேர்வழி.எல்லாவற்றையும் மிக சகஜமாக எடுத்துக் கொள்வான்.நான் ஒருமுறை கோபத்தில் அறைந்துவிட்டேன்.பிறகு எனக்கே கஷ்டமாக போய்விட்டது.சாரி கேட்க போனால், 'இந்தாட..' மறுகன்னத்தை காட்டி கலகலவென சிரித்தான்..

நேற்று அவனின் வீட்டிலிருந்து 'குலதெய்வம் கும்பிடனும்..கண்டிப்பா வா..' என போன் வந்ததும் கிளம்பினான்.எப்படியும் ஒருவாரம் ஆகும் என நினைத்தேன்.அத்தன நாள் சந்தோசமா இருக்க விட்டுட மாட்டேன்பா..சீக்கிரமா வந்துடறேன்...

எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு நாட்களை ஓட்டிவிட்டேன்.ஆனால் அவனிடம் இருந்து போனே வரவில்லை.எனக்கு அடங்காத கோபம்.நான் அழைத்தால் அணைக்கப்பட்டிருந்தது.அவன் வந்தால் எப்படியெல்லாம் என் கோபத்தை காட்டலாம் என ஒத்திகைத்து கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள் இரவு..இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினேன்.கணேஷின் அழைப்பு ஏதும் வரவில்லை.மனதில் ஏதோ ஒரு பெரிய கவலை அழுத்துவது போல இருக்க...கதவை பூட்டிவிட்டு தூங்க போனேன்.கனவுகள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் போது..

'தடக் தடக் ' என கதவு வேகமாக தட்டம் சத்தம் .சரியாக நடுநிசி.நான் பதற்றத்தில் திறக்காமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருக்க...கதவு உடைந்து விடுவதுபோல ஆடியது.நான் வேகமா சென்று திறக்க,

"டேய்..கணேஷ்"நான் கத்தியே விட்டேன்.என்னடா இந்நேரத்துல".அவன் பேசாமல் உம்மென்று உள்ளே வந்தான்.

நான் கதவை பூட்டிவிட்டு "லக்கேஜெல்லாம் எங்கடா..இது என்ன ..போட்டுபோன சட்டையோட அப்படியே வந்திருக்க..?"

அவன் ஏதேதோ சொன்னான்.வார்த்தைகள் கோர்வையாக இல்லை.ஒருமாதிரியான வாசம் வந்தது.அவன் தரையில் கால்களை மடித்து உட்கார்ந்துகொண்டான்.இந்த செய்கை எனக்கு ஒரே குழப்பமாக ஏதோ போல அவனை பார்த்தேன்.

'இந்தாட'..ஒரு புத்தகத்தை கொடுத்தான்.நான் சொல்லிவிட்ட புத்தகம்..எனக்கு ஒரே மகிழ்ச்சி.'இத வாங்கத்தான் ரொம்ப கஷ்டப் பட்டேன்.' சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தான்.அவன் முகத்தில் உற்சாகமோ..பயணக் களைப்போ...எதுவும் இன்றி நிர்ச்சலனமாக இருந்தது.ஆனால் அந்த வாசனை..வரவர அதிகமாக வந்தது.

நான் கட்டிலில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை பிரித்தேன்.''நீ படிச்சுட்டயா.."

"...இல்ல... "

"என்னடா இது ஒரு வாசம்..."

அவன் நான் சொல்வதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் எங்கோ பார்த்தான். முகம் வெறித்து..தலை தாறுமாறாக கலைந்திருந்தது.பேய்காற்றில் தடதடக்கும் ஜன்னல்களையே வெறித்துக் கொண்டிருந்தது அவன் கண்கள்.

நேரம் பனிரெண்டை தாண்டி கொண்டிருந்தது.அவன் பேசிக்கொண்டே போனான்.அதே சிரிப்பு..அதில் ஜீவனில்லை..கண்களில் ஒளியில்லை.ஒரே இரவில் பேசிமுடிக்கவேண்டும் போல மணிக்கணக்காக பேசினோம் அந்த புத்தகத்தை பற்றி. அவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே கட்டிலில் என் அருகில் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டான்.'ச்சே .. அந்த பாழாய்ப்போன நாற்றம் தாங்கமுடியவில்லை.அது ஏதோ விசித்திரமான வெறுக்கும் வாசனையை இருந்தது.நான் இதனால் விலகி விலகி போனேன்.அவன் மீண்டும் அருகில் அருகில் வந்தான்.அந்த வாசனையை பற்றி கேட்க, பதிலே சொல்லாமல் ஏதேதோ பேசினான்.

இரவு நீண்ட இரவு ...ஜன்னல்கள் அப்படியே நின்றன.பூரண அமைதி.திடீரென்று பேச்சை நிறுத்தினான்.நான் எழுந்தேன்.சிகரெட்டை பற்றி வாயில் வைத்தவாறு அவனை பார்த்துக்கொண்டே கீழே பார்க்க...

அப்படியே உறைந்து போய் நின்றேன்.என் சிகரெட் வாயில் இருந்து அப்படியே நழுவியது.தலைசுற்றியது.இதயத்தை யாரோ பிடித்து கொடூரமாக இழுப்பது போல இருந்தது."கணேஷ்...உன் கா...ல்... கா...ல் ..." எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

கணேஷின் முகம் மாறியது.என்னை விழுங்கிவிடுவது போல பார்த்தான்.'ஐயோ..என்ன பார்வை இது'

என் அருகில் வந்தான்.

"மனோ...புத்தக ஆசை.... புத்தகம் வாங்கிக் கொண்டு ஓடி வந்து நகரும் ரயிலில் தாவி ஏறியதில் தவறி விழுந்து இறந்து போனேன்....வா... என் அருகில் வா..."

கணேஷ் என்னை இறுக்கி அணைத்தான்.நானும் பிசாசாக அவனுடன் இணைந்தேன்.

2 comments:

பகலவன் said...

Shabba..........Enna Oru Arumaiyana Ezuththu Nadai.Aanal Mudivuthan Enna Pisasa Maththidichi.Vaazththukkal.

bandhu said...

கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை. ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!