Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Saturday, May 7, 2011

கனவுலகில் ஒரு பயணம்..




தினமும் காலையில் உணவோடு பேருந்தில் சிக்கித் திணறி, அலுவலகம் சென்று செயற்கையான மனிதத்தோடு, விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து, மீண்டும் இரவில் ஒரு பயணம், வீடு, உணவு, உறக்கம், வேலை... இந்த பைத்தியக்கார வாழ்க்கைமுறையை கண்டு வாழ்கை என்பது இவ்வளவு குறுகிய வட்டமா என்று நாளுக்கு நாள் எரிச்சலோடு முடிகிறது. ஞாயிறுகளை தூங்கிக்கழித்தும், திருவிழாக்களில் சிறிது மகிழ்ந்தாலும் மனதில் உள்ள வெறுமை வேதனையானது.

இவற்றை தவிர நம் வாழ்கை முறையில் மாற்றம் இல்லை. முடிந்தால் கொடைகானலுக்கும், ஊட்டிக்கும் சுற்றுலா செல்வோம்.


கண்களை மூடி மனதை விரித்துப்பாருங்கள். 65000 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய நில உலகம். பூமியை போல பத்து லட்சம் மடங்கு பெரிய சூரியன். அதையும் தாண்டி போனால், சூரியன் போல பல லட்சம் மடங்கு பெரிய பெரிய சூரியன்கள் லட்சக்கணக்காக.. அவையெல்லாம் ஒன்று சேர்ந்த நட்சத்திர மண்டலங்கள். அவை பலகோடிகள் சேர்ந்த தொகுதிகள், கொத்தியக்கங்கள்..... இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில்.

என்னால் இந்தளவுக்கு போகமுடியாவிட்டாலும் சூரியனை பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழியில் என் பயணத்தை தொடர்ந்து செல்ல ஆசை.

சமீப நாட்களாக ஒரு எண்ணம். இந்த எந்திர வாழ்கையை விட்டு விட்டு எங்காவது ஓடிப்போய்விட வேண்டும். எங்காவது என்றால் 'into the wild' என்றொரு படம். அதன் நாயகன் போல. வீட்டை விட்டு காட்டை நோக்கி பயணப்பட்டு விட ஆசை. அந்த பயணத்தில் என்னோடு, என் எண்ணங்களோடு, என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர்களோடு பயணப்பட ஆசை. கையில் ஒரு பைசா இல்லாமல், அலைபேசி, நகை நட்டு, என எல்லாவற்றையும் துறந்துவிட்டு காட்டு விலங்குகள் போல், மனித விலங்காக ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு நாள் வாழ்க்கையாவது வாழ ஆசை.

இப்படி நான் தினமும் நிகழாத ஒன்றை கற்பனையிலாவது சென்று பார்க்க ஆசைபடுவேன். இது தொடர்ந்ததாலோ என்னமோ ஒரு நாள் கனவாகவே மலர்ந்தது. எழுந்ததும் கலைந்துவிடும் கனவுக்கு மத்தியில் இந்த கனவு கலையவில்லை. இன்னமும் என் நினைவில் ஊஞ்சலாடுகிறது.

கனவில் நான் ஒரு அடர்ந்த கானகத்தில் அங்கிருக்கும் மரங்களை கொண்டு ஒரு குடிசை போட்டு ஓரிடத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் சர்வ அமைதி. வண்டுகளின் ரீங்காரமும், சில காட்டு விலங்குகளின் ஓசையை தவிர. காட்டுச் செடிகளிக்கு நடுவே நான் நடந்து செல்கிறேன். அதன் இலைகளில் இருக்கும் பனித்துளிகளை முகத்தில் அடித்துக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறேன். என் மனதில் பயம் இல்லை. காட்டுவிலங்குகள் பற்றிய பயம் இல்லை. இருட்டை கண்டு அச்சம் இல்லை. அங்கிருக்கும் அருவிகளில் குளித்து ஆனந்தக் கூத்தாடுகிறேன். அந்த கானகத்தில் எத்தனையோ வண்ணங்களில் வித விதமான பறவைகள் கண்டு வியக்கிறேன். மான்களும், குரங்குகளும், பெயர் தெரியாத விலங்கினங்களும் என்னை சுற்றி விநோதமாக என்னை பார்க்கின்றன. ஆனால் அவற்றின் கண்களில் குரூரம் இல்லை. அவை நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் என் பின்னாலேயே வருகின்றன. நான் ஒரு குட்டி புள்ளி மானை கையில் தூக்கிக் கொண்டு என் குடிசைக்கு வருகிறேன். பசிக்கும் போது அங்கிருக்கும் கோரை புற்களை, ஏதேதோ கிழங்குகளை பிரியமாக சாப்பிடுகிறேன்.



அப்போது என் குடிசையை சுற்றி நான்கைந்து காட்டு யானைகள். ஆனால் எனக்கு ஆச்சர்யம்..!! நான் கொஞ்சமும் பயப்படாமல் ஒரு யானையின் அருகில் சென்று அதன் தும்பி்க்கையில் ஒரு கிழங்கை கொடுத்து தடவி விடுகிறேன். அதன் காது மடல்கள் எனக்கு எட்டவில்லை. குதித்து குதித்து தொட முயற்சிக்கிறேன். சிங்கமும், புலியும் என் அன்பிற்கு கட்டுப்படுகின்றன.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. என் குடிசையை சுற்றி சர்வலோகம். என் மனம் அளவில்லாத மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. வாழ்கையின் நிறைவை, மகிழ்ச்சியை அடைந்துவிட்டதாக ஒரு ஆனந்தம்.

Sunday, February 20, 2011

தேர் திருவிழாவும் குடுமி ஐயரும்


எங்கள் ஊரில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.நடந்த விழாவை பதிவாக போடும்படி ஏராளமான நண்பர்கள் கேட்டுக்கொண்ட படியால் (உண்மையில் என்னை அப்படி கேட்டுக்கொண்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே.ஏராளமானவர்கள் என்று சொல்வது கலிங்கத்துப் பிராணி காலத்திலிருந்தே தமிழர்களின் தொன்று தொட்ட வழக்கம்.வரலாறு காணாத கூட்டம் என்றால் மைக்காரரையும் சேர்த்து ஆறு பேர் என்று அர்த்தம்.இந்த மிகை கலாச்சாரம் ஒரு தனி,மினி மோசடி (சுஜாதா சொன்னது போல) )
இதோ பதிவாக..

தினம் தினம் கலைநிகழ்ச்சிகளாக, பாட்டுக் கச்சேரிகளாக கலை கட்டியது திருவிழா.சத்திய சீலன்,மங்கையர்க்கரசி,அறிவொழி அய்யா என பிரபலமான சொற்பொழிவாளர்களின் வருகைகள் தான் ஹைலைட்.திருவிழா என்றாலே அழகோவியங்களும், அழியா 'ஓவியங்களும்' தானே முதன்மை.ஆனால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம்.இளைஞர்களின் கூட்டங்கள் அவ்வளவாக இல்லை.வருத்தம் மறுநாள் கொஞ்சம் தீர்ந்தது.

மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரில் முருகன் பவனி.இருபதடி உயரத்தில் மிகப் பெரிய மரத்திலான தேர்.படிகளில் ஏறி உள்ளே சென்று தரிசிக்கும் வகையில் தேரின் வடிவம்.நான் ஒரு முக்கிய வேண்டுதலுக்காக கால் கடுக்க வரிசை நின்று தேரில் ஏறி பயந்து பயந்து சுற்றி வந்து முன்னால் நின்றால் முருகனை விட அழகான ஒரு இளம் அர்ச்சகர் தட்டுடன் 'தரிசனம்' கொடுத்துக் கொண்டிருந்தார்.எனக்கு ஆச்சர்யம்,தயக்கம்,கோவில்,முருகன் என்று கலவையான எண்ணங்கள்..அழகான முகத்தில் அருமையான குங்கும நாமம்.கீழே சந்தன கீற்று.கொண்டு போன வேண்டுதல் காணாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

இது அடியேனின் தவறு அல்ல.என் போன்ற பக்தைகளுக்கு (?) இப்படிப்பட்ட சங்கடங்களை முருகன் தவிர்த்திருக்க வேண்டும்.முருகன் மன்னிப்பாராக!இதில் பெரிய எரிச்சலாக அமைந்தது..என் பின்னால் வந்த பிராமண பெண்மணி "சீக்கிரமா போங்கோ..நாங்கள்லாம் தரிசிக்க வேண்டாமா .."என தள்ளிக் கொண்டே வந்தார்.நான் கோபமாகி "தரிசியுங்கோ .. யாரு வேண்டாம்னா..ரெண்டு பேர் இருக்கா,யாரா வென 'தரிசிங்கோ.."என நான் சத்தமாக கூறியதை கேட்டு புரியாமல் விழித்தார்.பின்னர் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.இப்படியாக அரைகுறை 'தரிசனத் தோடு ' வேண்டுதலை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு திரும்பினேன்.

அர்ச்சகர்களில் சிலரிடம் மட்டுமே தெய்வீக அழகு இருக்கும்.ஆனால் அவர்களை போல சிடுமூஞ்சிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. பிராமின்ஸ் சுத்த சைவம் என்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு கோபம் வருவதை போல,வசை வார்த்தைகளை எங்கும் கேட்க முடியாது.சிலர் 'வள் வள்' என்று விழுவதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறார்களோ என தோன்றும் படி இருப்பார்கள்.

அன்று மாலை சத்தியசீலன் அவர்களின் அருமையான பட்டிமன்றம்.அறிவொழி அய்யா,இன்னும் பிரபல பேச்சாளர் என.அதில் சத்திய சீலன் அவர்களுக்கு இந்த வருடம் கலைமாமணி விருது கிடைத்திருப்பதாக அவரும் ,பலரும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு கொஞ்சம் வருத்தம்.அது அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது.நேற்று வந்த நடிகர்கள்லாம் விருது..? அரைகுறை நடிகைகளுக்கும் கலைமாமணி..காலங்கலாமாக தமிழ்,இலக்கியம் என தொண்டாற்றுவோருக்கும் கலைமாமணி.என்னய்யா விருது லட்சணம்?அவர் அதனை நிராகரித்திருக்க வேண்டும் என விரும்பினேன்.

விழாவின் ஒரு பகுதி முழுவதும் கடைகள்,சர்க்கஸ்.ராட்டினம்,ஸ்கேட்டிங்,போட்டிங் என கலை கட்டியது.எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு கையில் இரண்டு பலூனோடு வெளியே வந்தேன்.வேறு என்னத்தை வாங்குவது?எல்லாம் எங்கும் கிடைக்க கூடிய பொருட்கள் தான்.பலூன்கள் மீது சிறுவயது முதலே அலாதி பிரியம்.வாங்கி வந்து வீட்டின் மூலையில் நாள் கணக்காக கிடக்கும். கடைசியில் டென்னிஸ் பால் சைசுக்கு சுருங்கி பின் காணாமல் போய்விடும்.ஆனாலும் ஆசை தீராது.

ஆனால் ஒரு பலூனின் விலை பத்து ரூபாய். கடைக்காரன் புலம்பினான்."எங்கம்மா..இப்பல்லாம் யாரு இதை வந்குராவ..பிளாஸ்டிக் பலூன் தான் உடையாது,காத்து போனாலும் ஊதிக்கலாம்னு இதை யாரும் கண்டுக்கிறது இல்லை.ஏதோ உங்களமாதிரி ரெண்டு பேர் வாங்கினாதான் எங்களுக்கு பொழப்பு.."அவனின் சோக கீதம் என்னை தியாகியாக்கியது.கூட பத்து ரூபாய் கொடுத்து இன்னொன்றையும் வாங்கிக் கொண்டேன்.

பக்கத்து வீட்டு எல்.கே.ஜி.பொடியன் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "ஐய்யே..என்னக்கா இது..சின்ன புள்ளை மாதிரி பலூனோட வரீங்க" அவன் என்னவோ பெரிய மனுஷன் மாதிரி.

நான் சிரித்தேன்.பேசாமல் பளிப்பு காட்டிக்கொண்டே பலூனை தட்டியதை பார்த்து சிறுவனுக்கும் ஆசை வந்துவிட்டது."அக்கா..எனக்கும் ஒன்னு..எனக்கும் ஒன்னு"என்று பின்னாலேயே வந்துவிட்டான்.

"ஏன்டா..உங்கம்மாவை வாங்கி தர சொல்லேன்" என்றேன் அவனிடம் ஒன்றை நீட்டிக் கொண்டே.."போங்கக்கா..அது வெடிச்சிடும்..யூஸ்புல்லா ஏதாவது வாங்கி தரேன்னு சொல்லுது.."சிறுவன் ரப்பரை பிடித்துக் கொண்டு தட்டிய பொது அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பலூன் என்றாலே வேண்டிக்க தானே! அதனோடு ஓடியாடி ,தட்டி தட்டி ஏதோவொரு எதிர்பாராத சமயத்தில் பட்டென்று வெடிக்கத்தானே பலூன்..இதில் என்ன யூஸ்ஃபுல் வேண்டிக்கிடக்கிறது?படிப்பு படிப்பு என மனித்தன்மை தொலைத்த இயந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்து சிறுவர்கள்.

சரி..விழாவிற்கு வருவோம்.திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பு மங்கையர்கரசியின் அருமையான சொற்பொழிவு.தொடர்ந்து ஐந்து நாட்கள்.அருமையான பேச்சு.அதைவிட அருமையான உச்சரிப்பு நடை.காதில் இன்பத் தேன் வந்து பாய வேண்டும் என்றால் இவரின் பேச்சை கேட்டுப் பாருங்கள்.அவ்வளவு அருமை.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர்கள் தங்களால் இயன்ற தொகையை கவரில் வைத்து கொடுக்கலாம்.எல்லோரும் பத்து,நூறு என வைக்க, யாரோ ஒரு தருமப் பிரபு மட்டும் கிரானைட் கல்லை கவரில் வைத்து அதை அழகாக ஒட்டி அனுப்பியிருக்கிறார்.மங்கையர் கரசி அதை மேடையிலேயே சொல்லி அந்த முகம் தெரியாத ஆசாமிக்கு சிறப்பு வாழ்த்துக்களோடு சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சரி,வேண்டுதலுக்கு வருவோம்..என் நண்பர் வேலை வேலை என்று அநியாயத்திற்கு பிஸியாக இருக்கிறார்.அவரின் பணிச்சுமையை குறைத்து கொடு முருகனே .."என்று வேண்டிக்கொண்டு முருகனிடம் விடைபெற்றேன்.முக்கியமான செய்தி..அன்று அந்த பழைய அர்ச்சகர் அன்று இல்லை !

திருவிழா இனிதே நிறைவடைந்தது..!

இவ்வளவு நேரம் இப்பதிவை படித்து தங்கள் பொன்னான நேரத்தை தியாகம் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி..! வணக்கம்..!வந்தே மாதரம் ...!

Saturday, December 18, 2010

அந்த கடவுளுக்கு இது தெரியுமா?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது கடவுள் கேட்டுக்கொண்டிருப்பார்...நம் மீது அக்கறை கொள்வார் என மனத்துயர்களை பகிர்ந்து கொள்வது.அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயிலுக்கு போகின்றனர். வழிபடுகின்றனர்.

கோயில் என்றதும் மனதில் பல சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம்,அகன்ற வாசல் கதவுகள்,வெண்கல குமிழ் பதித்த படிகள், கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூசிய யானை, உள்ளே நுழைந்தால் செவியை நிறைக்கும் மங்கள இசை, அபூர்வமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தூண்கள்,சுவர் ஓவியங்கள்.அந்த ஓவியங்களை கூட உயிர் பெறச்செய்யும் ஓதுவாரின் தெய்விக குரல். கல் விளக்குகள்,அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

நீண்ட அமைதியான பிரகாரம், அங்கே அமர்ந்து ருசி மிக்க பிரசாதம் உண்டு பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம்.இனி நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம் கொள்ளும் முகங்கள்.

கோயிலை விட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும்.

ஆனால் நடைமுறையில் தமிழகத்தில் உள்ளே புகழ் பெற்ற கோவில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசற்படியில் ஆரம்பித்து வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல் வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்கு செல்லும் குற்றவாளி கூட மனத்தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ கோயிலுக்கு சென்று நிம்மதியை தொலைத்து வந்த கதைதான் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது.கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள்,கையூட்டுகள்,அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றிருந்தோம்.ஒரு நபருக்கு மொட்டை போடுவதற்கு 50 கட்டண சீட்டு பெற்று அங்கிருந்த நாவிதரிடம் சென்றோம்.அவர் தனியாக தனக்கு 50 ரூபாய் தரவேண்டும் என சொல்லிவிட்டார். நாங்கள் சீட்டை காட்டினாலும் அதெல்லாம் முடியாது என வாக்குவாதிட ஆரம்பித்து விட்டார். சுகாதாரமற்ற பிளேடு.குளிப்பதற்கு சுகாதாரமில்லாத அழுக்கான தண்ணீர் குழாய்.குளியல் அறையில் குளிக்க வேண்டுமானால் தனியாக 50 ரூபாய்,சந்தனத்திற்கு தனியே 40 ரூபாய்,வெறும் பூ மாலையும் ,தேங்காயும் இருந்த பூஜை பொருட்கள் 200 ரூபாய்.

உள்ளே செல்ல பொது தரிசனம், சிறப்பு தரிசனம் வி.ஐ.பி.தரிசனம் என மூன்று வகை.ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். ஆளுக்கு 250 ரூபாய்சிறப்பு தரிசன சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தால் நீண்ட வரிசை.எப்படியாவது முண்டியடித்து உள்ளே சாமியை பார்க்கலாம் என்றால் எதாவது ஒரு பிரமுகர் சாமியை மறைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் செய்வது போல சிறப்பு பூஜை செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சில 500 ரூபாய்களை பார்க்கும் அர்ச்சகர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே. காணிக்கைகளை உண்டியலில் போடாதிர்கள்...தட்டில் போடுங்கள் என்ற ஓயாத குரல்கள்.

சாமியை தரிசித்து வெளியே வந்தால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. பிரசாதம் வாங்கலாம் என்றால் கொள்ளை விலை.ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்.கோயில் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுக்ககூடாது என மிரட்டியது அந்த வெள்ளைக்காரர் ஒரு 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.வாங்கி கொண்டு சிரித்தபடியே வெளியேறினார் அந்த ஊழியர்.

சில வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை சென்றுருந்தேன்.'நினைத்தாலே முக்தி'.. பேசமால் நினைத்துகொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம்.ஏன்டா போனேன் என்றாகிவிட்டது.

படுமோசமான சாலைகள்,ஒரு அடிக்கு ஒரு பள்ளம்,பஸ்ஸில் போனால்,அதன் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸும் குலுங்குகிறது.அந்த லட்சணத்தில் சாலைகள். சாக்கடையில் இருந்து குப்பைகளை மலை மலையாக சாலையில் குவித்து வைத்திருக்கிறார்கள். சுத்தப்படுத்த ஆட்கள் இல்லை. அது மீண்டும் மழை வந்து சாக்கடையிலேயே கலக்கிறது. சாலையில் எங்கே பார்த்தாலும் குப்பை கூளங்கள் தான்.

இந்த பிரசித்தி பெற்ற கோவிலை சுற்றி இந்த அலங்கோலங்கள். ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஸ்டிரைக் செய்து பார்கலாமே. அப்போதாவது சரி செய்வார்கள் அல்லவா இந்த சாலைகளை'என்றேன். அதை எல்லாம் செய்து பார்த்துட்டோம்மா... உள்ளூர் மக்கள் சேறும் சகதியுமாய் இருந்த சாலைகளில் நாற்று நாட்டு விவசாயமே பண்ணி போராட்டம் நடத்திட்டோம்.ஒருத்தரும் கண்டுக்கிறதில்லை..' என்று வருத்தப்பட்டார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பாதை முழுக்க குப்பைகள் தான். அசுத்தம் தான். கோயில் நிர்வாகமோ, அரசோ எதுவும் கண்டுகொள்வதில்லை.

எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள். அவர்களை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. நமது மோசமான சாலைகளையும்,நாற்றமெடுத்து கிடக்கும் சாக்கடைகளையும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள், டன் கணக்கான எடை கொண்ட கற்களை எப்படி சாரமேற்றி மேலே கொண்டு சென்றிருப்பார்கள்,உள்ளே நந்தியின் சிலை மிகப்பெரியது.அதை தாங்கிகொண்டிருக்கும் கல் எவ்வளவு டன் எடையிருக்குமோ?..அவர்களின் உழைப்பிற்காவது,கற்பனை திறனுக்காவது மரியாதை தருகிறார்களா?

மிதியடிகள் பாதுகாப்பு இலவசம் என்று வெறும் போர்டு மட்டும் தான். அதற்கு தனியாக 5 ரூபாய். பூஜை பொருட்களுக்கும் கொள்ளை விலை. உள்ளே சென்றால் அர்ச்சகர்களின் கொள்ளை.தட்டில் காசு போடுங்கள் என மிரட்டி பிடுங்குகிறார்கள். தானாக ஒருவர் வந்து சந்தனத்தை நெற்றியில் வைத்துவிட்டு 5 ரூபாய் கொடுங்க என வாங்கிக்கொண்டார். அங்கே இருக்கும் சிவனுக்கு மரியாதையோ, பயமோ இல்லை.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படி கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது.காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தியில்' குணசேகரன். ஆனால் இன்று தமிழக கோயில்களைபோல பக்தர்களை துச்சமாக அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் ஹரித்துவார் கும்ப மேளாவில் கூட ஓர் இடம் அசுத்தமாக இல்லை. குப்பைகள் ,கழிவுகளை காண முடியாது.அவ்வளவு தூய்மை.தரிசனம் துவங்கி சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம் . ஆனால் தொடரும் தமிழக கோயில்களின் அவலத்தை போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால் கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

Wednesday, November 24, 2010

மைனா - ஓர் உலக காவியம் !

திருப்பூரில் முதல் முறையாக டைமன்ட் தியேட்டரில் என் காலடி பட்டது மைனா படம் பார்பதற்காக.. (டைமன்ட் புனிதமடையட்டும்!). A Journey Of LoveStory நன்றாகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சலிப்பே இல்லை. மலைக்காட்டு பிரதேசத்தில் ஒரு பயண அனுபவம். கிளைமாக்சில் அந்த பெண் ஆட்டோவில் போகும் போதே நமது மனம் அலாரம் அடிக்க தொடங்கி விடுகிறது. சரி தான் ஏதோ நடக்கபோகிறது என்று. அதே போலவே 'சுபமாகவே' முடித்தார் இயக்குனர். இது ஒன்று தான் இடிக்கிறது?!

ஒரு உண்மை காதல் கதை என்றாலே காதலர்கள் சாக வேண்டும். அதுவும் ரத்த களரியோடு கொடூரமாக முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சினிமாவில் என்றில்லை.. உலக இலக்கியங்களிலிருந்து பார்த்தாலே இப்படி தான் இருக்கிறது. ரோமியோ-ஜூலியட் , லைலா-மஜ்னு.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஏன் இப்படி என தெரியவில்லை.

காதலர்கள் இறந்தால் அங்கே காதல் வாழ்கிறது
அந்த காதல் எங்கே சாகும் என்றால், அவர்கள் கலியாணம் முடிக்கும் போது.

ஒன்று இருவரும் சாக வேண்டும். இல்லை, நாயகனுக்கு பைத்தியம் பிடிக்கவேண்டும் அல்லது அவன் மட்டும் சாகவேண்டும். அப்போது தான் நாம் கண்ணீரோடு வெளியே வருவோம் அல்லது கனத்த மனதோடு புத்தகத்தை மூடி வைப்போம்.

சரி. நம் எல்லோர் வாழ்விலும் இந்த மாதிரி மைனா கதைகள் வந்திருக்கும்.

என்ன, சினிமாவில் ஒருத்தனுக்கு ஒரு மைனா என கதையளப்பார்கள். யதார்த்த வாழ்வில் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எத்தனையோ 'மைனாக்கள்' வந்து போகும்.

இந்த படத்தை பார்த்த போது எனக்கும் என் சிறுவயது 'மைனா' நினைவு வந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு 3 வயது. என் 'மைனா'விற்கும் அதே வயது. (மைனாவிற்கு ஆண்பால் என்ன?)

நகர அங்கீகாரதிற்காக போராடிகொண்டிருந்த எங்கள் கிராமத்தில் எங்கள் நட்பு. பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. எங்கும் ஒன்றாகவே சுற்றி திரிந்தோம். 3 வயதில் புழுதியோடு புரள்வதை தவிர வேறு என்ன தெரியும். அதையே செய்தோம். எப்போதும் ஒன்றாக கைகோர்த்து ஊரெல்லாம் சுற்றினோம்.பண்ணாங்கல் , தாயம், வயல் வெளி புல்வெளி என மைனா படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் என்னென செய்தார்களோ அதேபோல இருந்தோம். எங்களோடு யாரையும் செட்டு சேர்த்து கொள்வது கிடையாது . 5 வயது வரை இப்படியே ஓடியது. இப்படி சந்தோசமாக போய்கொண்டிருந்த எங்கள் நட்பில் ஒருநாள் இடி விழுந்தது.

என்னையும் என் 'மைனாவையும்' பள்ளியில் சேர்த்து விட்டார்கள். எப்போதும் பிரிந்திருக்காத நாங்கள் அழுது தீர்த்தோம். வேறு என்ன செய்ய? கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த உடன் கட் அடித்துவிட்டு வயல்வெளியில் எலிபிடித்து விளையாடி கொண்டிருந்தோம்.

உஷாரான எங்கள் பெற்றோர்கள் என்னை டவுனிற்கு கூடி போய்விட்டார்கள்.

சதிகாரர்கள் !

சின்னப்பெண் யாழினியால் என்ன செய்ய முடியும். அழுது அழுது ஓய்ந்து தூங்கிவிட்டேன் .

பிறகு பல வருடங்கள் கழித்து எனது பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு வந்தேன். அதுவரை இடையிடையே வந்தும் மைனாவை பார்க்க முடியவில்லை. அப்போது எனக்கு ஓரளவே மைனா நினைவு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் எங்கள் பாட்டியோடு பேசிகொண்டிருந்தான். என் பாட்டி உற்சாகமாக ''இவன யாருன்னு தெரியுதா?'' என கேட்டார்.

''தெரியலையே'' என்றேன்.

''உன் சின்ன வயசு பிரெண்டு .. சுரேஷு... மறந்துட்டியா .. எப்போ பாரு ஒன்னாவே சுத்திட்டு இருப்பீங்களே... அவன் தான் ''

நான் ஆர்வமாக பார்த்தேன்.. ஆனால் அவனை பார்த்த போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. தேமே என நின்றுகொண்டிருந்தேன். அவனும் என்னை சட்டை செய்துகொள்ளவில்லை.

எங்கள் பிரிவு எங்கள் நட்பை அழித்து விட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு உன்னத காவியம் இதோடு முடிந்துவிட்டது .

இவ்வாறாக எனது வாழ்வில் மைனா காவியம் இதோடு முடிந்து விட்டது. ஒரு உலக காவியம் உருவாகும் நேரத்தில் அதை கிள்ளியெறிந்து விட்டார்கள்.

Monday, September 20, 2010

அழியா ஓவியம்


சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அத்தையுடன் பவானி பயணம். சேலம் பேருந்தில் ஏறினோம்.

கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. அத்தையும் இன்னபிறரும் நின்றபடி இருக்க, நான் டிரைவருக்கு எதிர்தார்ப்போல முன் கண்ணாடியை ஒட்டி ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.

பயணத்தில் ஏதேனும் ஒரு சிந்தனையில், அல்லது வேடிக்கையில் அனைவரும் லயிந்திருக்க, சிலர் நித்திய சயனத்திலும்.

எனக்கு போரடித்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி இருந்தேன்.

அதில் ஒரு முதுகலை பட்டதாரி போன்ற தோற்றத்தில் ஒரு இளைஞன். நீளமான முடி டென்னிஸ் ரபேல் நடாலை போல. அவனின் கண்கள் ஒரே பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. அவ்வளவு அழகான கண்கள்.

அழகு என்றால் எதனோடு ஒப்பிட்டு சொல்வது?

ஒரு சில கோவில் சிற்பங்களில் நடனமாடும் மாந்தர்கள் இருப்பார்கள். அவர்களின் கண்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் ஆனந்த மயமாக தங்கள் நடனத்தில் லயிதிருப்பார்கள்.

அந்த கண்கள் அந்த இளைஞனிடம் !

அந்த கண்களில் தான் எவ்வளவு சாந்தம், அமைதி !

நான் பேந்த பேந்த அந்த கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

'பேந்த பேந்த' காரணம் பக்கத்தில் அத்தை.

எனக்கு புதுமை பித்தனின் 'சிற்பியின் நரகமும்' , ஆஸ்கர் ஒய்ல்டின் 'அழியா ஓவியமும்' நினைவுக்கு வந்தன.

கோவிலுக்காக செதுக்கிய அழகிய சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் அது தன் அழகை இழந்து கோரமாக மாறிவிடுவதை கண்டு மனம் வெம்பும் சிற்பி. அவனுக்கு அது நரகம். புதுமை பித்தனின் பிரமாதமான கதை.

ஒரு ஓவியம் ஒருவனை படுத்தும் பாடுதான் அழியா ஓவியம். இரண்டு கதைகளும் படித்தவர்களால் மறக்க முடியாதவைகள்.

இரண்டிலுமே கண்களை தான் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.

கண்களோடு தொடர்புடைய நிகழ்சிகள் யாவும் நம் நினைவை விட்டு அகல்வதில்லை.

சிற்பங்களின் கண்கள் எப்போதும் அழகானவை.

சிலைகளும் அவ்வப்போது எழுந்து உயிர்பெற்று வந்துவிடுமோ...

சிந்தனையை நீக்கி அவனை மீண்டும் பார்த்தேன். அழகிய கண்களை பெற்ற பாக்கியவான்!

இப்போது தான் 'செல்போன் கேமரா' வின் அவசியத்தை உணர்ந்தேன்.

2 மணிநேரம் ஓடி பவானியை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய பாராட்டுதலையாவது அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனது நச்சரிக்க,

யோசித்தேன்.

திடீரென்று கவிதையும் வந்து தொலைக்கவில்லை.

''அழகான கண்கள்''
பத்திரமா பாத்துக்கோங்க''

என்று ஒரு சீட்டில் எழுதிகொடுத்துவிட்டு இறங்கி விடலாமா?

ஒருவேளை என்னை 'லூசு' என்று நினைத்து விட்டால் என்ன செய்வது? முன் பின் அனுபவமில்லாத இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு இறங்கி நடந்தேன்.

அத்தையும் நானும் நடந்து சென்றுகொண்டிருந்தோம்.
''ஏண்டி, உனக்கு எதிர்த்தாப்போல ஒரு பையன் உக்காந்திருந்தானே பார்த்தியா?'' அத்தை.

''ஆமா'' (அந்த ரபேல்)

''அவன் பஸ்ஸு ஏறுனதில இருந்து என் மூஞ்சிய மூஞ்சிய பாக்கராண்டி. இந்த காலத்து பசங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகுதோ. நானே பாட்டி!'' என்றாரே பார்க்கணும்.

என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் குபீர் என சிரித்துவிட்டேன்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது.

அவனும் யாரையோ பார்த்தபடிதான் இருந்தான். ஆனால் அது அத்தை என்பதை நான் அறியவில்லை.

முன்னால் சென்று அத்தையின் முகத்தை உற்று பார்த்தேன்.

''அப்படி ஒன்னும் சிற்பக்கலை ஒண்ணும் தெரியலையே..
ஒரு வேலை அவன் கண்ணுக்கு ஏதும் தெரிஞ்சதோ என்னவோ '' என்றேன் சிரித்தபடி.


Friday, September 3, 2010

டேக்ஸ் கட்டாத கோடீஸ்வரர்கள்.


சென்ற வாரத்தில் ஒரு நாள் அவினாசி பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ் ஏற சென்றேன். வேகமாக சென்று பஸ்ஸை நெருங்கும் போது ஒரு பிச்சைக்காரப் பெண் திடீரென குறுக்கே வந்து பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டாள்.

எனக்கு ஒரே எரிச்சல். 'சுத்த நாகரிகம்' இல்லாமல் குறுக்கே வந்து நிற்கிறாளே எரிச்சல் படுத்துகிராளே என்று.

சரிதான்.. பிச்சைக்காரர்களுக்கு ஏது நாகரிகம்?!

அவள் கையில் குழந்தை வேறு. அங்கு நிற்கும் அனைவரின் பார்வையும் என்மீதே இருப்பது போன்ற பிரமை. அவளுக்கு ஏதும் தராமல் முறைத்துக்கொண்டே பேருந்தில் ஏறினேன்.

ஓட்டுனர், நடத்துனரை காணவில்லை. சாவகாசமான பின் அவளை பார்த்தேன். வருவோரையெல்லாம் 'மடக்கி'கொண்டிருந்தாள். பரட்டை தலையுடன் கையில் குட்டி குழந்தை. பிச்சைக்காரர்களுக்கு வர்ணனை எதற்கு?. அவர்கள் தான் அனைவருக்கும் தெரிந்த 'பொது ஜனமாயிற்றே!'

இளம் வயது பெண். பாவம் காசு ஏதும் போட்டிருக்கலாமோ?

சிறிது நேரம் கழித்து டிரைவர் வந்தார். நடத்துனர் அப்பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என்ன என்று எட்டிப் பார்த்தேன்.

நடத்துனர் கேட்பதற்க்கெல்லாம் அப்பிசைக்காரி 'கட்டுப்படாது' என்கிறாள். இவரும் விடுவதாக இல்லை. வாக்கு வாதம் போய்க்கொண்டே இருந்தது. போக போக நடத்துனர் அப்பிசைக்காரியிடமே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

நான் புரியாமல் டிரைவரை பார்த்தேன். அவருக்கோ ஒரே சிரிப்பு. நடத்துனர் அப்பெண்ணிடம் மல்லுக்கட்டிகொண்டிருந்ததை பார்த்து இவருக்கு வேடிக்கை போலும் .

''என்ன சார்?'' என்றேன் அவரிடம்.

''500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுட்டு இருக்கார். அந்த அம்மா கொடுக்க மாட்டேன்றது. அதான்'' என்றார்.

ஏனாம்?'' என்று கேட்டேன்.

''நேத்து வரைக்கும் 100 க்கு 5 ரூபா கமிசன் வாங்கிச்சு. இப்போ 7 ரூபா கேக்குது.''

என்ன, கமிசனா? '' என்றேன் ஆச்சர்யமாக.

''ஒரு நாளைக்கு 1000 ரூபா வரைக்கும் 'வசூல் பண்ணுது'. இங்க பஸ்சுல எல்லாம் சில்லறை தட்டுப்பாடு இருக்கிறதால, இவங்க கிட்ட சில்லறை வாங்க போட்டா போட்டி. யார் அதிகமா கமிசன் தராங்களோ அவங்களுக்கு காச தரும்'' என்றார் டிரைவர்.

' பிசினஸ் டீலிங் ' முடிந்து வெற்றி பெருமிதத்துடன் வந்தார் நடத்துனர்.

''ஒரு நாளைக்கு 1000 ம்னா.. மாசம் 30000 ரூபா. லீவு நாள்ள, விசேச நாள்ள எல்லாம் இன்னும் அதிகம். எப்படியும் 40000 ஆயிரம் வருமானம் இவங்களுக்கு. மதியம் வரைக்கும் ஆனா வசூல் தான் இந்த 500 '' என்றார் நடத்துனர்.

எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.

அரசு சுதாரிப்பது நல்லது. பிசைக்காரர்களிடன் வரி வசூலிப்பது நல்ல வருமானத்தை தர வல்லது.

நாமெல்லாம் மாதம் முழுக்க 'மாங்கு மாங்கென்று' வேலை செய்தாலும் 4 இலக்கத்தை தாண்டுவதே கனவாக இருக்கிறது. சிலருக்கு மட்டும் தான் அது.

நான் இப்போது அவளை பொறாமையுடன் பார்த்தேன்.

பிச்சை எடுப்பது நல்ல தொழில் போலவே !

என்ன கேவலமான தொழிலா? மானம் மரியாதையை என்னாவது என்கிறீர்களா?

நமது அ.உ.க்களும், மா.மி.க்களும் கூட இதை தான் செய்கிறார்கள். பெட்டி பெட்டியாக தலைமுறை தலைமுறைக்கும் சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் என்ன கேவலமா பார்கிறார்கள்?

அவர்கள் தன்மானத்தோடு வாழவில்லையா?

என்ன அவர்கள் கெஞ்சி கேட்கிறார்கள். இவர்கள் அதட்டி கேட்டு பிடிங்கிக் கொள்கிறார்கள்.

அசல் பிச்சைக்காரர்களுக்கு அது தான் தொழிலே! இவர்கள் சம்பளமும் பெற்றுக்கொண்டி 'சைடு பிசினஸ்'

அவர்கள் அழுக்காகவும், சிலர் ஊனமுற்றும் இருப்பார்கள். இவர்கள் நல்ல கையும், காலும், முக்கும், முழியுமாகவே இருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நாகரிக மாந்தர்கள், நாளைய தலைவர்கள், நாமெல்லாம் லட்சியத் தலைவர்களாக நினைப்பவர்கள் எல்லாம் தன்மானம் இல்லாத போது, நாமேன் அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பானேன் !.

ஒரு நான்கு மாதம் மாறு வேஷத்தில் பிச்சையை முடித்துக்கொண்டு விட்டு பிறகு தன்மானம் வளர்க்கலாம்.

நாமும் நம் உயர் அதிகாரிகளிடமும் பயந்து பயந்து எத்தனை காலம் வாழ்வது. இவர்கள் எந்த அதிகாரிகளுக்கு பயப்பட வேண்டும்!.

அரசு அலுவலகங்கள் போவதென்றால் நம் மரியாதையை, தன்மானத்தை எல்லாம் வீட்டிலேயே மூட்டை காட்டி வைத்து விட்டல்லவோ செல்லவேண்டி இருக்கிறது !

வேஷம் தரித்து மறைந்து வாழ்வதில் உள்ள சுதந்திரம் எதில் உண்டு !