Tuesday, June 29, 2010

புத்தரை கேவலப்படுத்தும் புத்த துறவிகள்.

நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தி..
.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கியகுழுவைவை அமைத்துள்ளனர். இதற்கு இலங்கையில் எதிர்ப்பு. இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் எதிர்ப்பது புத்த மத துறவிகள்.

என்ன கொடுமை பாருங்கள். இலங்கையில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குற்றச் சாட்டு. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்பது இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கை.

ஏதேனும் ஒரு வகையில் நீதி கிடைக்காத என நம் மக்கள் கண்ணீர் விட்டுகொண்டிருக்க இந்த புத்த துறவிகள் .நா.வின் விசாரணைக்குழுவை எதிர்க்கின்றனர். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் .நா. தலையிடக் கூடாதாம். .நா. தீவிர வாதத்துக்கு துணை போகிறதாம். பான்.கீ .மூனுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். ஒரு துறவி மைக்கை பிடித்து கத்திக்கொண்டிருந்தார். இலங்கை என்ன அஹிம்சாவாதமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .

ஆமாம். இவர்கள் எல்லாம் புத்த துறவிகள் தானா. புத்தரின் கொள்கைகள் தான் என்ன என்று தெரியுமா. புத்தருக்கு 'ஸ்பெல்லிங்' தான் தெரியுமா. புத்தரின் பேரை உச்சரிக்க கூட இவர்களுக்கு அருகதை இல்லை.

பிற உயிரை கொள்ளவோ அவமதிக்கவோ கூடாது என்பதே புத்தரின் கொள்கை. ரத்த பூமியில் உள்ள புத்தர் கூட ரத்த வெறி கொண்டவராகதான் இருப்பாரோ.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் போர் என்ற போர்வையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் இழிசெயலை விசாரிக்க கூடாது என்றால், அத்தனை மக்களையும் கொன்றோளித்ததை நியாயம் என்கின்றனரா. புத்த துறவிகள் என்று சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லை.

நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இந்த கொடூர அக்கிரமத்தை விசாரிக்க கூடாது என்று சொல்லும் புத்த துறவிகளை பெற்ற புத்தர் தான் வெட்கி தலை குனிய வேண்டும்.

Monday, June 28, 2010

இன்றைய இந்தியாவின் தேவை...



நேற்று மாதவனின் எவனோ ஒருவன் படம் பார்த்தேன். நம் ஒவ்வொரு குடிமகனின் உள்ளக்கொதிப்புகளே அந்த படம். நம்மை போல ஒரு சாதாரண மனிதன் தன்னை சுற்றி உள்ள மக்களின் லஞ்சம், பேராசை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதையும் பார்த்து கொதிப்படைகிறான்.நம் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால் மனதிற்குள் கோபம் வரும். ஆனால் ஏதும் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்து சென்றுவிடுவோம். மனதிற்குள் ஓங்கி அடிக்கவேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாது.


நான் வேலை செய்த அரசு அலுவலகத்தில் எங்கள் மேலதிகாரி ஒரு பெண். மாதம் 46000 /- சம்பளம் பெறுகிறார். 90 எடை கொண்டிருப்பார். ஒரு நாளைக்கு 10 நிமிடம் தான் வேலை. கையெழுத்திடுவது மட்டும். வாரக்கடைசி இரண்டு நாட்கள் 'ரௌண்ட்ஸ்' கிளம்பி விடுவார் . ஒரு நாளைக்கு ஒரு தெருவிற்கு சென்று வந்தால் 25000/- மிகாமல் பணத்துடன் வருவார் .
அது போக அலுவலகத்திற்கு வருபவர்களிடம் 2000 என்று கறந்து விடுவார் . அங்கு வரும் ஒவ்வொரு தனி நபர்களும் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அந்த அம்மையாரிடம் குழைந்து பேசி கெஞ்சுவார்கள். பார்பதற்கே அருவருப்பாக இருக்கும். காசில்லாத, படிப்பறிவில்லாத ஏழை மக்கள் இவர்கள் கண்களில் பட்டு விட்டால் போதும். அவர்கள் கோபத்தையும் எரிச்சலையும் அந்த அப்பாவிகள் மேல் காட்டுவார்கள். பேச தெரியாமல் அவர்கள் கெஞ்சுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் ஒருவரும் மறந்தும் கூட அந்த அம்மையாரிடம் சண்டையிடவோ, நியாயம் கேட்கவோ மாட்டார்கள். அந்த அதிகாரிகளுக்கு என்னவோ தேவலோகத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் போல நினைப்பு. அந்த மேலதிகாரியை பார்க்கும் போதெல்லாம் கட்டி வைத்து 100 என்ன 1000 கசையடிகள் கொடுக்க வேண்டும் போல இருக்கும்.அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும்.

லஞ்சம் கொடுப்பது தவறு. வாங்குவது தவறு என்று அனைவருக்குமே தெரியும். தெரிந்தே தான் வாங்குகிறார்கள். தெரிந்தே தான் தவறுக்கு துணை போகின்றனர். அவன் செய்கிறான். நாம் செய்தால் என்ன தவறு என்று நியாயம் பேசுகிறார்கள். ஊரில் உலகத்தில் பண்ணாத தவறா நான் செய்கிறேன் என்று வாய் கூசாமல் பேசுகின்றனர்.

எங்கும் தவறுகள் தெரியாமல் நடப்பதில்லை. தெரிந்து தான் அத்தனை அக்கிரமங்களும் அரங்கேறுகின்றன.

வசூல் வியாபாரமாகிவிட்ட பள்ளி நிறுவனங்கள், தங்களிடம் டியுசன் படித்தால்தான் தேர்ச்சி செய்கின்ற ஆசிரியப்பெருமக்கள், கையூட்டு கொடுத்தால் கதை திரைக்கதை எழுதி குற்றாவளிகளுக்கு வக்காலத்து வாங்கும் காவல் துறை , நவீன கொள்ளை கூட்டங்களாக கிளம்பி இருக்கும் திருமண அமைப்பகங்கள், காலை நேர நிகழ்ச்சிகளாகி விட்ட ஜோதிட தனவான்கள், ஓட்டுக்கு 1000 /- என கணக்கிடும் அரசியல் கட்சிகள், மருத்துவ துறை பற்றி கேட்கவே தேவை இல்லை. இன்னும் எத்தனையோ.....

எல்லாவற்றிற்கும் பணமே மூலதனம். தொட்டாதர்கெல்லாம் பணம், பணத்திற்காக வெட்கம் இல்லாமல் ஏமாற்றும் மக்கள் கூட்டம். பணம் கொடுத்தால் கொலை குற்றத்திலிருந்தும் பாதுகாப்பு, பணம் கொடுத்தால் நல்ல மருத்துவம், இப்படி பணமே இவ்வுலகத்தின் ஆதார சக்தி ஆகிவிட்டது. பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம்.

யாரேனும் நியாயம் தர்மம் பேசினால் அவரை வினோத ஜந்துக்கள் போல பார்கிறார்கள். இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுத்தால் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்கிறார்கள். பேசுவதோடு நிறுத்திக்கொள்வது தான் தர்மம் போல. செயலில் காட்டினால் பிழைக்க தெரியாதவன் என்ற பட்டம். இதோ வந்துட்டார் பா காமராஜர் என்று நையாண்டி செய்கின்றனர்.

ஒரு சம்பவம். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் என்னும் ஊரில் கந்து வட்டி கும்பலின் அட்டகாசங்கள் ஏராளம். அப்படி ஒரு குடும்பம் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் பெற்று வட்டி குடுக்க சிரமப்பட்டு உள்ளனர். அந்த வட்டிக்கும்பல் அந்த குடும்பத்தில் இருந்த இளம் பெண்ணை கடத்திக்கொண்டு போய் 4 , 5 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து விட்டார்கள். அதை தட்டி கேட்ட அந்த ஊரின் சி.பி.எம். கட்சி செயலாளர் ஒருவர் போலீசில் சென்று கந்து வட்டி கும்பலை பற்றி புகார் அளித்தார். புகார் செய்த அன்று இரவே அந்த செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி பாடினதை விட கொடுமையான சம்பவம் இது.

110 கோடி இந்தியர்கள் அனைவருமே தலை குனிந்தே செல்கிறோம். அதில் யாரேனும் ஒருவர் தலை நிமிந்தாலும் தலையோடு சேர்த்து அடிக்கிறார்கள். அதையும் மீறி அவன் தலை நிமிர்ந்தால் தலையையே எடுத்து விடுகிறார்கள்.

100 இளைஞர்களை தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆனால் இன்றைய இந்தியாவின் தேவை இளைஞர்கள் அல்ல. ஒரு ஹிட்லர். அதுவும் ப்ரூஸ் லீ யின் உடல்திறனுடன்.

Sunday, June 6, 2010

இறைவனுடன் கேள்வி பதில் ..

இறைவனுடன் கேள்வி பதில் ..


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை ஒன்று.
ஹைத்தி நாட்டின் கொடுமை பற்றி வெளியாகி இருந்தது. கறுப்பின மக்கள் வாழும் அந்த நாட்டில் தொழில் வளம் ஏதும் இல்லை. விவசாயத்திற்கும் சாதகமான நிலங்களும் இல்லை. எங்கும் பசி பட்டினி. இதனால் திருட்டு, கொலை, கொள்ளை அழையா விருந்தாளிகள் அந்நாட்டில்.
ஹைதியின் ஓரிடத்தில் சிறு மக்கள் கூட்டம். அங்கே ஒரு பெண் வெள்ளை களிமண்ணை சிறு உருண்டைகளாக்கி தட்டு போல செய்து வெயிலில் காய வைக்கிறாள். அங்கே வரும் மக்கள் அதை காசு கொடுத்து வாங்கி செல்கிறார்கள். சிலர் கடனாக கொடுக்கும் படியும் கெஞ்சுகிறார்கள். ஆனால் அவள் காசில்லாமல் அருகே வராதீர்கள் என்று அவர்களை விரட்டி விடுகிறாள். இந்த களிமண் தட்டுக்களை வாங்க அங்கே ஒரே போட்ட போட்டி. சில நிமிடங்களில் அவள் கொண்டு வந்த தட்டுக்கள் அனைத்தும் விற்றுதீர்ந்து விடுகின்றன.

அதை வாங்கி சென்ற ஒரு பெண் அதை தன் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறாள். மிகுந்த பசியால் இருந்த அந்த குழந்தை வேகவேகமாக அதை சாப்பிடுகிறது. அவள் தன் இன்னொரு குழந்தைக்கும் அந்த களிமண்ணை கொடுக்கிறாள். அதுவும் சாதாரணமாக அதை சாப்பிடுகிறது. அதற்க்கு ஒரு 4 அல்லது 5 வயது இருக்கலாம்.எலும்பும் தோலுமாக அந்த குழந்தைகள் பார்க்கவே பரிதாபமாக இருகின்றன. இப்படி அந்த குடும்பம் உட்பட அந்த நாட்டில் நிறைய மக்கள் உணவின்றி இப்படி இந்த களிமண்ணை உணவாக சாப்பிடுகின்றனர்.

அந்த பெண் சொல்கிறாள். எங்களுக்கு இங்கு உணவு ஏதும் கிடைப்பதில்லை. பசியால் நாங்கள் தினம் தினம் செத்துக்கொண்டு தான் இருக்கிறோம். இக்குழந்தைகள் பசியால் துடிப்பதை பார்க்க சகிப்பதில்லை. ஆரம்பத்தில் இதை சாப்பிடுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பழக்கிகொண்டோம். இதனால் பசியை கொஞ்சமாவது தணிக்க முடிகிறதல்லவா. ஆனால் இதை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மலச்சிக்கல் , தொண்டை மற்றும் வயிற்றுக் கோளாறால் இறந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதை உணவாகவே கொண்டுதான் வாழ்கிறார்கள்.

இந்த கட்டுரையை படித்து பிறகு சாப்பிடுவதே கஷ்டமாகியது. என்ன கொடுமை. மனிதர்களாகிய நாம் அனைவரும் பூமி எனும் ஒரே கிரகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

ஒரு பகுதியில் மிகுதியான பண வசதிகளால் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 5 ஸ்டார் 7 ஸ்டார் என கும்மாளமிடும் மக்கள். ஒரு லட்சத்திற்கு கூட காலணிகள் வாங்கும் மனிதர்கள் இருகிறார்கள்.
அதே மனிதர்களோடு களிமண்ணை தின்று செத்துக் கொண்டும் மனிதர்கள் இருகிறார்கள். ஒரே இனத்தில் எத்தனை வேற்றுமை.

நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள். சர்சுகள். மசூதிகள். பணத்தில் குளிப்பவனும் செல்கிறான். அப்பாவி ஏழையும் செல்கின்றான். அவனும் மனமார வேண்டுகிறான். ஆனால் அகிரமக்காரர்களே இப்பூமியில் சுவீகாரமாக வாழ்கின்றனர். அப்பாவி ஏழை மக்கள் மேலும் மேலும் பிச்சைக்காரர்கள் ஆகிக் கொண்டுதான் இருகின்றனர்.

யாரை குற்றம் சொல்வது. கண்டும் காணாமல் இருப்பதே மனித வர்கத்தின் குணம். மனித இனத்தை படைத்த இறைவனின் குற்றமா?.

ஆம். வாழ்கை என்றால் என்ன என்று சொல்லித்தராமலேயே மனித இனத்தை படைத்தது விட்டான்.

வாழ்கை என்பது தர்மம். எல்லோருக்கும் சமதர்மம். பேதங்களற்ற அனுபவம். இதுதான் இறைவன் படைத்த வாழ்கை. எல்லா மதங்களின் கூற்று.

ஆனால் இந்த தர்மம் இப்போது உலகத்தில் எங்கேயும் இல்லை. நம் முன்னோர்களும் பார்த்ததாக தெரியவில்லை. சமம் , தர்மம் இவை இந்த உலகத்தில் இல்லாத கற்பனை.

உண்மை சொல்வதே தர்மம் என்றால் அந்த உண்மை சொல்கிற மனிதனை இனிதான் இறைவன் படைக்க வேண்டும்.

வாழ்கை இன்பங்களை தனது எல்லைக்குள் அடக்கி வைத்துக்கொள்வதே மனித தர்மமாக நடந்து கொண்டிருக்கிறது.

கண்ணதாசன் இறைவனிடம் கேட்கிறார்.
''நீ படைத்த உலகத்தில் மனிதர்கள் இவ்வளவு அல்லல்படுகிறார்களே. நீ ஏன் அவர்களை காத்து இரட்சிக்காமல் வேடிக்கை பார்க்கிறாய்?''

இறைவன் சொல்கிறான்
''உலகத்திற்கு நான் தர வேண்டியது ஏதும் பாக்கி இல்லை.''
நூலை கொடுத்து விட்டேன். ஆடையை பின்னிகொள்ள வேண்டியது அவன் பொறுப்பு.
பாலை கொடுத்து விட்டேன். தயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் கடமை.
மழையை கொடுத்து விட்டேன்.
நிலத்தை கொடுத்து விட்டேன்
விதையை கொடுத்து விட்டேன்.
அதை பயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு.
பெண்ணையும் ஆணையும் நான் படித்தேனே தவிர பிள்ளைகளை நானா படைத்தேன் .
மூலம் ஒன்றை கொண்டு விளைவுகளை தேடிக்கொள்ள வேண்டியவர்கள் அவர்களே.!
எந்த ரகசியம் எந்த இடத்தில தோன்றி எந்த இடத்தில முடிகிறதென்பதை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் அவர்களே
படைப்பின் நோக்கங்கள் படைப்பின் போதே தெளிவாக்கப்பட்டு விட்டன. தினமும் பாடஞ்சொல்லிக் கொண்டிருப்பது ஏன் வேலையல்ல''

கண்ணதாசன் கேட்கிறார்.
''பிறகு பூமியில் உனக்கெதற்கு ஆலயம்?''

இறைவன் சொல்கிறான்
''நான் படைத்த பொருகளில் ஆலயம் என்று ஒன்றில்லை. உனக்கு தெரியுமா?
தங்கள் பயத்தையும் நடுக்கத்தையும் தங்கள் வீட்டிற்குள்ளேயே குவித்துக்கொள்ள முடியாமல் அவற்றை ஒப்படைப்பதற்காக ஓரிடத்தை மனிதர்கள் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
அச்சங்களும் ஐயங்களும் இன்றியே உலகத்தின் முதல் படைப்பை நான் படைத்தேன்.
மனிதர்கள் தாங்களே படைத்துக்கொண்ட பொருட்களில் அவையும் சேர்த்து விட்டன. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''.


கண்ணதாசன்..
''சர்வ வல்லமையுள்ளவன் நீ என்கிறார்களே
அந்த வல்லமை உனக்கில்லைய?''

இறைவன்
''இல்லை. நிச்சயமாக இல்லை.
என்னை சர்வ வல்லமையுள்ளவன் என்று சொன்னவன் மூடன்.
ஒருவனே சர்வ சக்திகளும் படைத்தவனாக இருந்தால் உங்களுக்கெல்லாம் உணர்சிகள் எதற்கு?.

உணவை கையிலெடுத்து நான் ஊட்டியதில்லை.
கை எடுப்பதற்கும் வாய் உண்பதற்கும் என்று நீங்களே அறிந்து வைத்திருக்கும் போது மற்ற உணர்ச்சிகளும் உங்களுக்கு இருக்கும் போது விளைவுகளை கண்டுகொள்வது மட்டும் என் கடமையா? விளைவுகளை கண்டுகொள்வது உங்கள் கடமையா? ''

எனக்கு தோன்றியது. இறைவன் சொல்வது உண்மை தான்.

அவன் படைத்த உலகில் ஐந்தறிவு விலங்கினங்கள் ஏதும் பசியால் இறப்பதில்லை.

பகுத்தறிவு படைத்த மனிதன் தான் பசி பட்டினியால் சாகிறான்.

நிலம், நீர், காற்று வானம் என எல்லாவற்றையும் இறைவன் பொதுவாகவே படைத்திருக்கிறான். விலங்கினங்கள் இந்த இயற்கை வளங்களை ஒற்றுமையாக அனுபவிக்கின்றன.
ஆறறிவு மனிதன் பசிக்கொடுமையால் மாள்கிறான்.
இதற்கு காரணம் என்ன?

மனிதர்களின் பேராசையே காரணம்.
எல்லா வளங்களையும் தான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்கிற பேராசை. இந்த பேராசையே மனிதர்களை படுகுழியில் தள்ளுகிறது. பிறகு அதன் விளைவை நாம் தான் அனுபவித்தாக வேண்டும்.

எந்த விலங்கினங்களும் பூமியை கூறு போட்டு எல்லைகளை வைத்துக்கொள்ளவில்லை.

எந்த விலங்கினங்களும் தன் 27 அல்லது அதற்கு மேலான தலைமுறைகளுக்கும் சேமித்து வைத்துகொள்வதில்லை. சுவிஸ் வங்கியில் கணக்கும் இருப்பதில்லை.

அவைகளின் குடில்களில் 1500 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கமும் வைத்திருப்பதில்லை.

இப்படி செல்வமும் வளமும் சில மனிதர்களின் வங்கிகளிலும் வீடுகளிலும் பூட்டி வைத்துக்கொண்டால் எங்கே இருக்கும் சம தர்மம்?
பிறகு ஒரு பக்கத்தில் பட்டினி சாவும், மற்றொரு பக்கத்தில் கும்மாளமும் நடைபெறத்தான் செய்யும்.

சுகமாக வாழும் மனிதனுக்கு பசி பட்டினி பற்றி என்ன தெரியப்போகிறது.

ஆனால் கோடீஸ்வரன் மரணத்திற்கு லஞ்சம் கொடுக்கமுடியாது. அதை நினைத்தாவது இல்லாதவர்களுக்கு உறங்கிக்கொண்டிரும் செல்வதை செலவழிக்கலாம். எந்த செல்வமும் கொடுக்காத மன நிறைவு இதன் மூலம் பலனாகப் பெறலாம்.