Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, July 7, 2011

தீராத காதல்



மேகம் சூழ்ந்த ஒரு அதிகாலைப்பொழுது. ரயில் நிலையத்தில் எதேச்சையாக நான் கடந்து சென்ற அவளை திரும்பி பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து நின்றேன். எனது முன்னால் காதல் தேவதை . நம்பமுடியாமல் நான் அவளையே பார்க்க அவளிடத்திலும் அதே பாவனை.

தழைய தழைய சேலை கட்டி, தலை நிறைய பூவுடன் தேவதையாக நின்றிருந்தாள் . “நான் கல்யாணம் ஆனா சேலையே காட்ட மாட்டேன் ..பூ வைக்கிறதெல்லாம் சுத்த பட்டிக்காட்டுதனம் ” என்று என்னிடம் அவள் கட்டளையிட்ட காலங்கள் நினைவில் வந்தன .

பேச வராமல் தடுமாறிய அவளின் அருகில் சென்றேன் .. சரியாக நான்கு வருடங்கள் கழித்து அவளின் கண்களை ஊடுருவி பார்த்தேன் .அதில் தடுமாறி நின்றவளிடம் “எப்படி இருக்கிறாய் என் அருமை காதலி ?” என்றேன் .

அவள் அப்படியே பெரிதாக சிரித்துவிட்டாள். “நீ இன்னும் அப்படியே இருக்க. ” என்றாள் .

“நான் இருக்கேன் அப்படியே தான். நீதான் மாறிவிட்டாய் போல ” என்றேன் அவள் கழுத்தை பார்த்தபடி .

“நாலு வருஷம் ஆயிடுச்சுல்ல ” என்றாள். நான் அந்த கயிற்றை பார்த்ததை அவள் விரும்பவில்லை. நான் அதை சட்டை செய்யவில்லை .

“இப்போதும் நீ என் காதலிதான் ” என்றேன் .

நான் அவள் காது மடல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன் .அதில் இருந்த ஜிமிக்கித் தோடு குறுக்கும் மறுக்கும் ஆட ஆட பேசினாள் . அவளின் பெற்றோரை பற்றியும் தன் கணவன் வீட்டை பற்றியும் கடந்து போன 4 வருடங்களை நான்கு வரிகளில்
அடக்கினாள் .

“என்னை பொண்ணு பார்க்க யாராவது வந்த அடிச்சே துரத்திடுவேன் …” “என்னை ஏமாத்த நினைச்சே … கொன்னுபுடுவேன் ..” என்றெல்லாம் பேசியவளை நினைத்து பார்த்தேன் . இதைல்லாம் சொன்னபோதும் கூட இப்படி தான் தலையை வேகமாக ஆட்டுவாள் . கம்மலும் சேர்ந்து ஆடும் .

“டேய் … என்னாச்சு ” நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை தட்டினாள் . “சொல்லடி என் காதலி ?” என்றேன் . “ஐயோ எருமை மாடு …ஒழுங்கா பேசு .. எனக்கு கல்யாணம் ஆயுடுச்சு ..”

காதலிகள் ஏன் எப்போதும் எருமை மாடு என்றே அழைக்கிறார்கள் . “அது செல்லமாக ” என்றாள் முன்மொருமுறை . எருமை மாடுகள் புண்ணியம் செய்தவை .தேவதைகள் உச்சரிப்பாதலேயே ..

நாங்கள் பரஸ்பரம் பேச்சை முடித்துக்கொண்டு கிளம்ப தயாரானோம் .அலைபேசி எண்களை பெற்றுக்கொண்டோம் .மறக்காமல் அழைக்குமாறு பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம் .
விடைபெற்றேன் .

அடுத்த இரண்டு நாட்களும் நாங்கள் காதலித்த காலங்களே நினைவை ஆக்கிரமித்தன .என்னால் பணி செய்ய முடியாமல் அவளையே நினைதுக்கொண்டிருந்தேன் .என் மனைவி வேறு இடையில் ‘கால் ’ செய்து மனசாட்சியை உலுக்கினாள் . ஒருவேளை அவளுக்கும் ஒரு காதலன் இருந்து இப்படி நினைத்துக்கொண்டுருப்பாளோ ..ச்சே ..ச்சே .. அவள் நல்லவள் .
ஒருமுறை என் தேவதையோடு பூங்காவில் உலாவிக்கொண்டிருந்தேன்.அப்போது என்னை விட அழகான ஒரு இளைஞன் என்னவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"அங்கே பாரேன்.."என்றேன்.

ஆச்சர்யத்தோடு அகலக்கண் விரித்தபடி திரும்பி பார்த்தாள்.

"அவனிடம் கொஞ்சம் போய் பேசிவிட்டு வாயேன்..பாவம் நீண்ட நேரமாக உனக்காக தவம் கிடக்கிறான்"

"ஐயோ.. பேசாம வா.."

"ஹேய்.. போய் டைம் என்னவென்று கேட்டுப் பாரேன்..அவன் அப்படியே இந்திர லோகம் சென்று வந்திடுவான்.."

அவள் சிரித்தாள்.

என் நினைவுகள் தூக்கத்திற்கு உலைவைத்தன. என் அலைபேசியை எடுத்து என் தேவதைக்கு குறுஞ்செய்தி தட்டினேன் . “தேவதையே ..உன் ஜிமிக்கியை எனக்கு பரிசளிப்பாயா ?”

“லூசு .. எதற்காக ”

ஏன் மனைவிகள் கணவனை லூசு என்று திட்டுவதில்லை .இவை காதலிகளுக்காகவே படைக்கப்பட்ட வார்த்தைகள் போலும் .

“உன் நினைவாக வைத்துக்கொள்ள ”

“உன் கவிதை பேச்சை விடவே மாட்டியா ?”

“உடன் பிறந்ததாயிற்றே....”

அதற்கு மேல் அவளிடமிருந்து பதில் வரவில்லை .நானும் தூங்கிப்போனேன் . பயணம் முடித்து ,என் மனம் முழுவதும் என் தேவைதையின் நினைவாக வீட்டிற்கு வந்தேன் .என் மனைவியை பார்த்ததும் என் முகம் இருண்டு போனது .என்னை துளைத்தெடுத்த மனசாட்சியை தூக்கி போட்டுவிட்டு என் தேவதைக்கு சாட் ' request ' அனுப்பினேன் .

காலங்கள் கடந்தது . என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது . தேவதையின் நினைவில் பைத்தியமானேன் . இரவும் பகலும் நாளும் கிழமையும் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தோம் .கல்லூரி காலங்களும் சுற்றியை இடங்களும் ,பேசிய பேச்சுக்களும் மீண்டும் உயிர்த்தெழுந்தன .

“நான் உன்னை சந்திக்கவேண்டும் ” சாட்டில் தட்டினேன்

“எதற்காக ”

எனக்கு பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக இருந்தேன் .அவளும் பேசாமல் இருந்தாள்.திடீரென்று 'sigout ' செய்து விட்டாள் . நான் தவித்து போனேன் . அலைபேசியில் முயற்சித்தேன் . பதில் இல்லை .

ஒருவாரம் என்னை பழிதீர்த்தாள் . திசை தெரியாத காட்டில் தன்னந்தனியாக சுற்றிகொண்டிருந்தேன் .யாரிடமும் பேசாமல் தனிமையில் அவள் பதிலுக்காக காத்திருந்தேன் . ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது என் அலைபேசி அதிர்ந்தது .விழுந்தடித்துகொண்டு போனேன் .

“சாரி ” என்றாள்

நான் அவளிடம் கத்தினேன் .சண்டையிட்டேன் .ஏதேதோ பேசினேன் . அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள் .

"பேசித்தொலையேன்.." நான் கத்தினேன்..

"இனிமேல் என்னோடு பேசவேண்டாம்.." என்றாள்.கணவனையே காதலிப்பதாக சொன்னாள்.தொந்தரவு தரவேண்டாம் என்று சொல்ல சொல்ல வார்த்தைகள் நடுங்கின அவளுக்கு.அழுதிருப்பாளோ என்னமோ.நான் பதிலேதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தேன்.

என் கனவு உலகம் இருண்டு போனது போல உணர்ந்தேன்.சுக்கு நூறாக உடைந்த இதயத்தை சுமந்து கொண்டிருப்பது வேதனையாக இருந்தது.கடைக்கண்களில் கண்ணீரோடு வீட்டிற்குள் நுழைந்தேன்.
மன அழுத்தம் கொடுமையாக என்னை படுத்தியது .முகம் கழுவி,படுக்க போனேன்.
"யாரு கண்ணு பட்டுதோ.. ஒரு மாசமா ஒரு மாதிரியாவே இருக்கீங்க..சூடம் சுத்தி போடணும்..எந்திரிச்சு வாங்க.."மனைவி அழைத்தாள்

என்னையும் அறியாமல் சிரித்தேன். அவள் அருகில் சென்று.."சொல்லடி சிவசக்தி.."

"என்னது இது?இப்படி பேசறீங்க..?" பாவம் என் கவிமொழியை இவள் அனுபவித்ததே இல்லை.

"என்னை இனிமே எருமை மாடுன்னு கூப்பிடு.என்னை பிடிச்ச பேயெல்லாம் ஓடிடும்.." என்றேன்.

அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.என்ன இது லூசு என்று நினைத்திருப்பாள் கண்டிப்பாக.

Tuesday, February 8, 2011

சாந்தி தெரு - 2 காமன் சென்ஸ்

துங்கும் நேரத்தை தவிர மற்றநேரங்கள் எல்லாம் எப்போதும் இரைச்சல் தான் சாந்தி தெருவில் .அங்கே வசிக்கும் ஜனங்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் நாள் தவறாமல் நடக்கும்.பெண்களே ரிப்பன் வெட்டி சண்டையை துவக்கி வைப்பார்கள்.குழாயடியில் தண்ணீர் சண்டை,வாசல் பெருக்குவதில் எல்லைச் சண்டை,குப்பை கொட்டிவதில் சண்டை,பிள்ளைகள் தெருவில் புரண்டு கொண்டால் பெரியவர்களும் வயது பார்க்காமல் புழுதியோடு புரண்டு சண்டை,பெண்களில் ஒருத்தி மற்றவள் புருசனிடம் சரசம் செய்வது பற்றிய சண்டைகளால் தொண்டை கிழிய மூர்க்கமான குரல்கள் எழும்.

முன்பொருமுறை எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பார்த்தோம்.அதன் பிறகு 'காமன் சென்ஸ்' விவகாரத்தால் அடுத்ததாக பரபரப்படைதிருந்தது சாந்தி தெரு.

அதே நான்கு வீடுகளில் 2 நம்பர் வீட்டில் புதிதாக குடிவந்திருந்தாள் வனிதா என்ற நடுத்தர பெண்.கணவனும்,4 ஆம் வகுப்பு பையனுமாக குட்டி குடும்பம்.வனிதாயின் முகச்சாடைஎப்படி என்றால் சாந்தமாக பார்த்தாலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.கோபமாக பார்த்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. கொஞ்சம் கர்வியும் கூட.டிகிரி ஏதோ படித்திருந்ததால் தன்னை சுற்றி உள்ளே அனைவரும் தன்னை வணங்க வேண்டியவர்கள் என்று ஒரு நினைப்பு.தன் 4ஆம் வகுப்பு மகனுக்கு தானே டியுசன் எடுப்பாள்.6 யும் 4 யும் பெருக்கினால் 22 என்று டியுசன் எடுக்கும் அளவுக்கு அறிவு ஜீவி.தப்பு தப்ப சொல்லி கொடுக்காதம்மா..என தினமும் பையன் அம்மாவிற்கு டியுசன் எடுப்பான்.ஆனாலும் அவளின் மிடுக்கு மட்டும் குறையாது.

வனிதாவின் பக்கத்துக்கு வீட்டில் காமாட்சியின் குடும்பம்.பையன் காலேஜிற்கும் பெண் 10 வகுப்பும் படிக்கிறார்கள்.காமாட்சிக்கு எப்போதும் நியாயம் தான்.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு பேச்சுக்கள் தான்.சண்டைகளில் காமாட்சி சேலையை தூக்கி சொருகினால் எதிரில் ஒருவரும் நிற்கமாட்டார்கள்.விடு ஜூட்..!

இப்படியான ஒரு நாளில் வழக்கம் போல் சூரியன் உதிக்க பொழுது புலர்ந்தது.வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.காமாட்சி மோட்டாரை போட வெளியே வந்தாள்.ஒயரை எடுத்து வனிதாவின் வீட்டின் குறுக்காக கொண்டு சென்று பிளக்கில் சொருகி சுவிட்சை போட்டாள்.வனிதா வீட்டருகில் தான் சுவிட்ச் இருந்தது.காமாட்சி போய்விட்டாள்.

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்குமோ என்னமோ,வனிதா வெளியே வந்தாள்.தனக்கு குறுக்காக ஒயர் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.ஒயரைதாண்டிகொண்டு வெளியே போக முடியாது.பையனோடு கத்திக் கொண்டு வெளியே வந்த அவள் கோபத்தை ஒயரின் மேல் காட்டி அதை வெடுக்கென்று கழற்றி வீசினாள்.பதிலுக்கு ஒயரும் தன் கோபத்தை காட்டவேண்டுமல்லவா...அது அறுத்துக் கொண்டு தொங்கியது.ஒயர் அறுந்துவிட்டதை பார்த்து திடுக்குற்றாள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறுந்த ஒயரை பாங்காக சுற்றி வைத்து விட்டு தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பாந்தமாக உள்ளே சென்று விட்டாள்.

பத்துநிமிடம் ஓடியும் தண்ணீர் வரவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த காமாட்சி என்ன என்று எட்டிப் பார்க்க வந்தாள்.ஒயர் அந்துபோய் கிடந்தது.அந்த காட்சியை பார்த்ததும் அம்மாளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.ஆனால் என்ன இயற்கை அதிசயமோ ரொம்ப அமைதியாக "இது யாரு இப்படி அத்துப் போட்டது?" என்று கேட்டுக் கொண்டே வனிதாவின் வீட்டை நோக்கினாள்.

அந்த பெண்மணியோ"யாராவது வேணும்னு அத்து போடுவாங்களா?"என்று திருப்பி கேட்டாள் கடுகடுவென்று.

"இது என்னடியம்மா..வேணும்னு புடுங்கி போட்டீங்களானா கேட்டேன்.யாரு இப்டி பண்ணதுன்னு தானே கேட்டேன்.அதுக்கேன் சண்டைக்கு வர"

"ஆமாமா...காலங்காத்தாலே உங்கள மாதிரி எங்களுக்கு வேளை வெட்டி கிடையாது பாருங்க..சண்டைக்கு அலையிறாங்க..நீதாமா சண்டைக்கு வந்த..உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட காமன் சென்சே கிடையாதா..?"அவள் கத்திக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

"ஆ..."

காமாட்சியம்மாள் வாயடைத்து நின்றுவிட்டாள். அந்த ஒயர் கூட திறந்த வாய் மூடவில்லை.

காமாட்சி தலைகுனிந்த படியே வீட்டிற்குள் வந்தாள்.அவள் ஒன்றும் பேசவில்லை.காமன் சென்சுக்கு அர்த்தம் புரியவில்லை.அவள் ஏதோ தனக்கு புரியாத ஒன்றை சொல்லி வாயடைத்து விட்டாள் என்று சோகமாக உள்ளே வந்தாள்.தன் பையனை அழைத்தாள்.

"அவ ஏதோ இங்கிலீசுல சொன்னாலே,அதுக்கு என்னா அர்த்தம்..? அவள் அப்பாவியாக கேட்டதை பார்த்து பையன் சிரித்தான்."என்னா வார்த்த?"

"அவ ஏதோ கம்னோ..காம்மன்னோ...தெரிலடா..ஏதோ சொன்னா"

"அது காமனுமில்லா..சோமனுமில்லா.. காமன் சென்ஸ்"

காமாட்சி உற்சாகமாக "அதான்..அது தாண்டா..அப்டினா.."

"பொது அறிவுன்னு அர்த்தம்"

"அப்டின்ன..பொது அறிவில்லனா சொன்னா"அவளுக்கு ஆத்திரம் வந்தது.

"இல்லை. இல்லை.அதுக்கு சரியான அர்த்தம் அறிவு கெட்டவள்னு அர்த்தம்.பையன் தன் பங்கினை சிறப்பாக முடித்து கொண்டு பையை தூக்கி கொண்டு ஓடியே விட்டான்.

காமாட்சிக்கு உடம்பு நடுக்கியது.ஆத்திரம் பொங்கியது. படபடவென்று சேலையை தூக்கி சொருகினாள்
நேராக வனிதாவின் வாசலுக்கு வந்தாள்.

"ஏண்டி..எவ்ளோ திமிர் இருந்தா என்ன அறிவு கெட்டவன்னு சொல்லுவ..நீதாண்டி அறிவு கெட்டவ..உங்கப்பே,,ஆத்தா பெத்த மானங்கெட்ட ஜன்மம்..(டேஷ்..டேஷ்...)காமாட்சி ஜிங்கு ஜிங்கென்று சாமியாடினாள்.வனிதாவின் குடும்ப மானத்தை கப்பலேற்றும் கடமையில் பிஸியாக இருந்தாள்.

வனிதாவும் பதிலுக்கு கத்தினாள்.

அந்த தெருவில் இருந்த சோம்பேறி கூட்டமொன்று இந்த கலாட்டாவை கண்டுகளிக்க..ஒருவரும் வந்து தடுக்கவில்லை.அதுவுமில்லாமல் இவ்வளவு பெரிய தமாஷை நிறுத்த யாருக்கு தான் மனம் வரும்.
சண்டை தொடர்ந்தது.ஒருவரை ஒருவர் மாறி மாறி சபித்து கொண்டனர்.

திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற வனிதா பக்கத்திலிருந்த சீவக்கட்டையை எடுக்கு போக,அதுவரை வேடிக்கையில் சிரத்தையாக இருந்த அவள் கணவனுக்கு எங்கிருந்தோ வீரம் பொத்துக்கொண்டு வர அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.வனிதா மிரண்டு போய் ஸ்தம்பித்து நின்றாள்.அவமானத்தால் வெடுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவன் திரும்பி காமாட்சியம்மாவை பார்த்து "அவ செஞ்சதுக்கு நாம் மன்னிப்புகேட்டுக்கறேன்..."அவனும் உள்ளே சென்றுவிட்டான்.அவள் ஒன்றும் சொல்லாமல் மனதிற்குள் தான் செய்ய நினைத்ததை அவன் செயலாக்கியத்தை உள்ளுர மகிழ்ந்தாள்.

இத்தோடு சண்டை இனிதே முடிவடைந்தது.இறுதி வெற்றி காமாட்சிக்கே!

அவன் மன்னிப்பு கேட்டது அவளுக்கு கூச்சமாக போய்விட்டது.ஒரு ஆம்பிளை..மன்னிப்பு கேக்கறான்..இந்த பஜாரிக்கு இப்டி ஒரு புருஷன் என்று முணுமுணுத்து கொண்டே தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒயர் என்ன நினைத்திருக்கும்?


--
yalini

Friday, January 21, 2011

நல்ல பிசாசு

நான் கணேஷை வழியனுப்ப ரயில்நிலையம் வரை சென்றேன்.மதுரைக்கு பெற்றோரை பார்க்க செல்கிறான்.டிக்கெட்டுகள் வாங்கும் படலம் எல்லாம் முடிந்த பின் இருக்கையில் அமர்ந்தோம்.ரயில் கிளம்ப இன்னும் 15 நிமிடம் இருந்தது.வளவளவென பேசிக்கொண்டே இருந்தான்.

நான் அவனிடம் வரும் போது ஒரு புத்தகத்தை சொல்லிவிட்டேன்.மறக்காமல் வாங்கிவருமாறு.எங்கு தேடியும் கிடைக்காமல் ஏமாற்றியது."மறக்காம கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.சரியா...ப்ராமிஸ்" சிரித்தான்.

"சரி...பாத்து பத்திரமா போ..கால் பண்ணு போனதும்...சரியா.. அப்புறம்...அப்பாவ கேட்டதா சொல்லு...அப்புறம்..". நான் சொல்வதை கேட்டு கடகடவென சிரித்தான்.நான் ஒரு சிறு குழந்தைக்கு புத்திமதி சொல்வது போல சிரத்தையுடன் கூறியது அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது போலும்.நானும் சிரித்தேன்.அவன் எப்போதுமே அப்படிதான்.அழகான முத்து போன்ற பற்கள் அவனுக்கு.அவன் சிரிக்கும் போது நான் அவன் முகத்தையே ஆவலாக பார்த்துக்கொண்டிருப்பேன்.

ரயில் கிளம்பியது.பரஸ்பரம் விடைபெற்றுக்கொண்டோம்.மின்னலைப்போல வேகமெடுத்து வண்டி கிளம்பியது.நானும் அலுவலகம் திரும்பினேன்.இனி இந்த பாழாய்ப்போன டிராப்பிக்கில் மாட்டிகொண்டு போய் சேர ஒருமணி நேரமாவது ஆகும்.எரிச்சலாக வண்டியை கிளம்பினேன்.

வழியெங்கும் எனக்கு கணேஷின் நினைவு.கல்லூரியில் அறிமுகமான என் அருமை நண்பன்.சரியான புத்தக பைத்தியம்.அவன் சக நண்பர்கள் எல்லோரும் கேர்ள் ப்ரெண்ட்ஸ் ,ஸ்பென்சர்,பீச் என்று சுற்றிக்கொண்டு இருக்க அவன் மட்டும் எங்கெங்கோ புக் ஃபேராக தேடி அலைவான்.ஹாஸ்டலில் எங்கள் அறையில் ஒரு மினி லைப்ரரியே வைத்திருப்பான்.இலக்கிய பைத்தியம்.தேடி தேடி வாசித்துவிட்டு அதை அவன் விமர்சிக்கும் முறையே அலாதியானது.அதற்காகவே நான் காத்துகொண்டிருப்பேன்.இவனோடு சேர்ந்து எனக்கு அந்த பைத்தியம் பிடித்ததில் ஆச்சர்யமில்லை.இருவருமாக சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம் புத்தகங்களை தேடி..

தனக்கு என்று சில எழுத்தாளர்களை பூஜித்துக் கொண்டிருப்பான்.என் ஆஸ்தான எழுத்தாளர் என்றால் அவர் ஈ ஓட்டுவது கூட இலக்கியம் தான் என்பான்.அதுவுமில்லாமல் அவன் ஒரு குஷி பேர்வழி.எல்லாவற்றையும் மிக சகஜமாக எடுத்துக் கொள்வான்.நான் ஒருமுறை கோபத்தில் அறைந்துவிட்டேன்.பிறகு எனக்கே கஷ்டமாக போய்விட்டது.சாரி கேட்க போனால், 'இந்தாட..' மறுகன்னத்தை காட்டி கலகலவென சிரித்தான்..

நேற்று அவனின் வீட்டிலிருந்து 'குலதெய்வம் கும்பிடனும்..கண்டிப்பா வா..' என போன் வந்ததும் கிளம்பினான்.எப்படியும் ஒருவாரம் ஆகும் என நினைத்தேன்.அத்தன நாள் சந்தோசமா இருக்க விட்டுட மாட்டேன்பா..சீக்கிரமா வந்துடறேன்...

எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு நாட்களை ஓட்டிவிட்டேன்.ஆனால் அவனிடம் இருந்து போனே வரவில்லை.எனக்கு அடங்காத கோபம்.நான் அழைத்தால் அணைக்கப்பட்டிருந்தது.அவன் வந்தால் எப்படியெல்லாம் என் கோபத்தை காட்டலாம் என ஒத்திகைத்து கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள் இரவு..இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினேன்.கணேஷின் அழைப்பு ஏதும் வரவில்லை.மனதில் ஏதோ ஒரு பெரிய கவலை அழுத்துவது போல இருக்க...கதவை பூட்டிவிட்டு தூங்க போனேன்.கனவுகள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் போது..

'தடக் தடக் ' என கதவு வேகமாக தட்டம் சத்தம் .சரியாக நடுநிசி.நான் பதற்றத்தில் திறக்காமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருக்க...கதவு உடைந்து விடுவதுபோல ஆடியது.நான் வேகமா சென்று திறக்க,

"டேய்..கணேஷ்"நான் கத்தியே விட்டேன்.என்னடா இந்நேரத்துல".அவன் பேசாமல் உம்மென்று உள்ளே வந்தான்.

நான் கதவை பூட்டிவிட்டு "லக்கேஜெல்லாம் எங்கடா..இது என்ன ..போட்டுபோன சட்டையோட அப்படியே வந்திருக்க..?"

அவன் ஏதேதோ சொன்னான்.வார்த்தைகள் கோர்வையாக இல்லை.ஒருமாதிரியான வாசம் வந்தது.அவன் தரையில் கால்களை மடித்து உட்கார்ந்துகொண்டான்.இந்த செய்கை எனக்கு ஒரே குழப்பமாக ஏதோ போல அவனை பார்த்தேன்.

'இந்தாட'..ஒரு புத்தகத்தை கொடுத்தான்.நான் சொல்லிவிட்ட புத்தகம்..எனக்கு ஒரே மகிழ்ச்சி.'இத வாங்கத்தான் ரொம்ப கஷ்டப் பட்டேன்.' சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தான்.அவன் முகத்தில் உற்சாகமோ..பயணக் களைப்போ...எதுவும் இன்றி நிர்ச்சலனமாக இருந்தது.ஆனால் அந்த வாசனை..வரவர அதிகமாக வந்தது.

நான் கட்டிலில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை பிரித்தேன்.''நீ படிச்சுட்டயா.."

"...இல்ல... "

"என்னடா இது ஒரு வாசம்..."

அவன் நான் சொல்வதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் எங்கோ பார்த்தான். முகம் வெறித்து..தலை தாறுமாறாக கலைந்திருந்தது.பேய்காற்றில் தடதடக்கும் ஜன்னல்களையே வெறித்துக் கொண்டிருந்தது அவன் கண்கள்.

நேரம் பனிரெண்டை தாண்டி கொண்டிருந்தது.அவன் பேசிக்கொண்டே போனான்.அதே சிரிப்பு..அதில் ஜீவனில்லை..கண்களில் ஒளியில்லை.ஒரே இரவில் பேசிமுடிக்கவேண்டும் போல மணிக்கணக்காக பேசினோம் அந்த புத்தகத்தை பற்றி. அவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே கட்டிலில் என் அருகில் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டான்.'ச்சே .. அந்த பாழாய்ப்போன நாற்றம் தாங்கமுடியவில்லை.அது ஏதோ விசித்திரமான வெறுக்கும் வாசனையை இருந்தது.நான் இதனால் விலகி விலகி போனேன்.அவன் மீண்டும் அருகில் அருகில் வந்தான்.அந்த வாசனையை பற்றி கேட்க, பதிலே சொல்லாமல் ஏதேதோ பேசினான்.

இரவு நீண்ட இரவு ...ஜன்னல்கள் அப்படியே நின்றன.பூரண அமைதி.திடீரென்று பேச்சை நிறுத்தினான்.நான் எழுந்தேன்.சிகரெட்டை பற்றி வாயில் வைத்தவாறு அவனை பார்த்துக்கொண்டே கீழே பார்க்க...

அப்படியே உறைந்து போய் நின்றேன்.என் சிகரெட் வாயில் இருந்து அப்படியே நழுவியது.தலைசுற்றியது.இதயத்தை யாரோ பிடித்து கொடூரமாக இழுப்பது போல இருந்தது."கணேஷ்...உன் கா...ல்... கா...ல் ..." எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

கணேஷின் முகம் மாறியது.என்னை விழுங்கிவிடுவது போல பார்த்தான்.'ஐயோ..என்ன பார்வை இது'

என் அருகில் வந்தான்.

"மனோ...புத்தக ஆசை.... புத்தகம் வாங்கிக் கொண்டு ஓடி வந்து நகரும் ரயிலில் தாவி ஏறியதில் தவறி விழுந்து இறந்து போனேன்....வா... என் அருகில் வா..."

கணேஷ் என்னை இறுக்கி அணைத்தான்.நானும் பிசாசாக அவனுடன் இணைந்தேன்.

Tuesday, January 18, 2011

குருட்டு வெளிச்சம்

அந்த ரயில்நிலையம் தான் அந்த கிழவிக்கு இருப்பிடம்.அங்கிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் பெட்டிக்கடைக்காரர்களுக்கும் மொண்டிக் கிழவி.காது கேட்காது.கண்ணும் மங்கல் தான். கைகளை ஊன்றி ஊர்ந்து ஊர்ந்து தான் செல்வாள்.நடக்க முடியாத கால்களை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும்..

ஒரு சிறு துணி மூட்டை மாதிரி ஏதோ ஒன்றை வைத்திருப்பாள்.அது தான் அவள் சொத்து.வயது ஒரு தொண்ணூறு போல இருக்கும்.தோல்கள் சுருங்கி..அங்கங்கே தொங்கிக் கொண்டு இருக்கும்.ஒரு நூல்துணியை புடவை போல சுற்றியிருப்பாள்.வேறு மேலாடை ஏதும் கிடையாது. கிழவியின் கைகள் எப்போதும் கிடு..கிடுவென நடுங்கிக்கொண்டே தான் இருக்கும். அந்த பொக்கைவாய் தாடையும் கூடத்தான். அவள் அந்த ரயில்நிலைய பிளாட்பாரத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு போகவே அன்றைய நாள் முடிந்துவிடும்.

தினமும் ரயிலை விட்டு இறங்கி போவோரிடமும்,வருவோரிடமும் தன் நடுங்கும் கைகளை தூக்கி கொண்டு , ஆடும் போக்கை வாயை திறந்து ஏதோ கேட்பாள். புரிந்து கொள்ள முடியாத உளறலாகத் தான் இருக்கும். அதற்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி ஒரு வழியாகிவிடும் அந்த கிழவிக்கு . பிச்சை கேட்பாள். இரக்கமுள்ள மகராசன்கள் போடும் சில சில்லறை காசுதான் கிழவிக்கு தின வரும்படி.அதை கொண்டு ஒரு வேளை ஏதாவதொன்றை உண்டு..இரண்டு வேளை பட்டினி கிடப்பாள். ஒரு சில நாட்களுக்கு வரும்படி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஆனாலும் கிழவி அதே ஒரு வேளை விரதம் தான்.மீதி சில்லறையை முடிந்து வைத்துகொள்வாள். இப்படியே பழகிப்போய்விட்டது கிழவிக்கு. என்றாவது ஒரு நாள் ஒன்றும் விழாமல் கூட போய்விடும்.அதற்கு முந்தைய சேமிப்பு உதவும்.

ஆனாலும் இப்போதெல்லாம் கிழவிக்கு அதிக வரும்படி வருவதில்லை. ரொம்ப ரொம்ப கிழமாக இருப்பதால் பார்ப்பவர்கள் முகத்தில் மிக அதிகமான இருக்க சுபாவத்தை காட்டி கொண்டு வெறும் 'உச்சு' கொட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.சிலரோ,''சீ..சீ.. என்ன இது கன்றாவி '' என திட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். காசு ஏதும் போடுவதில்லை. அப்படிப்பட்ட நாட்கள் இந்த சேமிப்பை செலவளிப்பதற்காகவே நடக்கும்.

கிழவிக்கு அப்படியொன்றும் பிரமாதமான நியாபக சக்தி இல்லை. எத்தனை நாளாக இங்கே இருக்கிறோம் என்று ஒன்றும் தெரியாது. இரவானால் பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலோ மூட்டைகளுக்கு இடையிலோ சென்று புகுந்து கொள்வாள். சிலநேரங்களில் யாருக்கும் கேட்காத அழுகை சத்தம் கேட்கும். திடீரென்று பழைய நினைவுகள் ஏதும் தோன்றினால் இப்படிதான்.ஒன்று மட்டும் கிழவிக்கு நன்றாக நினைவிருந்தது.

என்றோ ஒரு நாள் தன் மூத்த மகன் இந்த ரயில்நிலையத்திற்கு அழைத்து வந்து,"இங்கேயே இரு..நான் போய் டீ வாங்கியாறேன்.." என்று சொல்லிவிட்டு போனவன்தான். வரவே இல்லை.வந்த வேலை முடிந்த பின் அவன் ஏன் வரப் போகிறான்.அதை நினைத்து கிழவி அழுவாள்.தரை தாரையாக கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்.மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றும் கஞ்சி ஊற்ற ஆளில்லையே..

அவள் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளை சேலை உடுத்தி,பிச்சைக்காரியுமாக்கி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. தனியாளாக நின்று எத்தனையோ துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை வளர்த்ததற்கு நல்ல பலனை இறைவன் தனக்கு அளித்துவிட்டதாக குமுறி கொண்டிருப்பாள்.திடீரென்று அவளின் சிந்தனை மாறும் . யார்யாரையோ திட்டிக் கொண்டே அவர்களின் ஏழேழு தலைமுறைகளும் என்னென்ன வியாதி வந்து சாக வேண்டும் என்று லிஸ்ட் தயாரித்து கொண்டு தூங்கி கிடப்பாள்.

காலம் எதைப் பற்றியும் கவலை இல்லை .எல்லா நாளும் ஒரே நாளாக இருப்பதில்லை.ஒரு நாள் என்ன நேர்ந்ததோ அந்த ரயில்நிலையத்தில் மருந்துக்கும் ஆட்களை காணவில்லை.யாரும் பிச்சையும் போடவில்லை.என்னவோ ஏதோவென்று கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று சேமிப்பை செலவழித்தாள்.

மறுநாளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து பேர்தான்.ரயில்களும் ஓடவில்லை.ஏதும் போராட்டமாக கூட இருந்திருக்கும்.ஆனால் கிழவியின் பாடு யாருக்கு தெரியும்.சேமிப்பு காசு தீர்ந்துவிட்டது.இன்று என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருந்தாள்.

காசு இருக்கும் போது இருந்த அதே வயிறுதானே இல்லாத போதும் இருக்கிறது.

கிழவிக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது.மூச்சு விட வெகு சிரமப்பட்டாள். காலை போய் மதியம் வந்தது.பசி அகோரப் பசியானது. வயிற்றில் கையை வைத்து முனகிக் கொண்டே கிடந்தாள். தாங்க முடியாத பசி கண்களில் தாரை தாரையாக கண்ணீராக வந்தது. கண்டுகொள்வார் யாருமில்லை.அல்லது அவர்கள் கண்களில் கிழவி படாமல் போயிருக்கலாம். ஆனால் வயிற்றிற்கு சோறு வேண்டும் இப்போது.அதற்கு வழியேது?அவளால் கத்த முடியவும் இல்லை.தலைகிறுகிறுத்தது. கண்களை மூடினாள்.அப்படி தரையில் கிடந்தாள்.பேச்சு மூச்சில்லை.

மாலை வந்தது.இருந்த நாலைந்து பேரும் மறைய ஆரம்பித்தனர். பெட்டிக்கடை மூடப்பட்டன.கிழவிக்கு லேசாக உணர்வு வந்தது. கண்களை திறந்தாள் .பசி கொஞ்சம் அடங்கியது போல தெரிந்தது.ஆனால் கைகால்களை அசைக்க முடியவில்லை.கிழவிக்கு கொஞ்ச தூரத்தில் கேண்டீன் தெரிய அதை நோக்கி மெல்ல ஊர்ந்தாள்.நகர்ந்துகொண்டே இருந்தாள். அவளின் பிரம்ம பிரையதனம் கேன்ட்டினை அடைய உதவவில்லை.பத்தடி கூட போயிருப்பாளோ மீண்டும் பசி.மயக்கம் வர சரிந்தாள்.இனிய இரவு அந்த ரயில்நிலையத்தை ஆரத்தழுவியது.

மறுநாள் காலை ஆள்நடமாட்டம்.சூரியன் சுட்டெரிக்க கண்திறந்தாள் கிழவி.கைகள் லேசாக அசைய நடக்கும் பயணிகளுக்கு தொந்தரவாக நாடு பிளாட்பாரத்தில் கிடந்தாள்.பசிவிட்டபாடில்லை.சன நடமாட்டத்தை உணர்ந்ததும் மிகவும் பிரையதனப் பட்டு கைகளை நீட்டினாள். விதவிதமான செப்பல்களும்,சேலைகளும்,வெள்ளை வேட்டிகளும் கிழவியின் முகத்தை தடவி போயின.கிழவிக்கு ஒரு நினைவும் இல்லை.பசியற வேண்டும்.ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தாள்.கதறினாள்.வாயில் காற்று மட்டுமே வர கண்களில் கண்ணீர்.இன்று தன் பசி ஆறும் என்று கிழவி நம்பினாள்.

ஆனால் சனங்கள் எல்லோரும் பரபரப்பாகவே இருந்தனர்.அவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு தலை போகிற வேலை இருந்தது.அவரவர் தங்கள் மனதிற்குள் செய்ய வேண்டிய காரியங்களையோ,செய்த நினைவுகளையோ சுமந்துகொண்டோ,அலைபேசிகளில் கதைத்துக் கொண்டோ இப்படி பலவித பணிகளில் மூழ்கி இருந்தனர்.தவிர அவரவர்க்கு அவரவர் பாடு. அவரவர்க்கு வேறு வேலை கிடையாதா என்ன? என்பது கேவலம் இந்த கிழவிக்கு புரியவில்லை. ஒவ்வொரு முகமும் கிழவியை கண்டும் காணாமலும்,முறைத்துக் கொண்டுமே சென்றனர்.கேவலம் ஒரு சோற்று பொட்டலத்தையோ தண்ணீர் பாட்டிலையோ வீசிவிட்டு போக கூட அந்த தனவான்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கும் போல.

மீண்டும் பசி.கோரப் பசி.எதை தின்று இந்த பிசாசை விரட்டுவது.உள்ளிருக்கும் ஒவ்வொரு உறுப்பும் கரைவது போல உணர்ந்தாள். கிழவியால் முடியவில்லை.ஆளே அடையாளம் தெரியாத படி செத்துப் போனாள்.பிறகு செய்தி கேள்விப்பட்டு அங்கிருக்கும் சிலர் வந்து பார்த்தனர்.

"மூணு நாளா அன்னந்தண்ணி ஆகாரமில்லாம கேள்வி பெனாத்திகிட்டு கெடந்திருக்கா.ஒரு பிடி சோறு குடுக்க நாதியில்ல.பட்டினிதான் கெழவிய கொன்னுபுடிச்சி.சொந்தக் காரன்,அண்ணன்தம்பியோ யாருமில்ல.நாமதான் பொணத்த எடுத்து பொதைக்கணும்." அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

அடுத்த சிலமணிகளில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்தன.அதில் ஒருவன் என்ன நினைத்தானோ.."போகிற உசுரு ஆசா பாசத்தோடு போகக் கூடாது.மூணு நாளா கெழவி சோறு மேலயே ஏக்கம் புடிச்சி செத்திருக்கா." என்று சொல்ல எல்லோரும் ஆமோதித்தனர்.

சிறிது நேரத்தில் பிணத்தின் இரண்டு கைகளிலும் சோற்றையும் கொஞ்சம் கறியையும் வைத்து புதைத்தனர்.


Sunday, January 9, 2011

திருடன்

அவனின் முகம் வீங்கி ரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. அவனின் ஒற்றைக் கண் ரத்த காயத்தால் மறைந்திருந்தது. மீதமிருந்த மற்றொரு கண்ணின் வழியாக சாளரத்தின் வெளியே பார்வையை நிறுத்தியிருந்தான். அவனின் சட்டை எப்படி நார் நாரைக் கிழிக்கப்பட்டு தொங்குகிறதோஅதே போலவே அவனின் தோலும் அங்கங்கே உறிந்துத் தொங்கியது. கிட்டத்தட்ட குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தான்.

உயிரோடிருக்கும் ஒற்றைக் கண்ணின் வழியாக அசையாமல் சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சாலையில் நடமாடும் மக்களோடு தானும் சேர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டான். துன்பத்திலேதான் மறந்து போன நாட்களின் மறந்து போன சம்பவங்கள் மனதில் வந்து வட்டமிட ஆரம்பிக்கின்றன.வீணாக பிடிபட்டு விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது அந்த அறையினுள் காலடி சத்தம்..

இரண்டு பேர் நடந்து வருவதை அவன் உணர்ந்தான். பேச்சு சத்தம் கூட கேட்டது.

"என்னய்யா.. ஏதாவது சொல்றானா?"

"சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கான் சார்.. திருட தான் போனானாம். அது அமைச்சர் வீடுன்னு தெரியவே தெரியதுன்றான்… இதையே தான் பொலம்பிட்டு கிடக்கறான். காம்பவுன்ட் தான் ஏறினானாம். அதுக்குள்ள நம்ம ஆளுங்க புடிச்சுட்டாங்க.”

அவர்களில் ஒருவன் குனிந்து அடிப்பட்டுக் கிடந்தவனை நோக்கினான்.

“ஏன்டா.. உனக்கு திருடுறதுக்கு அமைச்சர் வீடுதான் கிடைச்சுதா?”

மீண்டும் ஒரு உதை கிடைத்தது. வலியால் துடித்தன்.

“இவன் மேல திருட்டு கேசு ஏதாவது இருக்கா?”

“இல்லை சார்.. இது தான் முதல் தடவையாம்.. கிராமத்துல விவசாயம் பாத்துட்டு இருந்தானாம். அம்மா அப்பால்லாம் இருக்காங்களாம். ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் அவன்களில் ஒருவன்.

“இந்தப் பதில அந்தாள் கிட்ட சொல்ல முடியாது. இப்பவே கண்டப்படி கத்திக்கிட்டு கிடக்கான்…”

சிறிது நேரம் அமைதி.

“சரி இங்க வா.”

இருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். குத்துயிராய்க் கிடந்தவன் சாளரத்தை விட்டு பார்வையை அகற்றவேயில்லை.

சில மணி நேரங்கள் கடந்திருக்கலாம். மீண்டும் காலடி சத்தம். அவன் அதே நிலைத்த பார்வையில்.

“உன் கடைசி ஆசை என்னவென்று சொல்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'ஆ.. ’கடைசி ஆசை’ அப்படியெனில் நான் சாகப் போகிறேன். அவன் கண்களை மூடினான். முகத்தைத் திருப்பவும் இல்லை.

அவன் மீண்டும் கேட்டான்.

”கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா? அம்மா, அப்பா யாரையாவது பார்க்கணும்னா ஏற்பாடு பண்றேன்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'இவனுக்கு உண்மையிலேயே நம் மீது பரிதாபம் இருக்குமா? நான் சாகப் போகிறேன் என்பதை எவ்வளவு தடவை சொல்கிறான். அதைத் திரும்ப திரும்ப சொல்லி என்னை பயப்பேதியில் ஆழ்த்துவதில் என்னவொரு குரூர சந்தோஷம் இவனுக்கு. என் கடைசி ஆசை உங்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும் என்பது தான். ச்சே..வாயில் வேறு துணியை வைது அடைத்து விட்டார்கள். என் ஆசை அதுதான்.'

அவனது பார்வை மீண்டும் சாளரத்தில் நிலைத்தது.

“எதுக்காக அமைச்சர் வீட்டு சுவர் ஏறி குதிச்ச?” என்று அவனது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டனர்.

"நீங்கள் எவ்வளவு முறைக் கேட்டாலும் உண்மை நான் எற்கனவே சொல்லிவிட்டேன். உண்மையை விரும்பாதவர்களை நம்ப வைப்பது கஷ்டமான வேலை."

உருவமே இல்லாத ஆண்டவனை போல,உண்மையும் உருவமற்று போய்விட்டதா?..எல்லாமே பைத்தியக்காரத்தனம்..சீ..!

தங்கம் சொக்கத் தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட்டாக வேண்டும்.. ஆனால் மனிதனை..?

“உங்கம்மாவை வரச் சொல்லியிருக்கே” என்று சொல்லி விட்டு அவன் அறையை விட்டு வெளியில் போய்விட்டான்.

அறையில் மீண்டும் நிசப்தம்.

காலத்திற்கு யாரை பற்றியும் கவலை இல்லை...

மறுநாள் செய்திதாள்களில், 'ஆளுங்கட்சி அமைச்சரைக் கொலைச் செய்ய முயன்ற இளைஞன் சிறையில் இருந்த தப்பிக்க முயன்ற போது, கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டான்’ என்று செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது.

Sunday, January 2, 2011

நெறிஞ்சிமுள்


ஸ்டெல்லா... அவள் கண்களைப் போல உலகில் எந்தப் பெண்ணிற்கும் வாய்த்திருக்காது. நான் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். அவளின் கண்களின் ஜீவ ஒளி அற்புதமானது ..
நான் அவளை சந்தித்த நாள்.. அது ஒரு ஏப்ரல் மாதமாகவோ அல்லது மே மாதமாகவோ இருக்கலாம். ஸ்டெல்லா எங்கள் அலுவலகத்திற்கு வந்த நாள் இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. ஆரஞ்சு நிற சுடிதாரில்.. கூந்தலைக் காற்றில் பறக்க விடாமல், அழுந்த வாரிய தலையுடனும் ஒருவித வெட்கத்துடனும் அவள் காலடி எடுத்து வைத்த அந்தக் காட்சி.
நான் இதுவரை அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசியிருப்பேனா என்பது சந்தேகம் தான். அப்படியே பேசி இருந்தாலும் அவை அதிகமிருக்காது.
நான் முதன்முதலாக அவளிடம் பேசிய வார்த்தை, 'உங்க பெயர் என்ன?' என்பதே. அவள் சிறு வெட்கத்துடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.

'ஸ்டெல்லா மேரி.'

என்னால் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. மின்சாரத்தால் தாக்குண்டதுப் போல் தலைக் குனிந்துக் கொண்டேன். என்ன அழகான கண்கள்.. அகன்ற கருமையான விழிகள். ஜீவ காந்தம் வீசும் மெல்லியப் பார்வை. வேனிற்கால நட்சத்திரங்கள் என்று கேள்விப்பட்டது உண்டா? அதைப் போல.

அன்றிலிருந்து என் வேலையில் புது சிரத்தை வந்தது. மனதில் கலக்கமும், வருத்தமும் தோன்றும் போதெல்லாம் அவள் கண்களை பார்த்துக் கொள்வேன். ஒரு புது உற்சாகம் தோன்றி குதூகலத்தோடு வேலையை ஆரம்பிப்பேன். சமயங்களில் அவளும் என்னைப் பாத்துக் கொண்டிருப்பாள். சமயங்களில் அந்தக் கண்களில் அமைதிக் கலந்த ஒரு வித வேதனைத் தாண்டவமாடும்.
நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இப்படியே அவளைப் பார்த்துக் கொண்டே, எங்கேயாவது முட்டிக் கொள்வது என் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது .
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கண்ணீர் ததும்ப என் முன் வந்து நின்றாள். நான் பதறிப் போய், 'என்னமா.. என்னாச்சு?' என்று கேட்டேன்.
அவள் பதிலேதும் சொல்லாமல் விசும்பிக் கொண்டே, 'எங்கப்பா வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லிட்டார்' என்றாள்.
'என்னவாம்?'
'கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றார்.'
'பண்ணிக்க வேண்டியது தானே!!
அவள் என்ன நினைத்தாளோ ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய் விட்டாள். எனக்கு வருத்தமாக போய்விட்டது .
மறுநாள் அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன். ஸ்டெல்லா தான் திறந்தாள். என் எதிர்பாராத வருகை அவளை ஆச்சர்யப்படுத்தியிருக்க வேண்டும்.
'அப்பா இருக்காரா?'
'ம்ம்.. உள்ள வாங்க.'
நான் உள்ளே சென்றேன். ஒரு முரட்டு ஆசாமி, 'யாருப்பா நீ.. என்ன வேணும்?'
'நானும் ஸ்டெல்லாவும் ஒரே ஆபீஸ்-ல தான் வேலைப் பார்க்கிறோம்.'

எனக்கு பதற்றமும், பயமும் வயிற்றைக் கலக்கியது .
'ஓ.. சரி. உக்காருங்க.'
என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன். ஒரே நிசப்தம்.
'வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?'
'பரவல்லைங்க.'
மீண்டும் அமைதி.
'ஸ்டெல்லாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.'
'ஆமாமா.'
'எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம். உங்க சம்மதத்தோட..' என்று விழுங்கினேன்.
அந்த மனிதர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
'உன் பெயர் என்ன?'
சொன்னேன்.
'நாளைக்கே "எங்க ஆளா" மாறிட்டு வந்து நில்லு. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ போலாம்.'
நான் எதுவும் பேச முடியாமல் தயங்கி நின்றேன்.

'கெளம்பறயா?? இல்ல கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளட்டுமா?'

அவமானம் தாங்க முடியாமல் நான் வேகமாக வெளியேறினேன். ஸ்டெல்லாவை ஏறிட்டும் பார்க்கவில்லை. இதயம் கனத்தது. பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடந்தேன்.
அதன் பிறகு ஸ்டெல்லா வேலைக்கு வரவில்லை. நானும் அவளைப் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாள் எங்கள் அலுவலக வாசலில் ஸ்டெல்லா காத்திருப்பதாக கிளார்க் அழைத்தான் .
என் எதிரில் நின்றுக் கொண்டிருந்தாள். அழுது அழுது வாடிப் போயிருந்தது அந்த ஜீவ களையுள்ள முகம். பார்க்க பரிதாபமாய் இருந்தாள்.
'என்ன சொல்றார் உங்கப்பா?'
'அன்னிக்கு உங்ககிட்ட சொன்னத தான் இப்பவும் சொல்றார்.'
'இப்பவே நீ எங்க சாதி பொண்ணாயிடு. இங்க வந்துடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சரியா?'
'எங்கப்பா என்னையும் கொல்லுவார். உங்களையும் வெட்டுவார்' என்று பரிதாபமாய் சிரித்தாள். பரிகாசமாகவும் சிரித்திருக்கலாம்.

அப்போது எங்கள் கிளார்க் லபோதிபோவென்று உள்ளே வந்தான். 'எம்மா.. உங்கப்பா வந்துட்டாரு. வாசல்ல நின்னு கத்திட்டு இருக்காரு.. போம்மா சீக்கிரம்.'
அதற்குள் அந்த மனிதர் உள்ளே வந்து அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். எனக்கு கோபம் வந்து நிறுத்துமாறு கத்தினேன்.
அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டார்.
நாட்கள் கடந்தது. ஸ்டெல்லா மறந்தே போய் விட்டாள். நான் அவளின் நினைவை மறக்க விரும்பினேன்.
கிளார்க் என்னிடம் தயங்கி தயங்கி ஒரு விஷயத்தைச் சொன்னான்.

'ஸ்டெல்லாவிற்கு கல்யாணம் ஆகிட்டது. ரொம்ப மோசமான குரூபி.'
அந்த வார்த்தை ஈட்டியாய் குத்தியது.
வருடங்கள் சென்றது. சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து அதிலேயே முழ்கிக் கிடந்தேன். எந்நேரமும் வேலை வேலை என அலைந்தேன். என் தங்கைக்கு கல்யாணத்தை முடித்தேன். சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டினேன். ஸ்டெல்லா மறந்தே போய்விட்டாள். அப்பொழுது என் நண்பனின் மூலமாக ஒரு செய்தி கேள்விப் பட்டேன். ஸ்டெல்லா அந்தக் குரூபியோடு வாழ முடியாமல், தகப்பனார் வீட்டுக்கே வந்தாள் என்றும், ஆனால் அவளை வலுக்கட்டாயமாக அவனிடமே கொண்டு விட்டுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் வெளியூர் பயணத்திற்காக, ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், நான் திரும்பினேன் .

ஸ்டெல்லா. வயதான ஸ்டெல்லா. தோல் சுருங்கி, கன்னங்கள் ஒடுங்கி மெலிந்துப் போயிருந்தாள். அந்தக் கண்களின் பிரகாசம் மட்டும் மாறவே இல்லை. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பேச நா எழவில்லை.
'எப்படியிருக்கீங்க சமீர்?'
'ம்ம்.. நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?'
'ம்ம்.. எங்க இந்தப் பக்கம்?'
சொன்னேன். ஆனால் அவள் கவனித்ததாக தெரியவில்லை.
'கல்யாணமாயிடுச்சா?'
'ம்ம்..'
'நான் அவங்களைப் பாக்கலாமா?'
என் மனைவியை அழைத்தேன். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ரயிலின் சத்தம் கேட்டதும் கிளம்பி விட்டாள். அதன் பிறகு நான் ஸ்டெல்லாவை பார்க்கவேயில்லை.

Saturday, October 16, 2010

ஆதாம் ஒரு பிற்பகல்

புதிதாக குடிவந்திருக்கும் எதிர்வீட்டுக்காரரின் மகனுக்கு நீண்ட தலை முடி. ஏதோ ஒன்றை சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராக கட்டியிருந்தான். ஒரு கையால் பெயின்ட் வாளியை பிடித்தபடி மறு கையால் சுவற்றிற்கு வண்ணம் அடித்துக்கொண்டிருந்தான். சுவற்றிற்கு ஏதோ வலிக்கும் என்பது போல மிகுந்த ரசனையுடன் மெல்ல மெல்ல தடவிக்கொண்டிருந்தான்.

மாடியிலிருந்து அவனை பார்த்துகொண்டிருந்த யோகிதா, சுவற்றிற்கு வண்ணம் அடிப்பது எவ்வளவு அழகான குதூகலமான வேலை என நினைத்துக்கொண்டாள். அவன் அரைக்கால் டவுசரும், சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணினுடைய தோற்றத்தை அவனுக்கு தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது.

அவள் வேடிக்கையை நிறுத்தி விட்டு தன் இரு கையையும் தட்டினாள்.

''ஏ.. பையா..'' அவள் அழைத்தாள்.

அந்த பையன் தலையை நிமிர்த்தி யோகிதாவை பார்த்து புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள தலைமுடியுடன் ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததை போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்கு காரணம்.

அந்த பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையை பார்த்து யோகிதா விடாமல் சிரித்ததோடு என்ன என்பதுபோல பதில் சைகை செய்தாள். ஆனால் அந்த பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு மறுகையால் பெயின்ட் வாளியை தூக்கிகாட்டினான்.

அவள் மாடியிலிருந்து இறங்கி வந்து வாசலில் நின்று கொண்டு அந்த பையனை பார்த்து சிரித்தாள்.

''இங்க வா..'' என்றான் அந்த பையன்

''என்ன அது''

''பெயின்ட். இங்க வந்து பார்..''

''எதற்கு என்று சொல்''

'' நீ இந்த சுவற்றிற்கு வெள்ளை அடிக்கிறாயா?. இதோ இப்படி'' அவன் செய்து காட்டினான்

''நான் போக வேண்டும் . அம்மா திட்டுவாள்.''

''உனக்கு இது வேண்டாமா?உடனே வா''

''கொஞ்சம் பொறு'' யோகிதா வீட்டை திரும்பி பார்த்து விட்டு அந்த பையனை நோக்கி நடந்தாள்.

அவள் குதிகாலை தூக்கிக்கொண்டு துள்ளி நடந்து வந்தாள். அவளின் நடை எப்போதுமே அப்படித்தான். அவளுக்கு சின்னஞ்சிறிய வட்ட வடிவ முகம். காலர் கொண்ட பூப்போட்ட சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத முகம் யாரையும் எளிதில் ஈர்த்து விடும். மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என அவள் எப்போதுமே சிரித்துகொண்டிருந்தாள்.

''ஹலோ'' என்றால் யோகிதா.

''ஹலோ'' என்றான் அந்த பையன். அவனுடைய கழுத்து , மார்பு, முகம் எல்லாம் பெயின்ட் அப்பியிருந்தது.

''உன் பெயர் என்ன?'' யோகிதா கேட்டாள்

''அபுபக்கர்.''

''அபுபக்கர்.. அபுபக்கர்... என் நண்பன் பெயர் கூட அபுபக்கர் தான். ''

''யார் அது?''

''என் பள்ளித்தோழன். ஆனால் அவனுக்கு இவ்வளவு நீளமான முடி இல்லை. ''

'' நீ என்ன படிக்கிறாய்?'' கேட்டான் அபுபக்கர்.

''பத்தாவது. நீ?''

'' நான் பள்ளிக்கு போவதில்லை.''

''நீ ஏன் பள்ளி செல்வதில்லை?''

''படிப்பு வரலை. அப்பாவிற்கு ஒத்தாசையாக இருக்கிறேன்''

''உங்கள் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டாரா?''

''மாட்டார்''

''உன் பெயர் என்ன?''

''யோகிதா. எதற்காக கூப்பிட்டாய்?''''

''வண்ணம் அடிக்கிறாய இவற்றிக்கு?'' என்றபடி பிரஷை அவளிடம் கொடுத்தான்.

அவள் உடனே உற்சாகமாகி பிரஷை அவனிடமிருந்து வாங்கிகொண்டு வாளியை தூக்கிகொண்டாள்.

''இரு.. நான் எப்படி என்று சொல்லித் தருகிறேன்'' என்றபடி அபுபக்கர் அவளுக்கு விளக்கினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஒரு பக்க சுவரை முடித்தார்கள்.

''சரி.வா. நான் உனக்கு ஒன்று காண்பிக்கிறேன்'' வாளியை கீழே வைத்தபடி அவள் கையை பிடித்தான்.

யோகிதா தயங்கினாள். ''முதலில் என்னவென்று சொல்''

''காண்பிக்கிறேன் வா.. அதை உனக்கு அன்பளிப்பை தருகிறேன்.''

''அதை எனக்கு தருவாயா''

ஆம். தருகிறேன். அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டு அறைகளை கடந்து பின்வாசலை அடைந்தான்.

வெளியே அவர்களின் தோட்டம் பரவி இருந்தது.

மலர் தோட்டத்தின் ஒரு மூளைக்கு அழைத்து சென்றான்.

ஆகாயத்தை நோக்கி கம்பீரமாக மொட்டு அரும்பி இருந்த அள்ளி மலர்க் கூட்டத்தினிடையே நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாக பார்த்த படியும் தன் கைவிரல்களை அங்குமிங்குமாக அலைய விட்டபடியும் தன் உள்ளங்கையில் எதையோ மறைத்த படியுமாக அபுபக்கர் இருந்தான்.

மலர் கூட்டத்தினிடையே யோகிதா செல்லவில்லை. மௌன புன்னகையோடு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அபுபக்கர் எல்லா அல்லி செடிகளின் மீதும் பார்வையை படரவிட்டான். ஒரு கையால் மறு கையை பொத்தியபடி யோகிதாவை நோக்கி வந்தான்.

'' உன் கையை திற'' என்றான். யோகிதா தன் கைகளை ஒரு கிண்ணம் போல் குவித்திருந்த போதிலும் அவனுடைய கைகளுக்கு கீழாக கொண்டு போக பயந்தாள்.

'' உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய்?''

''அருமையான ஒன்று''

'' முதலில் காண்பி''

அபுபக்கர் அவள் பார்க்கும் வகையில் தன் கைகளை திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ண சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பும் ஊதா, என இருந்த போதிலும் பச்சை வண்ணம் மிக அழகாக இருந்தது. அவை மென்னிரைச்சலோடும் ஒன்றோடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு சிறிய கால்களை காற்றில் அலைய விட்டபடி இருந்தன. யோகிதா பயந்து போய் பின் வாங்கினாள்.

'' இப்படி நீட்டு..'' என்றான் அபுபக்கர். ''உனக்கு பிடிக்கவில்லையா..?''

''தெரியலை'' நிச்சயமில்லாமல் சொன்னாள் யோகிதா.

''இவை கடிக்காது. கையை நீட்டு''

அவள் மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். அபுபக்கர் எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அலையலையாக அவள் கைகளில் கொட்டினான்.

''அம்மா...'' அவை கடிக்ககூடும் என்று அவள் அறிந்திருக்கவில்லை. கைகளை திறந்து விட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்பு பூசிக்கூட்டம் மறைந்ததை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

''ச்சே.. எவ்வளவு அழகானவைகள். விட்டுவிட்டாயே..''

''நான் போக வேண்டும். அம்மா தேடுவாள். யோகிதா தன் செயலுக்காக வருத்தப்பட்டாள்.

''அவ்வளவு தானா. நான் உனக்கு காண்பிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.''

''என்ன அது''

''வந்து பார்'' மீண்டும் அவள் கையை பிடித்து கொண்டு நடந்தான். தோட்டத்தை கடந்து வெகு தூரம் சென்றார்கள்.

ஓரிடத்தில் நின்று அபுபக்கர் கத்தினான். ''அங்கே பார்''

அவன் காட்டிய திசையில் ஒரு பாம்பு புற்று நான்கடி உயரத்தில் இருந்தது.

யோகிதா பயந்து கொண்டு பத்தடி பின் வாங்கி ஓடினாள். ''பயப்படாதே வா'' என்றான் அபுபக்கர் சிரித்தபடி.

''நான் மாட்டேன்''

''நாம் அதில் பாம்பு இருக்கிறதா என பார்க்கலாம் வா. நான் கையை விடப்போகிறேன்''

''உனக்கென்ன பைத்தியமா? அது விஷம். நேரம் ஆகிறது. நாம் போகலாம்.'' அவள் கத்தினாள்.

அபுபக்கர் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் புற்றை நோக்கி நடந்தான். அவள் பயந்தபடியே விலகி இருந்தாள். அவன் கையை உள்ளே விட்டபடி யோகிதாவை பார்த்து பளிப்பு காட்டி சிரித்தான்.

கொஞ்ச நேரத்தில் ''இங்கே பார்'' உள்ளிருந்து எதையோ எடுத்தான்.

யோகிதா பயந்தபடி ''என்ன அது?'' அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

''பொறு''

யோகிதா அவனின் தோள் வழியாக கூர்ந்து பார்த்தாள். ''ஐயோ.. என்ன அது. முட்டையா?.. பாம்பினுடையதா ?''

''ஆமாம் ஆனால் இது உடைந்திருக்கிறது. தொட்டு பாரேன் ''

''என்ன கன்றாவி இது? வா போகலாம். நான் போகிறேன்''. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

''இரு இரு. பயந்து விட்டாயா?

அபுபக்கர் மீண்டும் அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான். அங்கிருந்த அணில்களை துரத்தி விளையாடினார்கள்.

எலுமிச்சை தோட்டத்தில் புகுந்து காய்களை பறித்தார்கள். தோட்டதுக்காரர்களுக்கு தெரியாமல் மாம்பழம் , கொய்யா பழங்களை பறித்துக்கொண்டு ஓடினார்கள். ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டார்கள்.

யோகிதா ஒரு மாம்பழத்தை தின்ன ஆரம்பித்தாள். அபுபக்கர் பாறையில் படுத்துக்கொண்டான்.

''நீ ஏன் நீள முடி வைத்திருக்கிறாய்? என்றாள்.

''ஏன் என்றால்.. அதுவாக வளருகிறது. ''

''உனக்கென்ன வயது?''

''பதினைந்து. உனக்கு..''

''பதினாலு''என்றபடி யோகிதா அவனை பார்த்தாள். எவ்வளவு வேடிக்கையானவன். எவ்வளவு சுதந்திரமாக சுற்றித்திரிகிறான். வேடிக்கை காரன்.

அப்போது தோட்டக்காரனின் சத்தம் கேட்டு மீண்டும் எழுந்து ஓடினார்கள். அப்போது கள்ளிசெடிகளை நோக்கி அபுபக்கர் குனிந்தான். யோகிதா அவன் பின்னால் நின்றபடி எட்டிப்பார்த்தாள்.

''இதோ பாரேன் . அட்டை. அவை கைகளில் மீது ஊறும் போது ஒரு மாதிரியாக சிலிர்க்கும் பாரேன். '' என்றபடி ஒரு அட்டையை தூக்கி அவள் கையில் போட்டான். அவள் அலறியபடி உதறிக்கொண்டு ஓடினாள்.

அபுபக்கர் பலமாக சிரித்தான். அவன் ஓவ்வொரு அட்டையையும் எடுத்து தன் கை மீது போட்டுக்கொண்டான். அவைகள் வெகு வேகமாக குதித்துக்கொண்டு அவன் மீது ஏற ஆரம்பித்தன. முழங்கை, கழுத்து என பரவிக்கொண்டிருந்தன.

யோகிதா கத்தினாள் ''உதறிவிடு அபுபக்கர்..''

அவளின் பயத்தை பார்த்து அவன் இன்னும் பலமாக சிரித்தான். ஆனால் உதறிவிடவில்லை.

யோகிதா நேராக வந்து அவன் மீதிருந்த அட்டைகளை எல்லாம் தட்டி விடத் தொடங்கினாள். பயத்தில் அவள் அழுவதற்கு ஆயத்தமானது போல கண்களில் நீர் கோர்த்துகொண்டது. அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு அபுபக்கர் அசட்டையாக கைகளை துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய் விட்டதென்னவோ உண்மை.

''சரி. நான் உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். நீ எப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்.?''

''இன்னும் நான்கு நாட்களில்.''

''ஒ..அதற்குள் தந்துவிடுவேன்.''

அவர்கள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் கழித்து வாசலில் ஏதோ சத்தம் கேட்டு யோகிதா வெளியே வந்தாள். அபுபக்கர் சிரித்தபடி நின்றிருந்தான்.

''யோகிதா. நான் உள்ளே வரட்டுமா? உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்..''

''இல்லை. அம்மா திட்டுவாள். அது என்ன கையில்..? அச்சமயத்தில் அவள் அம்மா அழைக்க சிட்டாக பறந்து விட்டாள்.

அவள் திரும்ப வந்து பார்த்த போது அபுபக்கர் அங்கே இல்லை. சுற்றிலும் தேடியும் எங்கும் அவனை காணவில்லை. வாசலில் ரிப்பன் காட்டிய ஒரு பரிசுப் பெட்டி ஒன்று இருந்தது.

யோகிதா அதை பிரித்து பார்த்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் ஒரு கண்ணாடி சீசா நிறைய பல வண்ணங்களில் சில்வண்டுகள் சிறகடித்துக்கொண்டிருந்தன . ஒரு அழகிய வெள்ளை முயல் கழுத்தில் மணியுடன் அவளை மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தது. மலர்ந்த அழகிய சிகப்பு ரோஜா ஒன்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது .

Friday, September 10, 2010

சாந்தி (சண்டை) தெரு


நான்கு வீடுகளை கொண்ட காம்பௌன்ட் . கீழே இரண்டு குடியிருப்புகள். மாடியில் இரண்டு. கீழே வசிப்பவர்களின் வரலாறுகள் தெரியவில்லை. மாடியில் ஒன்றில் வீட்டு உரிமையாளரும் , 'டீச்சரம்மா ' என்ற அடைமொழி கொண்ட பெண்ணின் குடும்பமும் .

இந்த காம்பௌன்டை ஒட்டி சிமென்ட் சீட் போடப்பட்ட மிக மோசமான சுவர்களை கொண்ட ஒரு வீடு . அதில் அய்யர் அம்மா என்றழைக்கப்ப்படும் 60 வயது முதியவர் .அவர் அய்யர் அல்ல . அய்யருக்கும் அவருக்குமான 'வரலாறும் ' கிடைக்கப்பெறவில்லை . பின் வரும் சம்பவங்கள் நடக்க காரணமான , காரணமானவர்கள் வசிக்கும் பிரதான சாந்தி தெரு .

எப்போதும் போல ஒரு நாள் பொழுது புலர்ந்தது. கிழே வசிக்கும் பெண்மணி ஒருவர் வழக்கம் போல துணி துவைப்பதற்காக பக்கெட்டோடு வெளியே வந்தார்.

கல்லோ ரோட்டின் ஓரத்தில். காம்பௌண்டை ஒட்டி.
துணியை துவைக்க ஆரம்பித்தார்.

ஒரு பாவமும் அறியாத அந்த கல்லை தன் துணிகளின் மூலம் அடித்து துவைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

ஈரத்தோடு இருக்கும் ஒரு பொருளை தூக்கி அடித்தால், அதில் இருக்கும் தண்ணீர் சிதறி வெளியேறுவது தானே இயற்பியல் நியதி (?!)

அதன் படியே அந்த பெண்ணும் துவைத்த போது அதிலிருந்து அழுக்கு தண்ணீர் சிதறி வெளியேறியது.

இதில் என்ன பாதகம் என்கிறீர்களா?

பாதகம் இதுதான். சிதறி வெளியேறிய அழுக்கு தண்ணீர், அவர் அடித்த அடியில் சிதறலாக பறந்து சென்று பக்கத்து வீட்டு 'அய்யர்' அம்மாவின் சுவரோடு ஒட்டி உறவாடியது.

அடுத்தது என்ன?

அய்யர் அம்மா ஆக்ரோஷ அம்மாவாக வெளியே வந்தார். அந்த பெண்மணியை வாக்கு வாதத்திற்கு அழைத்தார்.

வாக்குவாதம் முற்றினால் சண்டையாகும். ஆகியது.
சண்டை தெருச்சண்டையானது .

இந்த நேரடி சண்டைக்காட்சி ஒளிபரப்பை பார்க்க தெருவே கூடியது .

அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க இருவரின் குடும்ப வம்சங்களும் பிரிந்து மேயப்பட்டன . இருவரின் பிறவி ரகசியங்களும் ஆராயப்பட்டன. இருவரின் ரகசிய உறவுகளும் தெருவில் அம்பலத்திற்கு வந்தன.

இவை இல்லாத பெண்களின் சண்டை ஏது?

சண்டையில் அய்யர் அம்மாவிற்கு உதவியாளர் தேவைப்பட, தன் மகனை அழைத்தார். 45 வயது மகன் 'ரவுடி' என்ற பெயருக்கு தகுதியானவன். கடுகடுவென்ற முகம். மலை போன்ற தோற்றம். தெருவில் உள்ள அனைத்து குடும்பங்களோடும் சண்டை செய்து பெயர் பெற்றவன். இவை போதுமான தகுதிகள் தானே !

தாயாரின் அழைப்பை கேட்டு விழுந்தடித்துக்கொண்டு வந்தவன், தாயை வணங்கினான். அவள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' சொல்லி அதனோடு தானாக தயாரித்த 'கதை, திரைக்கதையையும்' சேர்த்து சொல்லி ஒப்பாரி வைத்தாள்.

ஆக்ரோஷமான அவனுக்கு கையில் நரம்புகள் தெறிக்க, ஜெட் வேகத்தில் அந்த கல்லை அணுகினான்.

தன் மொத்த பலத்தையும் சேர்த்து அந்த கல்லை உடைத்தெடுத்து தெருவில் வீசியெறிந்தான். பின் சுற்றிலும் பார்வையை வீசினான்.

ஒரு சின்ன பாரட்டுதலையோ, கை தட்டலையோ எதிர்பார்த்தான் போலும்
அதை புரிந்து கொள்ளாத அம்மக்கள், அதிர்ச்சியோடு அவனையே பார்த்தனர். இதனால் கோபமாக சென்றுவிட்டான்.

அந்த தெருவாசிகள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ' பற்றி பிரமாதமாக பேசிக்கொண்டு கலைந்தனர்.

''நான் என்னடா பாவம் பண்ணேன்'' என்று பரிதாபமாக தெருவில் கிடந்தது அந்த கல்.

அன்று மாலை..

மேல் வீட்டு டீச்சரம்மா, மிக நாகரீக பெண்மணி என பெயர் பெற்றவர். காரணம் எதையும் கண்டு கொள்ள மாட்டார். யாரிடமும் பேசமாட்டார். காலையில் நடந்த களேபாரத்தையும் வழக்கம் போல கண்டும் காணாமல் சென்றுவிட்டார்.

எப்போதும் போல மாலை வந்தது. சிறிது நேரத்தில் பெரிய கூப்பாடு போட்டுக்கொண்டு கிழிறங்கி வந்தார்.

காரணம்?

அவரின் 4 ம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளி விட்டு திரும்பி வரும்போது தெரு முனையில் இருந்த நாய் துரத்தி இருக்கிறது. பயந்து போன அவன் தான் தாயிடம் சொல்லி அழுது விட்டான்.

விளைவு?

இந்த டீச்சரம்மா நேராக சென்று அந்த நாயின் உரிமையாளரை பார்த்து இதற்கு பதில் சொல்லுங்க என கேட்டார்

ஆனால் அந்த ஆசாமியோ, தங்கள் நாய் அப்படிப்பட்டதல்ல என்றும் இந்த தெருவில் வேறு யாரும் இப்படி தங்கள் நாயின் மீது பழி கூறியதில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சமர்பிக்குமாறும் மிக அசட்டையாக அவளை பார்த்தான்.

இதற்கிடையில் அந்த தெருவில் நாய்கடி வரலாறுகளை ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள்.

இந்த பதிலை கேட்ட அந்த பெண் நாகரீகம் துறந்தார்.

பத்ரகாளியானார் .

நாயின் உரிமையாளரை நாயாக பாவித்து திட்ட ஆரம்பித்து விட்டார். கணவனுக்கு ஆதரவாக அவர் மனைவியும் தெருவில் இறங்கினார். சண்டையில் உபயோகப்படும் அத்தனை வார்த்தைகளும் அவர்களின் வாயில் தாண்டவமாடின.

பிறகு என்ன?

நாய் சண்டை தெருச்சண்டையானது.

மீண்டும் ஒரு நேரடி ஓளிபரப்பு தெருவாசிகளுக்கு

இதனை களேபாரத்திர்க்கும் காரணமான அந்த நாய் இவர்களின் சண்டையை பார்த்து மிரண்டு ஓடியது.

அதன் கண்களில் மிரட்சி. பயம்

';இவர்கள் என்ன மனிதர்கள் தானா. என்னை 'நாயே ' என்பவர்கள் , இப்படி பேயா நடந்து கொள்கிறார்களே! என்னை திட்ட இவர்களுக்கு என்ன யோக்கியதை?. மடையர்கள் ! '' என அதன் மனதில் எண்ண ஓட்டங்கள்.

நாய் இத்தனையையும் சிந்திக்கிறதா ?

ஆம். சிந்திக்கிறது .

மனிதன் நாயாக மாறும்போது, நாய் மனிதன் ஆகாதோ.

நீதி: மனிதர்களே !. நீங்கள் மனிதர்களாக இருங்கள். நாயாக, நரியாக, மாறி அவைகளிடம் மனித மானத்தை வாங்காதீர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் எங்கள் சாந்தி தெருவில் சென்ற வாரத்தில் அரங்கேறியவை. பெயரளவில் இருக்கும் சாந்தி, தெருவில் இல்லாததால் பெயர் மாற்றத்திற்கான பரிசீலனையில் உள்ளது.