Friday, December 31, 2010

நாளை மற்றுமொரு நாளே!

பூமி சுற்றுவது நிற்கப்
போவதில்லை.

சூரியன் தன் பணியை
நிறுத்தப்போவதில்லை

கடல் அலைகளில் மாற்றம்
ஒன்றுமில்லை

இந்த பிரபஞ்சத்தின் பணியோ
மாறப் போவதில்லை

பஞ்சபூதத்தின் பலன்களும்
எப்போதும் போலவே !

செவ்வனே சுற்றும் பூமியை
கூறுபோடும் மனிதனின் பேராசை
அடங்கப்போவதில்லை!

மக்களை சுரண்டும் 'தலைவர்களுக்கு'
மான ரோஷம் அது எப்போதும் வரப்போவதில்லை

இது எதையும் கண்டும் காணாமல்
செல்லும் ஏமாளி கோமாளிகளாகிய
நாமும் திருந்தப் போவது இல்லை

பிச்சை எடுக்கும் சிறுவர்களையும்
சோற்றுக்கு சாகும் மனிதர்களும்
நம் நினைவுக்கு என்றும் வரப்போவதில்லை!

தொலைகாட்சி அலங்கோலங்களும்
அதை பார்த்து ரசிக்கும்
ரசிகனின் மனநிலை மாறப் போவதில்லை

வெள்ளித்திரை மனிதர்களின்
தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும்
மானங்கெட்ட நிலை மாறப்போவதில்லை !

காசை கரியாக்கி வணிக
நிறுவனங்களை
வாழ வைக்கும் மக்களுக்கு
புத்தி வரப்போவதில்லை

ஒரு வேலை சோற்றுக்கு சாகும்
மனிதர்களுக்கும்,
கல் சுமக்கும் கூலி தொழிலாளிக்கும்

நாளை மற்றுமொரு நாளே !

Thursday, December 30, 2010

நீயும் நானும் ஒன்று!

அடுத்த வேலை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...

நீயும் நானும் ஒன்று!


தமிழனாய் இருந்துக்கொண்டு தாய்மொழியை மதிக்காதவர்களையும்
இன உணர்வு இல்லாதவர்களையும் கண்டு
உன் உள்ளம் கொந்தளித்தால்...
நீயும் நானும் ஒன்று!


சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..

நீயும் நானும் ஒன்று!


இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும் அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்

நீயும் நானும் ஒன்று!


வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்

நீயும் நானும் ஒன்று!


குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்

நீயும் நானும் ஒன்று!


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே - சேகுவேரா

Saturday, December 18, 2010

அந்த கடவுளுக்கு இது தெரியுமா?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது கடவுள் கேட்டுக்கொண்டிருப்பார்...நம் மீது அக்கறை கொள்வார் என மனத்துயர்களை பகிர்ந்து கொள்வது.அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயிலுக்கு போகின்றனர். வழிபடுகின்றனர்.

கோயில் என்றதும் மனதில் பல சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம்,அகன்ற வாசல் கதவுகள்,வெண்கல குமிழ் பதித்த படிகள், கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூசிய யானை, உள்ளே நுழைந்தால் செவியை நிறைக்கும் மங்கள இசை, அபூர்வமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தூண்கள்,சுவர் ஓவியங்கள்.அந்த ஓவியங்களை கூட உயிர் பெறச்செய்யும் ஓதுவாரின் தெய்விக குரல். கல் விளக்குகள்,அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

நீண்ட அமைதியான பிரகாரம், அங்கே அமர்ந்து ருசி மிக்க பிரசாதம் உண்டு பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம்.இனி நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம் கொள்ளும் முகங்கள்.

கோயிலை விட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும்.

ஆனால் நடைமுறையில் தமிழகத்தில் உள்ளே புகழ் பெற்ற கோவில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசற்படியில் ஆரம்பித்து வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல் வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்கு செல்லும் குற்றவாளி கூட மனத்தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ கோயிலுக்கு சென்று நிம்மதியை தொலைத்து வந்த கதைதான் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது.கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள்,கையூட்டுகள்,அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றிருந்தோம்.ஒரு நபருக்கு மொட்டை போடுவதற்கு 50 கட்டண சீட்டு பெற்று அங்கிருந்த நாவிதரிடம் சென்றோம்.அவர் தனியாக தனக்கு 50 ரூபாய் தரவேண்டும் என சொல்லிவிட்டார். நாங்கள் சீட்டை காட்டினாலும் அதெல்லாம் முடியாது என வாக்குவாதிட ஆரம்பித்து விட்டார். சுகாதாரமற்ற பிளேடு.குளிப்பதற்கு சுகாதாரமில்லாத அழுக்கான தண்ணீர் குழாய்.குளியல் அறையில் குளிக்க வேண்டுமானால் தனியாக 50 ரூபாய்,சந்தனத்திற்கு தனியே 40 ரூபாய்,வெறும் பூ மாலையும் ,தேங்காயும் இருந்த பூஜை பொருட்கள் 200 ரூபாய்.

உள்ளே செல்ல பொது தரிசனம், சிறப்பு தரிசனம் வி.ஐ.பி.தரிசனம் என மூன்று வகை.ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். ஆளுக்கு 250 ரூபாய்சிறப்பு தரிசன சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தால் நீண்ட வரிசை.எப்படியாவது முண்டியடித்து உள்ளே சாமியை பார்க்கலாம் என்றால் எதாவது ஒரு பிரமுகர் சாமியை மறைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் செய்வது போல சிறப்பு பூஜை செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சில 500 ரூபாய்களை பார்க்கும் அர்ச்சகர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே. காணிக்கைகளை உண்டியலில் போடாதிர்கள்...தட்டில் போடுங்கள் என்ற ஓயாத குரல்கள்.

சாமியை தரிசித்து வெளியே வந்தால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. பிரசாதம் வாங்கலாம் என்றால் கொள்ளை விலை.ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்.கோயில் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுக்ககூடாது என மிரட்டியது அந்த வெள்ளைக்காரர் ஒரு 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.வாங்கி கொண்டு சிரித்தபடியே வெளியேறினார் அந்த ஊழியர்.

சில வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை சென்றுருந்தேன்.'நினைத்தாலே முக்தி'.. பேசமால் நினைத்துகொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம்.ஏன்டா போனேன் என்றாகிவிட்டது.

படுமோசமான சாலைகள்,ஒரு அடிக்கு ஒரு பள்ளம்,பஸ்ஸில் போனால்,அதன் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸும் குலுங்குகிறது.அந்த லட்சணத்தில் சாலைகள். சாக்கடையில் இருந்து குப்பைகளை மலை மலையாக சாலையில் குவித்து வைத்திருக்கிறார்கள். சுத்தப்படுத்த ஆட்கள் இல்லை. அது மீண்டும் மழை வந்து சாக்கடையிலேயே கலக்கிறது. சாலையில் எங்கே பார்த்தாலும் குப்பை கூளங்கள் தான்.

இந்த பிரசித்தி பெற்ற கோவிலை சுற்றி இந்த அலங்கோலங்கள். ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஸ்டிரைக் செய்து பார்கலாமே. அப்போதாவது சரி செய்வார்கள் அல்லவா இந்த சாலைகளை'என்றேன். அதை எல்லாம் செய்து பார்த்துட்டோம்மா... உள்ளூர் மக்கள் சேறும் சகதியுமாய் இருந்த சாலைகளில் நாற்று நாட்டு விவசாயமே பண்ணி போராட்டம் நடத்திட்டோம்.ஒருத்தரும் கண்டுக்கிறதில்லை..' என்று வருத்தப்பட்டார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பாதை முழுக்க குப்பைகள் தான். அசுத்தம் தான். கோயில் நிர்வாகமோ, அரசோ எதுவும் கண்டுகொள்வதில்லை.

எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள். அவர்களை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. நமது மோசமான சாலைகளையும்,நாற்றமெடுத்து கிடக்கும் சாக்கடைகளையும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள், டன் கணக்கான எடை கொண்ட கற்களை எப்படி சாரமேற்றி மேலே கொண்டு சென்றிருப்பார்கள்,உள்ளே நந்தியின் சிலை மிகப்பெரியது.அதை தாங்கிகொண்டிருக்கும் கல் எவ்வளவு டன் எடையிருக்குமோ?..அவர்களின் உழைப்பிற்காவது,கற்பனை திறனுக்காவது மரியாதை தருகிறார்களா?

மிதியடிகள் பாதுகாப்பு இலவசம் என்று வெறும் போர்டு மட்டும் தான். அதற்கு தனியாக 5 ரூபாய். பூஜை பொருட்களுக்கும் கொள்ளை விலை. உள்ளே சென்றால் அர்ச்சகர்களின் கொள்ளை.தட்டில் காசு போடுங்கள் என மிரட்டி பிடுங்குகிறார்கள். தானாக ஒருவர் வந்து சந்தனத்தை நெற்றியில் வைத்துவிட்டு 5 ரூபாய் கொடுங்க என வாங்கிக்கொண்டார். அங்கே இருக்கும் சிவனுக்கு மரியாதையோ, பயமோ இல்லை.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படி கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது.காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தியில்' குணசேகரன். ஆனால் இன்று தமிழக கோயில்களைபோல பக்தர்களை துச்சமாக அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் ஹரித்துவார் கும்ப மேளாவில் கூட ஓர் இடம் அசுத்தமாக இல்லை. குப்பைகள் ,கழிவுகளை காண முடியாது.அவ்வளவு தூய்மை.தரிசனம் துவங்கி சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம் . ஆனால் தொடரும் தமிழக கோயில்களின் அவலத்தை போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால் கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

Tuesday, December 14, 2010

தேர்தலில் யாருக்கு வோட்டு போடுகிறீர்கள்?-சில டிப்ஸ்

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவதாக தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. உங்கள் குழப்பத்தோடு என் குழப்பத்தையும் சேர்க்க விருப்பம் இல்லை. ஆனால் ஓட்டு போடுவது முக்கியம். காரணம் ஏதோ ஒருவிதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை ,வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள். அதன் நிதர்சனங்கள் இவை.

சட்டப்பேரவையில் எதாவது ஒரு திராவிட கட்சிதான் ஆட்சிசெய்ய முடிகிறது.
ஊழலிலோ, அசாதனைகளிலோ, இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

வேட்டிக்கரையை உற்றுப்பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது

அதனால் தான் தமிழ் நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டி போட்டு இவர் போதும் அடுத்து நீ வாய்யா..நீ வந்து சுரண்டு.முதல் வருஷமாவது மக்களுக்கு எதாவது செய். என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையை குழப்பினாலும் நெகடிவ் ஓட்டு என்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசை பொறுத்தவரை அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி.முதலான இந்தி வளையமும், பசுமாடும் தான். அ.தி,மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களை புரட்டினால் தலை சுற்றி உடனடியாக ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து , விலகி, மீண்டும் சேர்ந்து ,விலகிய இந்த விளையாட்டில் யாருக்கு போட்டாலும் ஏமாறப்போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலை படித்தவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நடுத்தர மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளை குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி-சேலை, பக்கெட் பிரியாணி என்று எதாவது கொடுத்து போட வைத்து விடுவார்கள். நடுவாந்திரம் தான் ஓட்டு போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து நகம் வெட்டிக்கொண்டே எஃப் டிவி பார்த்துகொண்டிருப்பர்கள் . அதனால் வோட்டுசாவடிக்கு போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி.கார்டு இல்லையென்றாலும் வோட்டு போடலாம்..போட வேண்டும். யாருக்கு என்றால் கீழ்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

1 . இருப்பதற்குள் இளைஞர்,அல்லது அதிகம் படித்தவர்க்கு வோட்டு போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதி என்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்து பாருங்கள். டிவியில் பார்த்தால் போதாது. உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியில் இருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2 . உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக ஓட்டு போடுகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி,மக்கள்,டிரைவர் ,வேலைக்காரி ,அல்சேஷன் எல்லாருக்கும் சொல்லலாம்.

3 . யாருக்கு என்று தீர்மானிக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்து வோட்டு கேட்டவருக்கு போடுங்கள். தலையையாவது காட்டினாரே !

4 . உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள். முப்பது விழுக்காடு என்று ஜல்லியடித்துகொண்டிருக்கிறார்கள்.ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். அலங்காரத்துக்கு நிற்கும் நடிகைகளை தவிர்க்கவும்

5 . இதற்கு முன் இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால் அவர் ஆட்சிகாலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையை கட்டியிருக்கிறார் என்றால் அவருக்கு போடலாம். எனவே போடுவதற்கு முன் முகம், அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி பிரதி வைத்து கொள்ளவும். அதை காட்டி ''இதில் நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? '' என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள்.யாராவது நிலையான ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி என்பது இனி சாத்தியம் இல்லை.

6 .சுயேச்சைகளுக்கு போடாதீர்கள்.வேஸ்ட்.

7 .கொஞ்ச நாள் தையா தக்கா,ஆட்டம் பாட்டம், சிக்கு-புக்கு ,முக்காபுலா, போன்ற அறிவு சார்ந்த ப்ரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய்,ரபி பெர்னாட் நடத்தும் தேர்தல் நிகழ்சிகளை பாருங்கள். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும், அல்லது தலைவரும் டிவியிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் திருட்டு முழி முழிக்காதவராக , யாரை பார்த்தால், இவர் எதாவது செய்வார்,முதல் நாளே உள்ளங்கை அரிக்காது என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம். (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது )அல்லது கோர்வையாக பத்து வார்த்தைகள் பேச தெரிந்திருந்தால் போடலாம்.

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும்.ஆனால் கட்டாயம் வோட்டு போடுங்கள். அது அவசியம்.

பார்லிமென்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுகொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்த கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்து கொண்டு ,மரமேஜைகளை தட்டி வெளியென்ற விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருக்கிறது.அது முன்னேற்றத்துக்கான அறிகுறி.அது இப்போது மனிதர்களை சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இத்தனை பாவாத்மாக்கள் இருந்தும் தவறாம பெய்கிறது.

தயவு செய்து வோட்டு போடுங்கள். 'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை ஓட்டை வைத்துகொண்டு இந்த தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும். jokes apart.please vote.its your sacred duty.

--சுஜாதா


Sunday, December 12, 2010

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

நேற்று பாரதியாரின் பிறந்த நாள். தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை பேருக்கு தெரியும்?.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள். அதற்கு டிவி , பத்திரிக்கையில் பண்ணுகின்ற அக்கிரமங்கள் தாங்க முடியலை.காலையில் இருந்து டிவி யில் ரஜினி ரஜினி தான். ஆனால் அதற்கு முன்தினம் பாரதியின் பிறந்த தினத்திற்கு ஒரு செய்தியையும் காணவில்லை. அப்படி ஒருவர் இருந்தாரா என கூட கேட்டுவிடுவார்கள் போல .

நடிகர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என மீடியாக்கள் அவர்கள் பின்னாலேயே ஓடுகிறார்கள் என தெரியவில்லை. எல்லாருக்கும் இருக்கும் ரத்தமும் சதையும் தான் அவர்களுக்கும் உள்ளது. அவங்களும் சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கும் உடல்நலமில்லாமல் போகும். மரணம் வரும். என்னத்தை தான் காண்கிறார்கள் அந்த 'சுதந்திர தியாகிகளிடம் '?

நடிகர், நடிகைகளுக்கு இந்த மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

சன் டிவி செய்தி ஒன்று.. தமிழகத்தில் மழை வந்து வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அவர்களுக்கோ நடிகை பாக்கியலட்சுமி 'காதல் செய்' படத்தின் வில்லன் என்னை கலியாணம் செய் என மிரட்டுகிறார் என்ற புகாரையே திரும்ப திரும்ப முக்கிய செய்தியாக காட்டிகொண்டிருந்தார்கள். நடிகை சரண்யா காணாமல் போய் விட்டார் . இது ஒரு நாள்.

விஜய் டிவி எல்லாதிற்கும் மேல். மன்மத அம்பு இசை வெளியீட்டிற்காக கமலை வரவேற்கிறார்கள். வரவேற்கிறார்கள்... அப்பாப்பா...ஒரே எரிச்சலாக இருந்தது

கன்னியாகுமரியில் வெள்ளத்தை பற்றி சிறப்பு செய்திகளோ, நிகழ்ச்சிகளோ ஒன்றும் இல்லை.

நண்பர் சொன்னார்.. '' எல்லாம் வியாபார நோக்கத்தோடு தான். நாளை ரஜினி இறந்துவிட்டால் அவரையும் மறந்து விடுவார்கள். பாரதியார் வியாபாரம் ஆகமாட்டார். ரஜினி இன்னும் கொஞ்ச நாளைக்கு' என்றார்.

ஆனால் உணர்வு என்பது யாருக்குமே இல்லையா? எல்லாமே இங்கு பணம் தான் !

திராவிடமும் ஊழலும்

Pls..அவசியம் படிங்க...

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.


15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.


படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

---- ஞாநி ----

Tuesday, December 7, 2010

ஏக தத்துவ அப்பியாசம் - யோகம்


''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

இது கண்ணதாசனின் வரிகள்.

நமது வாழ்கையில் இரண்டு கரைகள்.
வெற்றிகரை பசுமையாக இருக்கிறது. தோல்விக்கரை சுடுகாடாக காட்சியளிக்கிறது.

பசுமையான நிலப்பரப்பை விட சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதை பார்த்த பிறகும் அடுத்து வருகின்றவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானதென்றே கருதுகிறான்.

அந்த சுடுகாட்டில் அலெக்ஸாண்டரை பார்த்த பிறகும் அகில ஐரோப்பாவுக்கும் முடி சூட்டிக்கொள்ள முயன்று அங்கேயே போய் சேர்ந்தான் நெப்போலியன்.

அந்த நெப்போலியனின் எலும்புக்கூடு சாட்சி சொல்லியும் கூட உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்கு பக்கத்திலேயே படுக்கை விரித்துகொண்டான் ஹிட்லர்.

அந்த ஹிட்லரை எப்போதும் தனியே விடாத முசோலினி அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டு போய் அவனுக்கு இடம் தேடி வைத்தான்.

அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜாம்பவான்கள் , ஜார்ஜ் பரம்பரைகள் , லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிகொண்டிருக்கிறார்கள்

வாழ்கை நிலையில்லாதது !

''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

அந்த ஒரு வெற்றி, இனிமேல் நாம் செய்வதெல்லாம் சரி என நம்மை நம்ப வைக்கிறது.ஆணவம் கொள்ளசெய்கிறது.

ஆனால் தோல்வியடையும் போது நேரெதிராக புதைகுழியில் புதைந்து விடுகிறது.நம்மை போல பாவப்பட்ட ஜென்மம் உலகிலேயே இல்லை என குமுறுகிறது.

இந்த நிலைகளுக்கெல்லாம் என்ன காரணம்?

நமது மனம் தான்!

ஒழுங்கில்லாமல் சுற்றும் மனதோடு நாமும் அலைவதால் ஏற்படும் விளைவுகள்.

நாம் மனதினால்தான் எண்ணுகிறோம். அதன் வழியாகவே செயல்கள் புரிகிறோம்.அதன் பலன்கள் எல்லாம் மனதை தான் பாதிக்கும்.அலைகழிக்கும்.

நல்லதை நினைத்தால் நல்லபடியாக இருக்கும்
தீயதை என்றால் பலனும் மோசமாகத்தான் இருக்கும்

''மனம் எனும் மாயை''
''மனமே ஆன்மா'' என்பார்கள்.

அதை வளப்படுத்தும் பயிற்சிகள் பல உள்ளன. அதில் ஒன்று 'குண்டலினி யோகம்' .

ஜெயா டிவியில் காலைமலரில் யோகேஸ்வர் கார்த்திக்ராஜா அவர்கள் சொன்ன பயிற்சி முறை தான் 'ஏக தத்துவ அப்பியாசம்'. வாழ்க்கைக்கு அவசியமான அனைவரும் பின்பற்ற வேண்டிய தத்துவம்.

அதாவது நாம் தினந்தோறும் செய்யும் செயல்களின் ஒவ்வொரு நிலையிலும் 'அனித்யத்தை' உணர்வது. கடைபிடிப்பது.

அனித்யம் என்றால் இது நிலையில்லாதது. இதுவும் முடிந்து விடக்கூடியது என அர்த்தம்.

நீங்கள் காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறீர்கள். ஒவ்வொரு துளி காபியும் தொண்டையில் இறங்குகிறது. அதன் சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம்.இந்த நிலையில் அநித்தியத்தை உணர்வது. .... மீண்டும் அந்த காபியை குடிக்கிறோம். தொண்டையில் இறங்குகிறது. சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம். இந்த ஒவ்வொரு நிலையிலும் இது அனித்யமானது என்ற எண்ணத்தை நம் மனதில் செலுத்துவது 'ஏக தத்துவ அப்பியாசம்'.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதை ஒரு பயிற்சியாக ஒவ்வொரு செயலிலும் செய்ய செய்ய மனம் சமநிலையில் இருக்கும். இதில் ஆழ்ந்து விட்டால் இன்பம் , துன்பம் போன்ற எந்த மாதிரி நிலையிலும் நமது மனம் பாதிக்கப்படாமலும் சமநிலை இழக்காமலும் இருக்கும்.

நமது மனமானது பாசிடிவ் சம்பவங்களையே விரும்புகிறது.அதுவே மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கும். ஆனால் அவற்றை விரைவில் மறந்துவிடும்

ஆனால் நெகடிவ் சம்பவங்களை மனம் விரும்புவது இல்லை. அப்படி நடக்கும் சம்பவங்கள் நமது மனதை விட்டு நீங்குவதும் இல்லை

எந்த மாதிரி மகிழ்ச்சியான மனநிலையிலும் கவலையான நிலையிலும் நாம் இருக்கும் போது இது அனித்யம் அனித்யம் என்று உணரும் போது உணர்ச்சி வேகத்தில் இருக்கும் மனநிலை சமநிலைக்கு வந்துவிடும்.

அதாவது இது நிலையில்லாதது. இந்த நிலை மாறும்

இதை பலமுறை செய்தால் தான் உணர முடியும். காலையில் இருந்து ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் எண்ணங்களிலும் அநித்தியத்தை உணரும் போது தான் அதன் பலனை நாம் உணர முடியும்.

வெற்றி, தோல்வி, ஏமாற்றம், துரோகம் என எல்லாவற்றினாலும் பதிக்கப்படும் மனதை சீர்படுத்த வேண்டியது நமது கடமையே. ஒரே ஒரு நாள் உங்கள் மனதை நினைத்து பாருங்கள் .அதில் என்ன என்ன விதமான எண்ணங்கள் வந்து அலைகிறது, எவற்றினால் குழம்பிபோகிறது, என பார்த்தால் பல உண்மைகள் உங்களுக்கே புரியும்.

இதற்கு இந்த ஏகதத்துவம் ஒரு நல்ல யோகம்.


Thursday, December 2, 2010

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் - சுஜாதா

Things you would never know without the movie industry.. என்று என் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவிற்கு வந்த மின்னஞ்சல் ஒன்று. ஹாலிவுட் சினிமாக்களில் தான் இவை எல்லாம் பார்க்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.


1 . என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக தான் இருக்கும்.

2 . இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர்

3 . பாம் வெடிப்பதை தடுக்க வேண்டும் எனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.

4 . எவ்வளவு பேர் கதாநாயகனை தாக்க வந்தாலும் ஒவ்வொருவராகத்தான் வந்து உதைபடுவார்கள்.

5 . அதுவரை மற்றவர் உதைபட தங்கள் முறை வரும் வரை சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

6 . ராத்திரி படுத்துக் கொள்ளும் போது பெட்ரூம் விளக்கை அனைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும். என்ன, கொஞ்சம் நீலமாக தெரியும்....அவ்வளவுதான்

7 அழகான இருபத்திரண்டு வயது கதாநாயகி அணுஆயுத நியூக்ளியர் ரகசியங்களிலும் கம்ப்யூட்டரிலும் எக்ஸ்பெர்டாக இருக்க முடியும்

8 விசுவாசமுள்ள , கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டையர் ஆவதற்கு பத்து நாள் முன்பு சுட்டுகொள்ளப்படுவார்

9 வில்லன் கதாநாயகனை நேரடியாக சுட்டு கொள்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள், பியூஸ்கள் , விஷவாயுக்கள், சக்கரங்கள், லேசர் அல்லது சுறாமீன்களிடம் விட்டு விட்டு சுற்றி வளைத்து தான் கொல்வான். நாயகன் தப்பிக்க முப்பது நிமிஷமாவது கிடைக்கும்

10 போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக ஒரு நைட் க்ளப்பில் போய் விசாரித்தாக வேண்டும். பின்னால் மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்

11 எல்லா படுக்கைகளிலும் ஸ்பெஷலாக போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும், ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் (ஆண்கள் அப்போது சிகரெட் குடுத்தே ஆக வேண்டும்)

12 . யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும். கண்ட்ரோல் டவரிலிருந்து எப்போதும் சிகரெட் குடிக்கும் ஆசாமி பேசியபடியே இறங்க வைப்பான்.

13 . தண்ணீருக்கடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது.

14 . எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை நாயகன் இறக்க மாட்டான். எடுத்து காட்டி விட்டால் அடுத்த காட்சியில் அவன் க்ளோஸ்

15 . பாரிஸ் நகரில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் ஈபில் டவர் தெரியும்

16 . கதாநாயகன் வில்லனிடம் செமையாக அடி வாங்கும் போது வலி தெரியவே தெரியாது. ஆனால் நாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் 'ஸ்ஸ்... ஆ...' என்பான்

17 . ஒரு பெரிய கண்ணாடி காட்டப்பட்டால் அதன் மீது யாராவது தூக்கி வீசி எறியப்படுவார்

18 . காரில் நேரான ரோட்டில் நேராக போனாலும் நாயகி அடிக்கடி ஸ்டியரிங்கை திருப்புவாள்.

19 . எல்லா 'டைம் பாம் 'களிலும் வெடிக்க எத்தனை செகண்ட் பாக்கி இருக்கிறது என தெரிந்தே ஆக வேண்டும்

20 . போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் பண்ணதும் தான் கேசை துப்பு துலக்க தேவைபடுவார்.

21 . தெருவில் நீங்கள் நடனமாட தொடங்கினால் தெருவில் வரும் போகும் எல்லோரும் அதே தாளத்தில் ஆடுவார்கள்.

22 .பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் எதாவது வினோத சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்க சிக்கனமான உடையில் தான் நடந்து செல்வார்கள்.

23 .போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எப்போதும் நேர்மாறான குணமுள்ளவர்களாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

24 .ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் தங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள்



இவை பெரும்பாலும் நம் பாலிவூட், கோலிவூட் சினிமாக்களிலும் பொருந்துவதை நீங்கள் இது நேரம் உணர்ந்திருப்பீர்கள். கோடம்பாக்கத்துக்கு 24 க்கு மேல் அனுபந்தமாக சில விஷயங்கள் உண்டு.

25. உணர்ச்சி வசப்படும் காட்சியில் திடீர் என்று மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும். நாயகி வீட்டை விட்டு துரத்தப்படும் போது , டூயட்டின் போது, காதலின் போது எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மழையின் போது மட்டும் எப்போது அவள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் புடவை அணிய வேண்டும்

26 .பாடல் காட்சியில் ஒரு வரி மயிலாப்பூரிலும் அடுத்த வரி மியாமியிலும் பாடப்படலாம்

27 .ஒரே பாட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது உடை மாறலாம். நிறம் மாறலாம்.

28 .சட்டென்று எல்லா பிஜிஎம்மும் நின்று விட்டால் யாரோ செத்து போய்விட்டார்கள் என்பது உறுதி.

29 .கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த கட்டத்திலும் நுழைந்து உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றவாறும் சாட்சி சொல்லலாம்.

30 .'முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ணை வரசொல்லுங்கோ' என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போக போகிறாள் என்று அர்த்தம்.

31 இறுதியாக பாடலின் எந்த காட்சியிலும் எந்த வேளையிலும் எந்த லோகேஷனிலும் நாற்பது பெண்கள் வரலாம்.எல்லாரும் குட்டை பாவாடை அணிய வேண்டும்



இந்த வரிசையில் இன்னும் எதாவது விட்டு போயிருக்கிறதா?